அந்நிய நிலத்தின் மௌன ஓலம் – வேலு மாலயன்

புலம்பெயர் படைப்பாளர்களில் ஆறாவடு மற்றும் ஆதிரை நாவல்கள் வழியே தமிழ் இலக்கிய பரப்பில் மிகுந்த கவனத்தை சம்பாதித்தவர் எழுத்தாளர் சயந்தன் அவர்கள்.
சயந்தனின் முந்தைய இரண்டு நாவல்களிலிருந்த போர்,அரசியல் ஆகியவற்றிலிருந்து விலகி எழுதப்பட்டுள்ளது புதிய நாவலான அஷேரா.

ஈழத்தில் தமிழராய் பிறந்து இனப் போரின் வலி மற்றும் துயரில் உழண்ட ஒருவர் அவரது படைப்புகளில் அந்த வலியின் துயரை,உணர்ச்சிகள் மேலோங்க பதிவு செய்வது என்பது எப்போதும் தவிர்க்க முடியாதது.

ஆனால் சயந்தனின் படைப்புகள் உணர்ச்சிகளின் வெளியிலிருது ஈழத் தமிழர்களின் துயரை பேசுபவை.

ஈழ மண்ணில் தமிழீழம் மலர போராடிய ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே என்பது இலங்கை தாண்டிய மற்ற நாட்டவர்களின் பொது எண்ணம்.

ஆனால் தமிழீழம் மலர ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் தோன்றின எனவும் அந்த இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்கள்,அரசியல்,சண்டைகளை சில மனிதர்களின் கதைகள் வழியே அஷேரா நாவலில் பதிவு செய்கிறார் சயந்தன்.

புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய அருள் குமரன்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) இயக்கத்திலிருந்து வெளியேறிய அற்புதம் ஆகியோரின் மனம் எழுப்பும் குற்ற உணர்ச்சி,காமம், காழ்ப்பு,இழந்த தாய் நில தவிப்பு,அந்நிய மண்ணில் அகதியாய் வாழ்தலின் தவிப்பை நாவலாக்கியுள்ளார் சயந்தன்.

காமம் போரினும் கொடியது. அருள்குமரன் தன்னுடைய பால்ய வயதில் தன்னுடைய அம்மாவுக்கும்,தன்னுடைய அம்மாவை விட ஐந்து வயது இளையவனான சரவணபவனுக்கும் உள்ள தொடர்பும், சரவணபவனுக்கு திருமணம் ஆனப் பிறகு அரளி விதையை அரைத்து குடித்து இறந்துபோகும் அவனுடைய அம்மாவின் முகமும் அவனுக்குள் ஒரு நிரந்தர துயராய் உறைந்து விடுகிறது.

அருள்குமரன் பதின்ம வயதில் தனது வீட்டில் வந்து தங்கும் அமலி அக்காவின் மீது காமம் கொள்கிறான். அமலி அக்காவிடமிருந்து கிளர்ந்து வரும் பெயர் அண்ட் லவ்லியின் வாசனை அவனுக்குள் இருக்கும் காமத்தை ஊதிப் பெருக்குகிறது.ஒரு கட்டத்தில் அவன் அமலி அக்காவின் மீது படர்ந்து அவளுள் மூழ்கி விடுகிறான்.
டியூசன் போகும் போது அருள்குமரனுக்கு ஆராதனாவுடன் காதல் ஏற்படுகிறது.

ஆராதனா வீட்டில் அவளுடைய அப்பா அம்மா இல்லாத போது அவளைச் சந்திக்கப் போகும் அருள்குமரன் அன்றைக்கு அவள் பரிசளித்த காமம் கோவிலின் நிவேதனம் போல் இருந்தது என்கிறான்.

ஒரு இரவில் மீண்டும் இருள் பசையிலிருந்து பெயர் அண்ட் லவ்லியின் வாசனை கிளர்ந்துவரும் போது ஆராதனாவின் நினைவை இழுத்து வருகிறான்.அவளுடைய கூரிய பார்வை, அன்பான அதிகாரம், வெடுக்கென்ற கோபம், கோவிலின் நிவேதனம் போன்ற காமம்… ம்கூம் பெயர் அண்ட் லவ்லி மணத்துக் கொண்டேயிருப்பதால் சுயகைமைதுனம் செய்கிறான்-
காமம் அவன் மனதை அலைக்கழிப்பதால் அன்று பின்னிரவு தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணி மறுநாள் காலை முதல் ஆளாக புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொள்கிறான்.
மனிதர்களின் தனிமையையும் துயரையும் காமம் மலைப்பாம்பு போல விழுங்கி விடுகிறது.

அருள்குமரன் அம்மா,புலிகள் இயக்கத்தில் கணவனை இழந்து இயக்கப்பெடியன்களிடம் தவறாகப் பழகும் புஷ்கலா தேவி,இரட்டை குழந்தைக்கு தாயான காபூலைச் சேர்ந்த ஷர்மினா ஆகியோரின் தனிமை மற்றும் துயருக்குள் காமம் நுழைகிறது. ஒரு கட்டத்தில் அருள்குமரன் தன் அம்மாவைப்புரிந்து கொள்ளுகிறான்.

அனோஜன் பால கிருஷ்ணன் எழுதிய ஆடையுற்ற நிர்வாணம் என்ற சிறுகதையில் கதைசொல்லியின் அக்கா தன் கணவனை இழந்த பிறகு ஒரு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்தப் பெண்ணின் அப்பா புலம்புவார். எவ்வளவு துயர், தனிமை இருந்தாலும் காமம் இந்த உடலின் அடிப்படையாய் இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் அருள்குமரன் அபர்ணா என்ற பெண்ணுடன் நட்புகொள்கிறான்.

ஆராதனா என் அம்மாவாக இருந்திருக்கலாம் என அபர்ணாவிடம் கூறுகிறான் அருள்குமரன்.

ஆப்கான் தாலிபான்களால் துரத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் குடியேறி மோர்கார்த்தன் சமர் நினைவிடத்திலிருந்து நஜிபுல்லா குதித்து தற்கொலை செய்துகொள்கிறான்.

புலிகள் இயக்கத்தில் சேர்ந்து மடியும் சிங்களப் பெண் அவந்தி என நிறைய மனித கதாப்பாத்திர கதைகளின் பின்னலாக நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண் தன் இழப்பை தற்காலிகமாய் மறக்கச் செய்ய பெண் உடனான காமத்தை நாடுகிறான். அப்படித்தான் நாவலில்
அற்புதமும், நஜிபுல்லாவும் தங்களின் தாய்நில பிரிவை,துயரை வேசைகளின் தொடை இடுக்கில் போக்கிக்கொள்ள முயல்கிறார்கள்.

தாய் நிலங்களை இழந்து அகதியாய் பல்வேறு நிலங்களில் அலையும் மனிதர்களின் அகவயமான கதைகளின் பிரதி அஷேரா.
துப்பாக்கி சத்தத்துடனும்,ஷெல் சத்தத்துடனும் ஈழ உயிர்களின் ஓலங்களை ஆதிரை நாவல் பதிவு செய்தது என்றால்,உலகெங்கும் அகதியாய் அந்நிய நிலத்தில் வாழ்பவர்களின் மெளன ஓலத்தை அஷேரா நாவல் பதிவு செய்கிறது