மருது

எழுத்தாளர் சயந்தன் அவர்களுக்கு,

நான் கடந்த முறை எழுதிய போது அடுத்த முறை தமிழில் எழுதுவதாக சொல்லி இருந்தேன். ஆனால் அதற்குள் இரண்டு வருடம் ஓடி விடும் என்று நினைக்க வில்லை.

சோதி மலர் போல ஒரு பெண்ணை இதுவரை படித்த எந்த புத்தகத்திலும் சந்திக்க வில்லை.

சந்திரா டீச்சரும் தான்.

ஆதிரை 2016 மதுரை புத்தக காட்சியில் தான் வாங்க முடிந்தது.

ஆதிரை வாசிக்க தொடங்கும் முன் ஆறா வடு மீண்டும் ஒரு முறை வாசித்தேன். இரண்டாவது முறை வாசிக்கும் போது ஒவ்வொரு அத்தியாயமும் தனியே ஒரு கச்சிதமான சிறுகதை போல இருந்ததாக பட்டது. பகடிகளை அதிகமும் ரசித்தேன்.

பின்னர் தமிழினி அவர்களின் ஒரு கூர்வாளின் நிழலில் வாசித்து ஒரு புத்தக அறிமுகமும் எழுதினேன்.

ஆதிரை வாசித்து கொண்டிருக்கும் போது மாவீரர் தினம் வந்தது. முக நூலில் உங்களுடைய மற்றும் தீபச்செல்வன் அவர்கள் பகிர்ந்த படங்களையும் பார்த்தேன்.

அத்தார் இயக்கம் குறித்து என்ன மாதிரி கருத்து கொண்டிருந்தாரோ அதுவே என்னுடைய கருத்தாக இந்த கணத்தில் இருக்கிறது. தமிழினியின் சுய சரிதை படித்த போது இங்கே அதிமுக கட்சி ‘அம்மா’ கோஷம் போட்டு மற்றவர்கள் ஒரு வேலையும் செய்யாமல் சுத்தி கொண்டிருந்ததை போல இயக்கத்தில் தலைவர் மேல் பாரத்தை போட்டு மற்றவர்கள் ஒதுங்கி கொண்டார்களோ என்று தோன்ற வைத்து விட்டது.

எழுத்தாளர்கள் தாங்கள் எழுத விரும்பிய ஒரு வரியை எழுதவே ஒரு நாவலை எழுதுகின்றனர் என்று யாரோ சொன்னதாக நியாபகம். நீங்கள் ஆதிரையின் கதையை சொல்ல தான் இந்த நாவலை எழுதினீர்களோ என்ற எண்ண வைக்கும் அளவுக்கு ஆதிரை வரும் அந்த சில பக்கங்கள் நினைக்க வைத்து விட்டன. அதன் பின்னர் தான் அட்டை படத்திற்கான அர்த்தம் புரிந்தது.

அன்ரன் பாலசிங்கம், தமிழ் செல்வன், என்று புலிகளின் முக்கிய ஆளுமைகள் பத்தி அத்தார் ஒன்றுமே பேச வில்லையே என்று தோன்றியது. பின்னர் இது இரண்டு தமிழ் குடும்பங்கள் பற்றிய கதையென்றும், கடந்த 40 வருடங்களாக இலங்கையில் தமிழருக்கு நடந்த கொடுமைகளையும் அவர்கள் நம்பிக்கையோடு இருந்த கொஞ்ச காலத்தையுமே ஆதிரை பேசுகிறது என்று புரிந்து கொண்டேன்.

எழுத்தாளர்கள் ஆயிரம் கதா பாத்திரங்களை உருவாக்கி உலவ விட்டாலும் தானும் ஒரு கதா பாத்திரம் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்குமோ?! நீங்கள் நீங்களாகவே சந்திரா டீச்சரை தேடி வருகிறீர்கள். அப்போ சந்திரா டீச்சர் உண்மையென்றால் எல்லாருமே உண்மை தானே?!

ஆறா வடு, பெயரற்றது என்று இரண்டு நூல்களிலும் சாதிய கொடுமைகளை பற்றி எழுதியிருந்தீர்கள். ஆதிரையில் அது மிக வலிமையாக, விரிவாக அத்தார், சந்திராவின் உரையாடல் வழி வெளிப்படுகிறது.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கோ, வேறு நாட்டிற்கோ தப்பி வந்தால் தான் அகதி என்று நினைத்தேன். ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னி நிலத்திற்கு வந்தவர்களை நாவலில் அகதிச் சனம் என்று விளிப்பது கண்டு அதிர்ந்து விட்டேன்.

தேயிலை தோட்டத்தில் இருந்து இரவோடு இரவாக தப்பி வந்து கொஞ்ச காலம் நிம்மதியாக வாழ்ந்து, இந்திய ராணுவத்தினர் கையில் அகப்பட்டு இறக்கும் சிங்கமலை, இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படும் நடராசன் என்று இருவரின் மரணமும் ராணுவம் என்பதற்கு தேசம் பொருட்டல்ல அது சீருடை அணிந்த வெறி பிடித்த கூட்டம் என்று எண்ண வைத்து விட்டது.

சங்கிலியண்ணர் வேட்டைக்கு செல்வது அதை லெட்சுமனுக்கு சொல்லி தருவது என்று அந்த பகுதி மிக அருமையாக இருந்தது.

மயில்குஞ்சர் மண்ணின் மைந்தர் இல்லையா!! அந்த பாரம்பரிய அறிவை தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து கொண்டிருக்கிறது.

அத்தனை பெண் கதா பாத்திரங்களும் அம்மா, அக்கா, தங்கை, உடன் படித்த தோழி என்று நன்கு தெரிந்த ஆட்கள் போல இருக்கின்றனர்.

சோதி மலர் தான் நம்பிக்கையின் சின்னம். தற்போது வெளியாகி இருக்கும் Dunkirk பட trailer ல் ‘Hope is a Weapon’ என்று பார்த்த உடன் நான் சோதி மலரை தான் நினைத்துக்கொண்டேன்.

பாம்பு தீண்டி இறந்த பாட்டியின் ஈமச் சடங்கிற்கு சொந்தங்களை அழைத்து வர தனது சொந்த பணத்தை செலவு செய்வது என்று இப்படி மனிதர்கள் இருப்பார்களா என்று யோசிக்க வைத்து பின்னர் சோதி மலர் அப்படித்தான் என்று தோன்ற வைக்கும் ஒரு பெண்.

இயற்கை எனது நண்பன், வரலாறு எனது வழிகாட்டி, வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன் என எங்கோ கேள்வி பட்ட வரிகளில் அத்தியாயங்களில் தலைப்பு இருப்பதை யோசித்தவாறே படித்து கொண்டிருக்கும் போதே அவை யார் பேசியவை எனக் கண்டுகொண்டேன். பின்னர் ஓயாத அலைகள் என்ற இரு வார்த்தைகள் அப்டியே மனதில் உட்கார்ந்து விட்டு எழுந்து போக மாட்டேன் என்று சொல்லி விட்டன.

சாரகன் தமிழ் நாட்டில் பிறந்திருந்தால் வைகோ, சீமான் போல ஆகியிருப்பார்.

நாமகள், இசை நிலா, ஒளி நிலா போன்ற பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

வெள்ளையனின் அந்த எதற்கும் கலங்காத என்று சொல்வதா இல்லை சமயோசித புத்தி என்று சொல்வதா என்று தெரியவில்லை. தன் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பு, நாடு இல்லை என்று ஆன பின் ஒரு வீட்டையாவது கட்ட வேண்டும் என்ற பரிதவிப்பு பின்னர் நண்பனிடம் வெளிநாடு செல்ல என்ன செலவாகும் என்று தொகையை கேட்ட பிறகு எச்சிலை விழுங்கி கொள்வது என்று போர் முடிந்து ஈழத்தில் வாழும் முன்னாள் போராளிகளின் பிரதிநிதியாக இருக்கிறார். அவர் உடலில் எஞ்சியிருக்கும் வலி போல ஈழ மக்கள் அனைவர் மனதிலும் உடலிலும் ஒரு வலி இருக்கும் தானே?!

இங்கே எனது மாணவிகள் அ. முத்துலிங்கம் அய்யாவின் கடவுள் தொடங்கிய இடம் மற்றும் பெரும்பாலான சிறுகதைகள், உங்களின் ஆறா வடு, ஷோபா சக்தியின் கொரில்லா, தற்போது ஒரு கூர்வாளின் நிழலில் என்று ஈழ படைப்பாளிகளின் எழுத்தை தொடர்ந்து வாசித்து கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக ஆதிரை வாசிக்க போகிறார்கள். ஓரிரு மாணவர்களும் வாசிக்க தொடங்கியுள்ளார்கள்.

ஆறா வடுவில் கதா நாயகன் சொல்வார், நாட்டுல சுதந்திர போராட்டம் நடக்கிறது என்று தெரியாமல் இதெல்லாம் இப்படி திரியுதுகள் என்று. இங்கே தமிழ் நாட்டில் விஜய், அஜித்திடம் இருந்து காப்பாற்றி ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து வாசிக்க சொல்வதற்குள் மாதங்கள் பல கடந்து விடும்.

நாவலில் காணமல் போன சின்ன ராசு, காணாமல் போகடிக்கப்பட்ட வினோதினி என்று எத்தனை பேரை இந்த போர் தின்று இருக்கிறது. இப்போதும் காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் போராடுவது குறித்து தீபச்செல்வன் முகநூலில் எழுதியவற்றை படித்தேன்.

கிட்ட தட்ட இரண்டு மாதமாக இதை எழுதி கொண்டிருக்கிறேன். இடையில் கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு வேலை மாறி வந்தது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் என்று சொந்த வாழ்க்கையிலும், தமிழகத்திலும் நிறைய நடந்து விட்டது.

நாவலை மீண்டும் ஒரு முறை படிக்கும் முன்னர் உங்களிடம் கேட்க நினைத்த கேள்விகள் பல ஆனால் அவற்றில் இரண்டை மட்டும் இப்போது கேட்கிறேன்.

1. அது ஏன் இயக்கத்தில் இணைந்தவுடன் பெயர்களை மாற்றி வைக்கின்றனர்.

2. அடுத்து என்ன எழுதி கொண்டிருக்கிறீர்கள்?!

தமிழ் நாட்டில் உள்ள எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்து கொண்டுதான் இருக்கிறேன். அவர்களுடைய mail id யும் இருக்கிறது, ஆனாலும் பாருங்கள் கடல் கடந்து வாழும் உங்களுக்கு தான் இரண்டாவது முறை கடிதம் எழுதுகிறேன். நீங்கள் முதல் முறை இந்த வாசகனுக்கு பதில் எழுதினீர்களே! அது உங்களை நண்பரை போல நினைக்க வைத்து விட்டது என்று நினைக்கிறேன்.

நன்றி

மிக்க அன்புடன்

மருது…