அஷேரா! உடல் உள ஏக்கங்களின் தேடல் – நிலாந்தி சசிகுமார்

சயந்தனின் படைப்புகளில் ஆறாவடு, ஆதிரை வரிசையில் இன்று அஷேரா. இலங்கைக்கு சம்பந்தமற்ற ஒரு தலைப்பில் போருக்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டமைந்த புனைவுகளின் செறிவு. அஷேராவின் வரலாற்றுக்கும் உலகத்தின் அனைத்துப் பெண்களின் கதைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அந்தவகையில் தான் நாவலை நாம் நோக்க வேண்டும். அதே சமயம் நாவலின் நகர்வு ஈழப்போரின் தாக்கத்தின் விளைவுகளை மீட்டிச் சென்றதையும் கொஞ்சம் கவனிக்கவே வேண்டும். இலங்கையில் வாழ்பவர்களும், புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் தமது படைப்புகளில் ஈழப் போர் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த பதிவுகளை வலிந்து சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதை மறுக்க முடியாதுள்ளது. இதனை பல வாசிப்பினூடாக உணர்ந்து கொண்டுள்ளேன். இதில் ஏதும் அரசியல் நோக்கங்களோ அல்லது இலாப நோக்கங்களோ இருக்கக் கூடும் என்ற பலரது கருத்துக்களை செவிமடுத்திருந்த போதும் அவ்வாறாக வெளி வரும் படைப்புகளை வாசிக்கத் தவறுவதில்லை. வாசிக்கக் கிடைத்த புலம்பெயர் இலக்கியவாதிகளின் படைப்புகளில் அதிக நெருக்கம் இருப்பதாக உணர்ந்தேன். அதற்கு பெரும்பாலான புலம்பெயர் தேசத்து இலங்கை வாசிகள் யுத்தத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுச் சென்றதன் தாக்கமாகக் கூட இருக்கலாம். ஒரு வகையில் நோக்கும் போது பிறந்த இடம், இயக்கங்களின் சம்பந்தம், இடம்பெயர்ந்த வழி, நெஞ்சோரம் பட்ட வலி என அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றே தோன்றியது. அனுபவங்களை புனைவுகளுடன் இணைத்து நாவலாக உருவேற்றும் போது அதில் சுவாரஸ்யமான பல அடுக்குகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் அவற்றை ஒழுங்கமைத்து கொண்டு செல்லும் யுக்தியே படைப்பை நிலைக்கச் செய்கிறது எனலாம்.

அந்தவகையில் சயந்தனின் அஷேரா பல விடயங்களை முன்வைத்து புனையப்பட்டுள்ளது. இயக்கங்களின் தோற்றமும் நோக்கமும் ஒன்றாக ஒரே காலத்துடன் இருந்தாலும் அவை பயணித்த பாதைகளும் பயன்படுத்திய யுக்திகளும் வெவ்வேறானவை. ஒவ்வொரு போராட்டங்களிலும் நாம் பார்ப்பது இத்தகைய உட்பூசல்களும், கருத்து முரண்பாடுகளும்,யார் கை ஓங்கி நிற்றல் என்ற எண்ணப்பாடுமேயாகும். முப்பது வருடங்களுக்கு முன்னர் தமிழீழத்தை பெற எத்தனையோ இயக்கங்கள் தோன்றிய போதும் அதனைப் பெற முடியாததற்கான காரணம் அபத்தமானது. அதை நினைத்து வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா? என்று தெரியவில்லை. அதேவேளை இயக்கங்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களும் உட்பூசல்களும் ஒருகட்டத்தில் சொந்த இனத்தையும் சகோதரங்களையும் கொலை செய்யும் அளவில் வன்முறையையும், வக்கிரத்தையும் விதைத்துச் சென்றமையைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.

பேரினவாத சிங்கள இராணுவம் கொன்ற தமிழ் மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இயக்கங்களின் பெயரில் நடைபெற்ற கொலைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் மன்னிக்க முடியாத ஈனச் செயலாகவே அவை பார்க்கப் பட வேண்டியது.

டொமினிக் ஜீவா ஒரு பேட்டியில் இயக்கங்கள் குறித்தான கேள்வியின் போது” சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” எனச் சொன்னதாக எங்கோ படித்த நினைவு. ஒவ்வொரு படைப்புகளிலும் இயக்கங்கள் குறித்தான ஒரு சில பதிவுகளை வாசிக்கின்ற போது அவர் சொன்னது என் நினைவில் வந்து போவது தற்செயலான செயலாகத் தெரியவில்லை. ஒரு சமயம் தமிழ் ஈழத்தாகம் நம் இளைஞர்களை வன்முறையாளர்களாக உருவாக்கி விட்டதோ என்றும், சகோதரத்துவத்தை பலி கொடுத்து விட்டதோ என்றும், பல இளைஞர்களின் எதிர்காலத்தை புலம் பெயர் தேசங்களில் அநாதரவாகக் கைவிட்டதோ என்றும் தோன்றியது.

இந்நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் ஈழப் போரின் தாக்கத்திற்கு உட்பட்டிருப்பதைக் காணலாம். இயக்கங்கள் உருவாக உதவிய புலமே பின்னர் இயக்கத்தில் இருந்தவர்களுக்கும், இயக்கத்தில் இருந்து தலைமறைவாக வாழ விரும்பியவர்களுக்கும், அகதி அந்தஸ்த்துக் கொடுத்து வாழ வழிசெய்தது. மண் சொந்தமானால் பல இன்னல்கள் விலகும் எனக் கனவு கண்டவர்கள் கூட சொந்த மண்ணில் வாழ முடியாது போன சாபக்கேட்டை நினைக்கையில் மனம் கொஞ்சம் கனக்கத்தான் செய்தது. சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் தமிழ் ஈழம் மலர்ந்தால் சீதனம் கொடுக்கத் தேவையில்லை என்று தனது இரு அக்காக்களுக்காக இயக்கத்திற்கு வந்திருப்பான். அருள் குமரன் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்டு அந்தப் பயத்தில் இயக்கத்தில் சேர்ந்து கொள்வான். இவ்வாறாக அற்ப காரணங்களுடன் இயக்கத்தை நாடியோர் பல அற்புதமான செயல்களை செய்து விட்டு சென்றதையும் இங்கு பதிவு பண்ணியுள்ளார். தாம் இயக்கத்தில் இருந்த நாட்களில் இருந்த இயக்கத்திற்கு விசுவாசமாகவும் அதே வேளை ஏனைய இயக்கத்தவர்களை ஜென்ம விரோதிகளைப் போல கொலை செய்ததையும் நினைத்து குற்றவுணர்வு மேலிட குமுறுபவர்களும், இயக்கச் செயற்பாடுகளில் அசகாய சூரத்தனத்தைக் காட்டியவர்களின் பெருமையையும் அங்கங்கே பதிவிட்ட படி நகர்கிறது நாவல். புலம் பெயர் தேசத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கும் அருள்குமரனும் அற்புதமும் இலங்கையில் இயக்கத்து உறுப்பினர்களாக சந்தித்திருந்தால் அவர்களில் யார் யாரை கொன்றிருப்பரோ என எண்ணத் தோன்றியது. ஈழத்தில் தொலைத்த சகோதரத்துவத்தை புலத்தில் தேடும் மனிதர்களாக அவர்கள் தெரிந்தார்கள். அதேவேளை, பண்ணையார் போலவும், அடைக்கலம் கொடுத்த கிழவி போலவும் யாராவது தமிழ் ஈழத்தைப் பெற்றுக் கொடுத்தால் போதும் என்று அனைத்து இயக்கத்தவர்களையும் ஆதரித்த மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தானே. ஈழப்போரின் மற்றுமொரு பரிமாணத்தை இந்நாவல் காட்டிச் செல்கிறது. ஆம், போருக்காக தமது குடும்பம், கடமை, ஆசை, காதல், இளமை, காமம் என அத்தனையையும் விலையாகக் கொடுத்தவர்களின் வாழ்க்கையைத் தான். புலத்தில் தேடிக் களைத்துப் போனவர்களின் சாட்சிகளாக இங்கு அருள்குமரனும் அற்புதமும் உருவப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நாவலின் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே இலட்சிய புருஷர்களாகவோ அல்லது இலக்கிய மாந்தராகவோ இல்லாமல் யதார்த்தங்களுள் ஒன்றிப் போனவர்களாக இருப்பது சிறப்புத்தான் ஆனால் யதார்த்தம் என்ற பெயரில் அளவுக்கதிகமாக தூசணங்களை அள்ளித் தெளித்திருந்தமை கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியது. எழுத்தாளர்கள் தங்களது எழுத்துக்களின் ஊடாக வசவுகளை காவிச் செல்வதை தவிர்க்கலாம் எனத் தோன்றியது. குறிப்பாக பெண்களின் உறுப்புகள், பாலியல் சார்ந்த தூசண வசவுகளை இல்லாதொழிக்க வேண்டும் என்று போராடுபவர்களின் மத்தியில் இவ்விதமாக சிறந்த எழுத்தாளர்களால் எதிர்கால சந்ததியினருக்கு போய்ச் சேர்வதைத் தான் ஏற்க முடியவில்லை. இவ்விதமான எழுத்துக்களை ஆதிரை மற்றும் ஆறாவடு எழுதிய எழுத்தாளரிடம் எதிர்பார்க்காததால் ரொம்பவே வருத்தப்பட்டேன். அத்துடன் அங்கங்கு உவமைப்படுத்தவும் பெண் உறுப்புகள் பயன்படுத்தப்பட்டமையும் வெறுப்பை ஏற்படுத்தின. பெண்களின் உறுப்புகளும், பாலியல் சார் தூசணங்களும் ஒரு சிலருக்கு கிளர்ச்சியைத் தூண்டலாம் அதனால் அவ்விதமான வாசகர்களிலும் இவற்றை வெறுக்கும் வாசகர்கள் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

அவை தவிர அஷேரா மிக நுணுக்கமாக எழுத்தப்பட்ட யதார்த்தங்களுடன் கூடிய புனைவு. காமம் காதலை விட அதிகம் நுகரப்பட்ட ஒன்று. அதற்கு பால் பேதம் கற்பித்து ஒருவருக்கு ஒரு சட்டம் இயற்றி தண்டிக்கும் இச்சமூகத்தின் கன்னத்தில் ஓங்கி அறைய முயற்சித்திருக்கிறார். காமப் பசியை போக்கிக் கொள்ள பெண்கள் தேர்ந்தெடுக்கும் வழி வகைகளையும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் சமூகத்தினால் திணிக்கப்பட்டவையே என்பதை மறுக்க முடியாது. அருள்குமரனின் தாய் இறப்பதற்கு முன் சொன்ன வார்த்தைகளில் தொக்கி நின்ற வாழ வேண்டும் என்ற ஏக்கம் , சமூகத்தின் மீதான பயத்தில் காணாமல் ஆக்கப்பட்டது. அதேவேளை ஆண்கள் தமது உடற்பசிக்கு பெண்களின் இயலாமையையும், போக்கிடமில்லாத நிலையையும், தனித்திருக்கும் சூழலையும் வெகு இலகுவாக பயன்படுத்திக் கொள்வதையும் அதனால் சமூகத்தின் பலிக்கு ஆளாகி அப்பெண் இறந்தாலும் எவ்விதத்திலும் தமக்கு பலி நேராமல் தம்மைக் காத்துக் கொள்வதிலும் கவனமாக இருப்பதை அங்கங்கு குறிப்பிடத் தவறவில்லை.

அனுதாபம் தேடியும் அதிகாரத்தைப் பிரயோகித்தும் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும் இந்நாவலில் காணக்கூடியதாக இருந்தது. அற்புதம் தன் காமத்திற்கு இரவில் பெண்களை ஆபாசமாகக் காட்டும் டிவி நிகழ்வுகளையும், ஒரு செம்மறி ஆட்டையும் பயன் படுத்தியதை சாதாரணமாய் எடுத்துக் கொண்ட அருள் குமரனால் அபர்ணாவை புரிந்த கொள்ள முடியவில்லை என்பது சமூக வளர்ப்பு. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் அருள்குமரனை காதலிப்பதாக அபர்ணா சொல்லாத போதும் அவள் தனித்திருப்பதை பயன்படுத்த நினைத்த அருள்குமரனின் ஆண் மனம் அவள் தன் கணவனுடன் சேர்வதை விரும்பாமலும் அதேவேளை கணவனுடன் அவள் சேர்வதை ஒரு தவறான செயலாகவும் ஒவ்வொரு முறையும் அவளை தூசண வார்த்தைகளால் பேசுவதும் அருவருக்க வைத்த செயலாக இருந்தது. கணவனிடம் அடிவாங்காமல் தப்பிக்க அவனது பலவீனமான காமத்தை அவள் பயன்படுத்தியதை அருள்குமரன் கொச்சைப் படுத்திப் பேசியது; தன் கணவனிடம் கூட ஒரு பெண் காமத்தை வெளிப்படுத்துவது தவறு என்பதைத் தானே குறிக்கிறது. அவ்வாறெனில், இவ்வளவு காலமும் அவனது தாயை அவன் நிச்சயமாக தவறானவளாகவே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பது உறுதியாகிறது.

இவ்வாறானவர்களால் பாலியல் சுதந்திரம் என்பது ஆண்களுக்கு மட்டுமேயானது பெண்களுக்கு அது இல்லை என்பதாக சமூகத்தில் கடத்தப்படுவதை தவிர்க்க முடியாது.

எந்தவொரு ஆணிடமும் பெண்கள் தமது அந்தரங்கங்களைப் பகிர முடியாது. ஏனெனில் அதன் அர்த்தமும் பொருளும் அவளை அன்றி எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதை அபர்ணா மற்றும் அருள்குமரனின் கலந்துரையாடல் உணர்த்தியது. இயல்பாகவும் அக்கறையுடனும் உரையாடும் பெண்களை தவறாகவும் தம்மீது காதல் வயப்பட்டவர்களாகவும் நினைத்து ஏங்குவதும் பின் அவ்வாறு இல்லை என்றான போது அவர்களை அவதூறாகப் பேசுவதும் இன்றளவும் சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டே உள்ளது.

எது எப்படியோ சயந்தனின் நாவல்களில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. அதே வேளை உச்சபட்ச புனைவுகளைக் கொண்டு இறுதியில் கதையின் கதாபாத்திரத்தில் இருந்து சாமர்த்தியமாக தன்னை விடுவித்துக் கொண்டார்.