புத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்

05 ஜூன் 1991

ரியிருட்டு. தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை  வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டுநரம்பை நசித்துக்கொண்டிருந்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க, முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். குண்டும் குழியுமாய் சிதிலமான தரையில் கிளை பிரியும் தாரையென மூத்திரம் மற்றுமொரு பாதையில் என்னைத் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். விரல்களில் பிடுங்கிய நகக் காயங்களிலிருந்து நோவு கிளர்ந்தது. நீரில் மெதுவாக முங்குவதைப்போல வியர்வையும் மூத்திரமும் கலந்த நாற்றத்தில் புலன்கள் இயல்படையலாயின. இருளை அளைந்தேன். இடது கண் ஒரு கொப்புளம் போல வீங்கிக்கிடந்தது. விழிமடலைத் திறக்கும்போது  பிளேற்றால் தோலை வெட்டிப்பிளப்பதைப்போன்ற வலி. ஒன்றரைப் பார்வையில்  கம்பிகள் கீலங்கீலமாகப் புலப்பட்டன. புகையைப்போல குளிர் பரவிற்று.

வெளிச்சத்தின் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. தோலுரிந்ததுபோல சுவர் பூச்சுகள் கழன்று தொங்கும் பழங்காலத்துக் கட்டடத்தில் தனியான பதினைந்து இரும்புக்கூடுகளில் ஒன்றிலிருந்தேன். உடனிருந்த இரண்டு தமிழர்களை ‘உண்மையிலேயே’ தெரியவில்லை. அவர்களோடு பேசியதுமில்லை. ஆனால் உபாலி என்னோடு பேசுவான். உயிர் பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்த வெறும் கூடாக என்னைக் கொண்டுவந்து கொட்டிய அந்த இரவு விடிந்தபோது, பக்கத்துக் கூண்டிலிருந்த உபாலி “மச்சான், நீ புலி தானே, அப்படியானால் உனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மறைக்காமல் சொல்லு…. சந்தையில் புதிதாக என்ன ஆயுதம் வந்திருக்கிறது….” என்று சிங்களத்தில் கேட்டான். நான் உடற்பாகங்களை அசைக்கையில் பிரியாதிருந்த வலியைச் சகித்துக்கொண்டு எழுந்து நின்றபோது, “உனக்குத் துப்பாக்கிகளைக் கையாளத் தெரியுமல்லவா…. நீ என்னோடு சேர்ந்து விடு” என்று கட்டளைத் தொனியில் சொன்னான்.

உபாலியின் அதிகாரத்திற்குப் பொலிஸார் பயந்து நடுங்கினார்கள். காலையில் கக்கூசிற்கும், முகம் அலம்பவும் கூண்டுகளைத் திறக்கச் சற்றுத் தாமதமானாலும் உபாலி கெட்ட தூஷண வார்த்தைகளால் அவர்களைத் திட்டுவான். பவ்வியமாகத் திறந்து விட இடுப்பில் வழியும் சாரத்தை, ஆடும் விதைகள் தெரிய உயர்த்தியபடி கக்கூஸிற்குள் நுழைகையிலும்  தூஷணத்தைப் பொழிவான். கூண்டுகளிலிருந்து பார்த்தாலே தெரிகின்ற திறந்த குழிக் கக்கூசிலிருந்து சமயங்களில் சிரிப்பான். அங்கு சிரங்கைப்போலப் பாசி படிந்த சிறிய பிளாஸ்ரிக் வாளி, நீர்க்குழாயின் கீழிருந்தது. ‘க்ளக்…. க்ளக்….’ என்று நீர் சொட்டும் ஓசை இரவில் ஒருவிதப் பேயுலக ஒலியாய்க் கேட்கும்.

மெல்லிய வெளிச்சத்தில் தூசுகள் அலைகின்றன. மூத்திரம் மூன்று கிளைகளாக வழிந்திருந்தது. இரவு தொடையிடுக்கில் சரித்துப் பெய்த வாளியைக் கால்பாதத்தால் தள்ளியிருந்தேன். அது ஒரு கோடாக வெடித்திருந்தது. இல்லை, வெடித்த வாளியைத்தான் பொலீஸ்காரன் தந்திருந்தான். மூத்திர நெடி ஊறிய சாரத்தைக் கால்களில் உரித்துச் சுருட்டி கையெட்டும் தூரத்தில் வழிந்திருந்ததை ஒற்றியெடுத்தேன். கக்கூஸிலிருந்து உபாலி ‘காலை வணக்கம்’ என்பதுபோலக் கையசைத்தான். நேற்றிரவு, சலக்கடுப்புத் தாங்கவியலா வலியில் விலங்கை அசைத்துச் சத்தமிட்டு யாரையாவது அழைக்க முயற்சித்த அந்த அகாலவேளையில் “நான் இங்கே ஒவ்வொரு சிறையாகக் கிடந்தலைகிறேன். அவள் வருடத்திற்கொரு பிள்ளை பெறுகிறாள்” என்று மனைவியைத் தூசித்துக்கொண்டிருந்தவன்  நான் மறுபடியும் மறுபடியும் மணிக்கட்டை அசைத்துச் சப்தமெழுப்பவும், “யாரடா” என்று உறுக்கினான். “எனக்குச் சலம் கடுக்குது. திறந்து விடணும்” என்று மெதுவாகச் சொன்னேன். அவன் மறுபேச்சின்றி “அடே, பத்துப்பேர் சேர்ந்து புணர்ந்து பெற்ற பொலீஸ்காரப் பயல்களே, எங்கேயடா இருக்கிறீர்கள்” என்று குரலுயர்த்தினான். சட்டென்று டோர்ச் விளக்கு ஒளிர்ந்து சூரியன் நகர்வதுபோல அருகாக வந்தது. உபாலியிருந்த திசையை நான் வாஞ்சையுடன் பார்த்தேன். அவன் “நீ படுத்தெழும்புகிற அத்தனை பேரையும் என்னால் சொல்லமுடியுமடி” என்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

முகத்தில் வெள்ளை ஒளியைப் பாய்ச்சியவன், “மூத்திரமா” என்று கேட்டான். தலையைக் குனிந்து ஆமோதித்துவிட்டு தொடையிரண்டையும் நெருடியபடி “திறந்துவிடுங்கள்” என்றேன்.

“நீ புலி என்பதில் எனக்கு இப்பொழுது உண்மையாகவே சந்தேகமாயிருக்கிறது” என்றவன் நீர்ப்பற்று அற்ற உலர்ந்த வாளியொன்றை உள்ளே தள்ளினான். “இதிலே பெய்து தொலை” என்றான்.

முன்னரென்றால் அழைத்துச்சென்று கக்கூசில் ஏற்றிவிட்டு நான் குந்தவும், விலங்கை இழுத்தபடி அருகிலேயே நிற்பவன், அந்தப் பழக்கத்தை இன்றைக்கு விட்டொழித்தான். ஒருவேளை குழியில் பட்டுச் சிதறும் துளிகள் அவன் கால்களில் தெறிப்பதை அவன் விரும்பாதிருக்கலாம். வெளிச்சத்தை அணைத்துவிட்டு விலகியபோது “மாத்தையா, வெளிச்சம்….” என்று இழுத்தேன்.

“நீ புணரும் போதும் நான்தான் வெளிச்சம் பாய்ச்ச வேண்டுமா….” என்ற குரல் மட்டும் வந்தது. நான் கால்களை விரித்து இடது கையினால் தொடைகளின் இடையில் வாளியை நகர்த்தினேன். விடுதலை என்ற சொல்லின் பரிபூரண அர்த்தமது. வாளியை நிமிர்த்தி, இரண்டு காற்பாதங்களிலும் கவ்வி ஒரு வேவுப்புலியின் அவதானத்தோடு சுவரோரமாகத் தள்ளிவைத்தேன்.

சற்று முன்னர் வாளியைத் தந்த போலீஸ்காரன் “வெறும் மூத்திரத்தை அடக்கத் தெரியாதவர்களா புலிகளில் இருந்தார்கள்….” என்று முணுமுணுப்பது கேட்டது.

சிங்கமலை லெட்சுமணன் என்கிற நான் மலையகத்தில் தெனியாய என்ற தோட்டத்தில் பிறந்தவன் என்பதையும் எழுபத்தியேழு கலவரத்தில் தந்தை என்னைத் தோளிலேயே காவிச்சென்று முல்லைத்தீவின் காட்டுக் கிராமமொன்றில் தஞ்சம் புகுந்தார் என்பதையும் ஏழு வயதில் மனதில் பதிந்த சிங்கள மொழியை என்னால் இன்னமும் சரளமாகப் பேசமுடியும் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடிந்த நிலாம்தீனுக்கு, நான் சிறுவயதில் நித்திரைப்பாயிலேயே மூத்திரப்பழக்கத்தைக் கொண்டிருந்தேன் என்பதையும், வளர்பருவத்தின் விழிப்புணர்ச்சி, அதைத் தடுக்க அது அடிவயிற்றில் தேங்கிக் கடுக்கச் செய்யும் வலியை ஏற்படுத்திற்று என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னை ‘அமத்திய’ மூன்றாவது நாள் அவன் துப்பாக்கி சுடும் பொஷிசனில் எனக்கு முன்னால் வந்தமர்ந்தான். நெடிதுயர்ந்த உருவத்தின் ஊடுருவுகின்ற கண்களை ஒருகட்டத்திற்கு மேல் எதிர்கொள்ள முடியவில்லை.  “பெயர் என்ன என்று சொன்னாய்?”

“சோமையா ராசேந்திரன். சொந்த ஊர் ஹட்டன். பிழைக்க வந்த இடத்தில் எப்படியோ இந்தத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. பணம் தருகிறோமென்றார்கள். ஆனால் இன்னமும் தரவில்லை.”

நிலாம்தீன் சட்டென்று என்னுடைய தாடையைப் பற்றிக்கொண்டு கேலியாகச் சிரித்தான். “நடிகனடா நீ” என்றான். பின்னரெழுந்து கதிரையில் கிடந்த கோப்பினைப் புரட்டியவன் “முழுப்பெயர் சிங்கமலை லெட்சுமணன்” என்றபோது நான் எனது கடைசி நம்பிக்கையையும் வழிந்தோட விட்டேன். இரண்டு முழங்காலையும் கையால் இறுக்கிக் குந்தியிருந்தேன். என் உயரத்திற்குக் குனிந்தான். “எங்க சனங்களின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது அப்பனே” என்று தூய தமிழில் சொல்லி முடித்தான். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவனைப் போலவே தமிழில் பேசிய மற்றுமொருவன் “தோட்டக்காட்டு நாய்க்கு முல்லைத்தீவுக் காட்டுக்குள்ளை என்ன வேலை” என்றவாறே மூஞ்சையில் குத்தினான்.

நான் முல்லைத்தீவிலிருந்து கொழும்பிற்கு வந்து மூன்று மாதங்கள்தான் முடிந்திருந்தது. வந்ததிலிருந்தே மட்டக்களப்பிற்கும் அம்பாறைக்கும் பதுளைக்குமாக அலைந்து திரிந்தேன். தொடக்கத்திலிருந்த லேசான பதற்றம் மெல்ல மெல்லப் பின்னர் தணியத் தொடங்கியிருந்தது. கண்களில் ஒருவிதத் தெளிவு. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை போலும்.

ஒருமுறை சித்திரவதையின் போது விஜேயரத்ன கொக்கரித்த குரலில் கேட்டான் “திருப்பியெல்லாம் அடிக்க மாட்டாயா புலியே…. ஏன் பயந்துபோய் இருக்கிறாய்?” விஜேயரத்ன அவ்வளவாகப் பேசுவதில்லை. பின்னொரு நாளில் அவனுக்கு பேத்தையன் என்றும் ஒரு பெயர் உண்டென்பதை அறிவேன். அவனுடைய சித்ரவதைகள் நேர்த்தியும் நுணுக்கமும் மிக்கவை. வலி எதிராளியின் முகத்தில்  வழியும்போது அவனுடைய முகத்தில் பரவும் குரூரமான பரவசத்தை நான்  முதல் நாளிலேயே கண்டுகொண்டேன். காமத்தில் உச்சத்தைத் தொட்டதைப்போல அவனுடைய முகம் கோணி நிற்கும்போது வதை சாவைத் தட்டித் தட்டித்திறக்க முயற்சிக்கும். அந்த உச்சத் தருணத்தின் பிறகு அவன் ஓயத்தொடங்குவான். நான் சித்திரவதைகளின் ஆரம்பத்திலேயே வாதையைக் கண்களால் கொட்டுவேன். ஓர் அப்பாவியைப்போல அவனைப் பார்ப்பேன். ஒருநாள் கையை ஓங்கியவன் சுளீரென்று வலிப்பு வந்தவன் போலக் கையை இறக்கினான். “வேசை மகனே, அடிக்கும்போது அப்படிப் பார்க்காதே, அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியவில்லை” என்றான். விஜேயரத்ன என்னுடைய முதலாவது விசாரணையாளன்.  அன்றைக்கு ஒடுங்கிய பாதையால் அவன் என்னை இருளான விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றபோது குறடு, ஆணி, முள்ளுக்கம்பி, சோடாப்போத்தல், கொட்டான்தடி…. ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டேயிருந்தேன். இருள்தான் விசாரணையாளர்களின் துணையாயிருக்கிறது. இருட்டு நம்பிக்கைகளைச் சிதைத்துவிடுகிறது. ஒளியின் கீற்றைக்கூடப் பார்க்கமுடியாத இருட்டில் தற்கொலை எண்ணங்கள் துளிர் விடுமாம் என்று படித்த நினைவிருக்கிறது. இவர்கள் என்னைத் தற்கொலை செய்ய அனுமதிக்கவில்லை. சாவுக்கு அருகாகக் கூட்டிச் செல்வதும் மறுபடியும் திருப்பி அழைத்து வருவதுமாயிருந்தார்கள்.

10689524_10153346791279951_8737033188617690887_n
உருண்டைத் தலையில் நறுக்கிய மயிரும் உட்புதைந்த தூக்கமில்லாத கண்களும் கொண்ட விஜேயரத்ன தடித்த ஒரு புத்தகத்தைக் கையில் சுழற்றியபடி வந்தான். கதிரையை இழுத்துப்போட்டு உட்கார்ந்தவன் கதிரைக் கால் அருகாக புத்தகத்தை பொத்தென்று வைத்தான். அதுவொரு காவி நிற அட்டைப் புத்தகம். புத்தகங்களைக் கண்டாலே சந்திராம்மாவின் நினைவு பெருகுகிறது…. அந்த ஓவியத்திலிருந்தவர் புத்தரா?… தெரியவில்லை. சற்றே தலையைச் சரித்த அந்த முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. கருணை சொரியும் வல்லபக் கண்கள்.

விஜேயரத்ன நிதானமாக எழுந்து என்னைச் சுற்றினான். மூன்றாவது தடவை கையிரண்டையும் முறுக்கிப் பின்னிழுத்து மின்சாரக் கம்பியினால் இறுக்கி முடிச்சிட்டான். பின்னால் சென்று சாரத்தை அவிழ்த்து விழுத்தினான். உள்ளாடையை உருவி இறக்கினான். அது உரித்த கோழியைப் போல காற்பாதத்தில் சுருண்டு கிடந்தது.

என்னுடைய குதிகால்கள் மெதுவாக உந்த முயற்சித்தன. கால்களை மடித்துக் குந்தியிருக்கச்சொல்லி மனது உறுத்தியது. ஆடைகளைக் களையும் விசாரணையாளன் அப்பொழுது அதிகாரத்தைத் தனக்குள் ஏற்றிக்கொள்கிறான். ஆடையிழந்தவன் அடிமையைப் போலத் தன்னைக் குறுக்குகிறான். இனிவரும் நாட்களில் ஆடையிழந்த பல தமிழர்கள் ஓடிப்போய்ச் சுவரோடு ஒட்டிநிற்பதையும் அவர்களுடைய தோளினைத் தொட்டுத் திருப்பும் விசாரணையாளர்கள் ‘தமிழனின் சாமான்’ என்று வெடித்துச் சிரிப்பதையும் நான் காணுவேன்.

விஜேயரத்ன கொடுப்புச் சிரிப்புடன் என்னை முழுதாக அளந்தான். நான் கண்களைத் தாழ்த்திக் கூச்சமடையப் பழகிக்கொண்டேன். தொடைகளை ஒன்றோடொன்று உரசி இடுப்பை முன்வளைத்து நெளிந்தேன். அவன் சீழ்க்கையொலியோடு கதிரையை மேலும் முன்னால் நகர்த்தி உட்கார்ந்தான். அப்பொழுது புத்தருடைய முகத்தைக் கதிரையின் கால் நெரித்தது.

“சோமையா ராசேந்திரன்…. உனக்குத் தெரிந்த வேறு யாரெல்லாம் புலிகளிடம் சூப்பிக்கொண்டு இப்படியான ஊத்தை வேலை செய்கிறீர்கள்….” உண்மையை முதலில் தானே கண்டுபிடிக்கவேண்டுமென்ற முனைப்போடு கேட்டான்.

“எனக்குத் தெரியாது.”

அவனுடைய வலது கால் உயர்ந்த வேகத்தில் என் தாடையில் இடித்து முகத்தைப் பின்னாற் தள்ளியது. மல்லாந்து விழுந்தேன். பின்மண்டையில் கிடுங் என்றது.  காதுக்குள் ஏதேதோ கூச்சல்கள். வாய்க்குள் ரத்தத்தின் செப்புச்சுவை ஊறியது. மூக்கிலிருந்து திரவம் ஒழுகுகிற உணர்வு. மேலே கூரையில் அலை அலையாக வட்டங்கள் விரிந்தன. விஜேயரத்னவின் முகம் மங்கலாகத் தெரிந்தது. அவன் குனிந்தபோது தலை மட்டும் இறங்கிவருவதைப் போலிருந்தது. தலைமயிரைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான். “இனி உனக்குச் சொல்ல முடியும். உண்மையச் சொல்லு.”

“நம்புங்கள்…. நான் அவர்களில் ஒருவரைக்கூட நேரே சந்தித்ததில்லை. கடிதங்களும் முகவரிகளோடு வருவதில்லை. உண்மையில் நான் என்ன செய்யவேண்டுமென்பதை அவர்கள் இன்னமும் எனக்குச் சொல்லவில்லை.”

“இந்திய நாய்…. ” என்றான் விஜேயரத்ன. முகத்தில் கணச் சலிப்பு. நான்  புழுதி கிளறும் காலக் குதிரையொன்றில் காற்று நெஞ்சிலறைய என் மூதாதையரின் தலைமுறைகளைக் கடந்து பயணித்து மீண்டேன்.

“மன்னித்துக்கொள்ளுங்கள் மாத்தையா….”

அவன் உந்தி எழுந்த வேகத்தில் கதிரை ஓரடி பின்நகர்ந்தது. புத்தகத்தைக் கையிலெடுத்தவன் அதனை வகிடு பிரித்து என் தலையில் கவிழ்த்தான். கூரையைப்போல அது பொருந்தி நின்றபோது தரையிற் கிடந்த இரும்புக் குழாயைத் தூக்கினான். சற்றுமுன் வரையிலான மெதுவான வேகத்திற்குத் துளியும் பொருந்தாமல் கையை ஓங்கியபோது காற்று விசுக் என்றது. ஷக் என்ற சத்தம் அட்டையிலிருந்த  புத்தரைக் கடந்து, தாள்களைக் கடந்து நடுமண்டையில் ஊடுருவியபோது கண்கள் செருகிக்கொள்ள ஒளிரும் வண்ண அரிசித் துணிக்கைகள் விசிறின.

புத்தர் அநாதரவாகக் கிடந்தார். ‘புத்தா’ என்று வாஞ்சையோடொலிக்கும் குரல் கிணற்றுக்குள் ஒலிப்பதுபோலக் கேட்டது.

0 0 0 0 0 0 0 0

புத்தா…. இங்கே வந்து பாரேன்….” என்று கியோமாக் கிழவி பதற்றத்தோடு அழைக்க அறையிலிருந்து ஓடிச்சென்றேன். சந்திரசேகரனைக் கைது செய்துள்ளதாக ரூபவாஹினி சொல்லிக்கொண்டிருந்ததை கியோமா வைத்த கண் வாங்காது பார்த்தபடியிருந்தாள். “என்ன புத்தா…. இப்படியுமா உங்களுடைய தலைவர்கள் செய்வார்கள்….” நான் கிழவியின் கண்களை நேராகப் பார்த்தேன். என் உள்ளிருந்தொரு மிருகம் அவளுடைய சொற்களைக் கணக்கிட்டுக்கொண்டிருந்தது. முன்பொருதடவை “புத்தா…. ரஞ்சன் விஜேயரத்னாவைக் கொன்றுவிட்டார்கள் பாவிகள்” என்று அலறியடித்துச் சொன்னபோதும், பிறிதொருநாள் “ஐயோ புத்தா, தொலைக்காட்சித் திரை முழுவதும் ரத்தமும் மனிதத் துண்டங்களும்…. ராஜீவைக் கொன்றுவிட்டார்கள்” என்று கத்தியபோதும் அவளுடைய கண்களில் இப்போதிருந்ததைப்போன்ற அச்சமிருந்தது. அன்றைக்குத் தொலைக்காட்சித் திரையில் ரோஸ் நிறக் காலொன்றைக் கண்டேன்.

கொழும்பின் புறநகர்ப்பகுதியில் வாடகைக்கு விடப்பட்டிருந்த அந்த வீட்டைப் பற்றிய தகவல் கிடைத்த மாலையிலேயே நான் கியோமாக் கிழவியைச் சந்தித்தேன். நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகிய தெருவின் முடிவில் சிங்களப் பாரம்பரியமான கட்டடக்கலையில் மிளிர்ந்த வீடு அது. கொடித்தாவரமொன்று முற்றத்தின் மேலே பரவிநின்றது. கியோமாவிற்கு அறுபது வயதிருக்கலாம். தென்பகுதியின் ஏழைக்கிராமம் ஒன்றிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்னர் கணவரும் கியோமாவும் இந்நகரத்திற்கு வந்தார்களாம். ஓரளவு நல்லநிலையில் இருந்தபோது இந்நிலத்தைச் சொந்தமாக வாங்கி வீடு கட்டிக்கொண்டார்கள். கணவர் இறந்துவிட, இரண்டு மகன்களும் திருமணத்தின் பிறகு நகரத்தின் அடுக்கு மாடிகளுக்குப் போய்விட, வீட்டின் விறாந்தையோடியிருந்த ஓர் அறையை யாரேனும் படிக்கின்ற மாணவர்களுக்கு வாடகைக்கு விட கியோமா தீர்மானித்தாள்.

“படிக்கின்ற பிள்ளைக்கு வசதியாயிருக்கும் புத்தா…. உங்களுக்கு அல்ல, குறை நினைக்க வேண்டாம்” என்று அவள் எனக்குச் சொன்னாள்.

“நானும் படிக்கவே ஆசைப்பட்டேன் அம்மா. ஆனால் வசதியிருக்கவில்லை. இப்பொழுது வெளிநாடுகளிலிருந்து பொதிகளை இறக்கும் ஒரு கார்கோ கொம்பனியில் வேலை கிடைத்திருக்கிறது. இதில் காலூன்றி விட்டால் ஹட்டனிலிருக்கிற என் தம்பியைப் படிக்க வைத்துவிடுவேன். வேறிடங்களில் அதிக வாடகை கொடுக்க  வசதியில்லை. மனது வையுங்கள்.” சரளமாகக் கோர்த்த என்னுடைய சிங்களச் சொற்களுக்கு கியோமா பணிந்தாள். அடுத்த நாள் காலை அவள் என்னைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று பொலிஸ் பதிவுத்துண்டில் சோமையா ராசேந்திரன் என்ற பெயரைச் சேர்த்தாள். அதிலொரு பிரதியெடுத்து நான் வைத்துக் கொண்டேன்.

சாப்பாட்டை நான் வெளியில் பார்த்துக்கொண்டேன் என்றாலும், காலையில் சுடுநீர்ப் போத்தலில் தேநீர் எடுத்துவந்து “புத்தா எழுந்துகொள்” என்று சொல்வதற்குக் கியோமா தவறியதில்லை. சட்டென்று சந்திரம்மாவின் மலர்ந்த முகம் ஞாபகத்தில் வரும். அவளும் விடிகாலையிலேயே தேநீரைக் கொண்டுவந்து நீட்டுவாள். சாப்பிடும்போது தனக்காக எதையும் எடுத்து வைக்காமல் கறியையும் காய்களையும் என் தட்டிலேயே குவித்துவைப்பாள். “வளர்ற பெடியனல்லோ…”

வெளியில் செல்லாது வீட்டிலிருக்கின்ற நேரங்களில் கியோமாவும் வற்புறுத்திச் சாப்பிட அழைப்பாள். ஈரப்பலாக்காயின் கறிச்சுவை என்னில் குற்ற உணர்ச்சிகளைக் கிளறப்பார்த்தது. அப்படியொருநாள் “உன் வேலைகள் எப்படிப்போகிறது புத்தா…. தம்பி எப்படியிருக்கிறான்….” என்று அவள் எதேச்சையாகக் கேட்டபோது கையிலேந்திய சோற்றுக் குழையல் உதறித் தட்டில் விழுந்தது. அவளை வெறிக்கும் கண்களால் பார்த்தேன்.

ஹவ்லொக் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த குண்டு நிரப்பிய கார், தீயின் நாவுகளால் சூழப்பட்டுப் பேரோசையோடு எழுந்து விழுந்ததும், வீதிச் சுவர்களெல்லாம் கொத்திக்கிளறப்பட்டதும், கண்ணாடி முகப்புகள் நொறுங்கித் தெறித்ததுமான அன்றைய இரவு கியோமா மேலே எனக்கு முதற்தடவையாகக் கோபம் வந்தது. அவள் தொலைக்காட்சியைக் காட்டி “பார் புத்தா…. இந்த அழிவுகளை. மனச்சாட்சியில்லாதவர்களால் இந்த அழகிய நாடு அழியப்போகிறது” என்றாள். அப்பொழுது அவளுடைய கண்கள் கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்தன.

என் கண்கள் குரூரமாக ஒளிர்ந்தன. “ஆம், மனச்சாட்சி இல்லாதவர்களால் இந்த நாடு அழியப்போகிறது என்பது உண்மைதான்” என்று தீர்க்கமாகச் சொன்னேன்.

“ஏன் புத்தா, இப்படியான அநியாயங்களைச் செய்ய வேண்டாமென்று தமிழர்கள் புலிகளிடம் சொல்ல மாட்டார்களா….”

நான் சோற்றுத் தட்டை நகர்த்தி விட்டு எழுந்துகொண்டேன். வெளிப்படுத்த முடியாத கோபம் பதற்றமாக உருமாறியிருந்தது. “பசிக்கவில்லையா புத்தா….”

“இல்லை” என்றுவிட்டு அறைக்கு வந்தேன். அவள் “எனக்கும்தான்” என்றாள்.

அடுத்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியற்ற கெட்ட கனவுகள் வந்தன. கைகளைப் பிணைத்துத் தெருவில் யாரோ என்னை இழுத்துச் செல்கிறார்கள். திரண்ட மனிதர்கள் வெறிகொண்ட கண்களோடு என் மீது கற்களை எறிகிறார்கள். அவர்களிடையில் அவளை நான் பார்த்ததும் தன்னை மறைத்துக்கொள்ளும் விருப்பில் கிழவி கியோமா நழுவிச்செல்கிறாள். நான் “மெத்த நன்றி கிழவி” என்று உரத்துக் கத்துகிறேன். எனக்குப் பழக்கமற்ற காட்டுப் பகுதியொன்றில் என்னைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். நான் மூத்திரம் நனைந்த ஆடைகளோடு “எனக்குப் பசிக்கிறது” என்கிறேன். அப்பொழுது கியோமா தட்டைப் பொத்தென்று முன்னால் வைத்து வெறும் ஈரப்பலாக்காய்க் கறியை ஊற்றுகிறாள். “சாப்பிடு புத்தா….” என்று சொல்கிறாள்.

கதவினைப் பலமாகத் தட்டுகிறார்கள். பிறகு இடிக்கிறார்கள். நான் சரேலென்று விழித்தேன். கியோமா இப்படித் தட்டுவதில்லை. மூளைக்குள் சுளீரென்றது. ‘கிழவி வேலையைக் காட்டிவிட்டாள்….’ அரைஞாண் கொடியிலிருந்த குப்பியில் கை வைத்து இழுத்தேன். அப்பொழுது கதவு ஓவென்று திறந்தது. அணை உடைந்ததும் பாய்கிற நீர் போல ஆமிக்காரர்கள் பாய்ந்தார்கள். என்னை விழுத்தி மேலே நொடியில் ஏறிக்கொண்டார்கள். தலைமயிரில் கைகளைச் செருகிக் கோதினார்கள். அரைஞாண் கொடியை பிளேடால் கீறி வெட்டியெடுத்தான் ஒருவன். பிளேற் பட்ட இடத்தில் ரத்தம் கசிந்தது. காதுமடல், காதுக்குழி, அக்குள், வாய், குதமென்று விடாமல் தேடினார்கள்.

முகத்தைத் தரையோடு அழுத்திப்பிடித்திருந்தவனின் விரல்கள் சிங்கத்தின் காலைப்போல கன்னத்தில் முழுவதுமாகப் பரவியிருந்தன. அறையைச் சல்லடையிட்டபிறகு அகப்பட்ட சோமையா ராசேந்திரன் பெயரிட்ட அடையாள அட்டையோடு வெளியே தள்ளி வந்தார்கள். நான் கியோமாவைத் தேடிக்கொண்டிருந்தேன். கிழவி காட்டிக் கொடுத்துவிட்டு எங்கேயோ ஓடிவிட்டாள். இரண்டு பக்கங்களிலும் பொலிஸார் என்னை இழுத்தபடி வாசலைக் கடந்து தெருவில் நடத்தியபோது முகப்பில் நான் கியோமாக் கிழவியைக் கண்டேன்.

கியோமாவிற்குப் பக்கத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் நின்றார்கள். அவர்களுக்கு நடுவில் அவள் முழந்தாளில் இருந்தாள். முதுமையில் தளர்ந்த அவளுடைய கைகளிரண்டும் முதுகின் கீழ் மடிக்கப்பட்டு நைலோன் கயிற்றினால் இறுக்கப்பட்டிருந்தன. சுருக்கங்கள் விழுந்த முகத்தின் உட்புதைந்த அவளுடைய கண்கள் இரக்கமும் பரிதாபமுமாயிருந்தன. அவள் என்னைப் பார்த்தாள். நான் சரேலென்று தலையைத் தாழ்த்தினேன். கால்கள் தொய்ய, அவளை நெருங்கினேன். கியோமா கிழவி, தன்னருகில் நின்ற சிங்களப் படைவீரனை நிமிர்ந்து பார்த்தாள் “புத்தா, இவன் நீங்கள் நினைப்பவன் மாதிரியானவன் இல்லை. அவனை வீணாகக் கொடுமைப்படுத்தாதீர்கள்….” என்று இறைஞ்சினாள். அப்பொழுது கியோமாவின் நீண்ட நரைத் தலைமயிரைப் பற்றியிழுத்து கீழே விழுத்திய படைவீரன் அவளுடைய மார்புக்கு நேரே வலது காலை ஓங்கி அந்தரத்தில் நிறுத்தினான். “ஒரு வார்த்தை பேசினாயென்றால் கிழட்டுப் பன்றியே…. மிதித்தே கொன்றுவிடுவேன்” என்றவன் “எதிரிகளை மன்னித்துவிடலாம். துரோகிகளை மன்னிக்கவே முடியாது” என்று பற்களை நறுமியபடி சிங்களத்தில் சொல்வதை முதற் தடவையாகக் கேட்டபடி அவளைக் கடந்து இழுத்துச் செல்லப்பட்டேன்.
0

(ஓவியம் கார்த்திக் மேகா)