ஆறா வடு – ரமணீதரன் கந்தையா

1. புலிசார்பு, சிங்கம் சாய்வு என்றில்லாமல் எல்லாவற்றையும் நுள்ளியிருக்கிற புதினம்….

2. எள்ளல் + துள்ளல் நடை [ஷோபா சக்தியிடம் இதே நளினமும் திறமையும் உண்டு; சொல்லப்போனால், முத்துலிங்கத்திடம் உண்டு (துள்ளல் தவிர்த்து… மயிலாப்பூர்மிடில்கிளாஸுக்கான வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்க்காத மசாலாவுடன்); யோகநாதன் முரளியிடம் உண்டு… ஆனால், ஷோபாசக்தி+யோ.கர்ணன் இடம் சார்பும் சாய்வும் தெளிவாகத் தெரிந்து, சில வாசகர்களை முழுமையாகச் சேராமல் தள்ளி நிற்கச் செய்யும். முத்துலிங்கத்திடம் எப்போதும் சொந்தப்பெருமையின் சாயலே வெளிப்படும். சயந்தனிடம் இச்சார்தல் சாய்தல் இல்லையென்றில்லை; ஆனால், துருத்திக்கொண்டு தெரிவதுபோல, சுயசாய்வின் எள்ளல் சிறிதாக்கப்படுவதில்லை.]…..

3. வாசகர்களுக்கு விளக்கவுரை சொல்வதுபோல, “இப்படியாகப் போனது. அதனால், இவ்வண்ணம் நடந்தது. ஆகவே, இதைச் செய்யவேண்டி வந்தது” எனும் பெருநிலைவழிகாட்டலில்லை; “இப்படியாகப்போனது; இதைச்செய்யவேண்டி வந்தது” என்கிற மாதிரியாகத் தடைதாண்டி ஓட்டமே சயந்தனின் கதை நடை. வாசகர்களைச் சூப்பிமுட்டாய்ச்சிறுவர்களாகவோ பார்பிப்பொம்மைச்சிறுமிகளாகவோ கருதிக்கொள்வதில்லை. சுருங்கச்சொன்னால், வேண்டுமென்றே “சாயம்போக்கிக் கிழித்து” விற்கும் புது ஜீன்ஸின் தன்மை கொண்ட நடை எனலாம். …..

4. அணிந்துரை, புனைமாலை, பொன்னாடை போன்ற இன்னோரன்ன தமிழிலக்கிய எச்சங்கள் கூட்டிச்சேர்த்து மணக்காத ஒருபக்கத்தன்னுரையுடன் மட்டுமேயான நூல். நிம்மதி & தெளிவு……

5. காலவொழுக்கிலே சேராது முன்னுக்கு மாறாகப் பின்னாக அமைந்திருக்கும்-அல்ல, திட்டமிட்டே அமைத்திருக்கும்- எதேச்சைத்தனத்திலே, எவ்வத்தியாயமும் தனிச்சிறுகதை; ஆக, இயல்பான முன் அத்தியாயமும் வலிந்து சேர்த்ததாகத் தோன்றும் இறுதி அத்தியாயமும்மட்டுமே மட்டை அட்டை போல, மிகுதி அத்தியாயங்களை அழுத்திச் சிறுநூல்கொண்டு கோர்த்துப் பிடித்து ஒரு முழுப்புதினமாக்கிக் காட்டுகின்றது…….

6. பெரிதும் பேசப்பட மறந்த, அல்லது பேசாமல் மறைத்த நிகழ்வுகளைப் பேசுகின்றது; இந்திய அமேதிகாக்கும் படை அல்லது IPKF (இந்திய பிள்ளை கொடுக்கும் படை) ஆசீர்வாதத்துடன் வடகிழக்கிலே வரதராஜப்பெருமாள்கீழ் தயான் ஜயதிலக அமைச்சராகவிருந்த ஆட்சியும் மாற்றியக்கங்களும் சிறுபிள்ளைகளை வலிந்து சேர்த்த தமிழ்த்தேசிய இராணுவமும் மாற்றாக தாமழித்த டெலோ (தாசைப் போட்ட பொபி, சிறிசபாரத்தினத்திலே வெறுத்துவிலகிய டெலோ) உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்ட புலிகளும் சுட்டிக்காட்டப்பட்டதில்லை. இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.

இதுபோலவே, இப்படியாக செருப்புத்திருடர்கள், தலையாட்டிமுகமூடிகளாலே தமிழ்த்தேசிய இராணுவத்துள்ளே வலிந்து சேர்க்கப்பட்ட அரசியலேசாராத சாதி ஒழித்த காதலும் சோலாப்பூர் செருப்புமே கவனமாயிருந்த ஒரே மாதிரியான அப்பாவிகளும் எதுவிதமாகப் புலிகளாலே ஒருவர் துரோகியெனப் போட்டுத் தள்ளப்பட்டதும் மற்றவர் தன் முன்னைய தாடிப்பொறுப்பாளர்களின் வண்டவாளங்களைச் சுட்டிக்காட்டப் போராளியாக உள்வாங்கப்பட்டதையும் சொல்லலாம். இது காலத்தாலே மிக முக்கியமானதொன்று;

தன் பிள்ளை எதுக்கு வால்விலங்கு இயக்கத்துக்குப் போகவில்லை என்று பிறர் பிள்ளைகளைப் போக கவிதை வடித்தவனெல்லாம் மனிதநேயக்கட்டுரையெழுத, வயிற்றுப்பிள்ளை, பிள்ளைத்தாய்ச்சி, பெருங்கிழம் எல்லாவற்றையும் வால்விலங்கு பேரிலே போட்டுத் தள்ளியதுக்கு நன்றிகூறி வாள்விலங்குப்பயிற்சியாளன்களோடு  ‘போட்டோஒப்’ கொடுத்த யோக்கியவாழ்விலங்குமருத்துவனெல்லாம் அதைப் பதிவு செய்கின்ற அயோக்கியத்தனமாக காலமிதிலே இதுபோன்ற கதைப்பதிவுக்கூறுகள், கீற்றுகள் மிகவும் முக்கியமாகின்றன…..