மணிமாறன்

அனைத்தையும் அழித்தொழித்தாகி விட்டது. அரை நூற்றாண்டு கால யுத்தத்தின் கடைசித் துளிகளில் எதை பெற்றது, எதை இழந்தது இந்த இனம். துட்டகை முனுவிற்கும், எல்லாளனுக்கும் துவைந்த யுத்தத்தின் சத்தங்களால் திகைத்திருந்த நிலத்தின் இனியான கதை என்னவாகப் போகிறது. உலகின் காணச் சகியாத காட்சிகளையெல்லாம் வர்ணமேற்றி காட்சி உருவைப் பெரிதினும், பெரிதாக்கி முள்ளி வாய்க்காலின் கம்பி வேலிகளைப் பிடித்தபடி வெறித்திருக்கும் இந்த தமிழ்க்குடிமகளின் கண்களுக்குள் பொதிந்திருக்கும் கேள்விகளை நாம் எப்படி எதிர் கொள்வோம். அரசியல் பிழைத்தோர் அணுகுவதைப் போலன்றி தன் இணத்தின் துயரங்களையும் அதன் சமரசமற்ற யுத்தத்தையும் ஒரு முறை சொல்லிப் பார்த்தால் என்ன? எல்லாம் முடிந்தா விட்டது. இனியான வாழ்வின் துயரப்பெருங்கடலை நீந்திக் கடந்திட நம்பிக்கைத் தெப்பங்கள் தென்படவில்லையா? போர் என்றாலும், காதல் எனினும் கசப்பென்றாலும், எதுவாயினும் இனியான வாழ்க்கையை அவரவர்கள் தான் வாழ்ந்தாக வேண்டும். கலைஞன் கண்ணுறுகிறான் நம்பிக்கைப் பிடிகயிறுகள் காற்றில் ஊஞ்சலாடுகிறது. இது அவனை வண்ணி நிலத்திற்கும், வளைகுடா நாட்டிற்கும் தூக்கிப் போகிறது. கடந்து சென்ற காற்றொன்றும் வசந்தத்தை வரவழைக்கவில்லையே எனும் துக்கப் பெருமூச்சை சுமந்திட வகையின்றி வார்த்தைகளை வசமாக்கி கலையாக்குகிறான். அதுவே பெயரற்றதாக, ஆறாவடுவாகவும் மேலெழும்புகிறது. அதுவரையிலான படைப்புகளில் சந்திரா டீச்சரையும், அத்தாரையும், மலரக்காவையும் காணல்லையே ஏன்? எனும் கேள்வியில் திகைந்திருந்த சயந்தனிடம் ஆதிரை தன் கதையைச் சொல்கிறாள். ஆதிரை தான் கேட்ட கால் நூற்றாண்டு கதைகளை யாவருக்குமானதாக உருமாற்றித் தந்திருக்கிறார் சயந்தன்.

எழுதிக் கடப்பதைத் தவிர இனியெந்த மார்க்கமும் இல்லையப்பா? சயந்தா என இத்திமரக்காரி செய்திட்டாள். இரவெல்லாம் மந்திர உச்சாடணத்தை தான் வாழ்வதற்கான நம்பிக்கையை தமிழ்க் குடிகள் பெற்று மேல் எழும்புவதற்கான யாவற்றையும் தரப்போகும் அவளுக்கான படையலையே நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்திமரக்காரியின் குளக்கரையில் வழிந்தோடும் நீர்த்திவலைகளில் எறியப்பட்ட கற்கள் எழுப்பிய ஒலியும், அலையும் திசா திசைகளுக்கும் நம்மைக் கடத்தித் திருப்புகிறது. தலைமுறை தலைமுறையாக நடத்தி வந்த வாழ்வைத் துறந்து காடேகிய போராளிக் கூட்டம், இனியான நாட்களை என்னதான் செய்து கடத்தப் போகிறது எனும் துக்கமிகு கேள்விகளை எதிர்கொள்ள முடியாது தடுமாறுகிறாள் ஆதிரை.

துவக்குகள், நிகழ்த்திக் கொண்டிருந்த அதிகாரப் படலம் தற்காலிகமாக ஓய்வெடுக்கிறது. அதன் முனையில் வெறி கொண்டிருந்த இனத்துவேஷம் அதிலிருந்து கிளம்பிய ராட்சச கரும்புகை மொத்த நிலத்தையே விஷக்காடாயிருக்கிறது. போர் எனும் மகாராட்;சசன் இப்போதும் தமிழ் நிலத்தில் பதுங்கிக் கிடக்கிறான். எளிய வாழ்வையாவது வாழ்ந்து விட மாட்டோமா? எனும் ஏக்கத்திலேயே நம் தொப்புள் கொடி உறவுகளை தள்ளி மூழ்கடித்ததையே போர் எனும் மாய அரக்கன் செய்து முடித்திருக்கிறான். இந்த நொடியில் கூட வெளிப்படக் காத்திருக்கும் அதன் விஷக்கத்தி தான் கிழித்தழித்த நிலத்தினில் தான் பதுங்கியிருக்கிறது. உலக வரைபடத்தினில் உறைந்திருக்கும் கன்னி வெடிகள் திகைக்கின்றன. வல்லாதிக்க ராணுவ டாங்குகளை சிதைத்திட புதைக்கப்பட்ட கன்னிவெடிகளை புதைத்துச் சென்ற போராளி இப்படியாகும் என ஒரு போதும் நினைத்திருக்க மாட்டான். வாழ்வதற்கான நம்பிக்கைகள் எச்சங்களாக மிஞ்சியிருக்கும் சமகாலத்தில் இதுவும் நடக்கவே செய்யும். நிலத்தில. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மறுகுடியமர்வு நிகழும் போதே அரசியல் அதன் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் நிகழ்த்தி நகர்கிறது. மனமெங்கும் அச்சம் சூழ்கிறது. சுற்றிலும் புதைப்பேறிய கண்கள் சூழ்ந்திருக்க தான் புதைத்த கன்னி வெடிகளை தானே அகற்றிடும் போராளியின் மனநிலையை எழுதித்தானே கடத்திட முடியும். சிங்கள ராணுவச் சர்வாதிகார போர்படை அணியை திகைத்து திரும்பச் செய்திட புதைக்கப்பட்ட கன்னிவெடிகள் இப்போது தன்னையகற்றி வெளியேற்றிடும் முன்னாள் போராளியைப் பார்த்து நகைக்கிறதா? உயிர் மூச்சைப் பிடித்து வைத்திருக்க மேற்கத்திய தேச தொண்டு நிறுவனம் கூலியென தந்த காசை கையிலேந்தித் திரிந்த அநதப் போராளியின் மனநிலை என்னவாக இருக்கும். மொத்த இனத்தையே பித்த நிலைக்குள் தள்ளி வீழ்த்திய போர் எனும் மாய அரக்கனின் விபரீத விளையாட்மையும், அது நிகழ்த்தியிருக்கும் மனக்காயங்களையும் சொற்கள் கொண்டு சொஸ்தப்படுத்தும சித்து விளையாட்டையே நாவல் என்றும், கதைகள் என்றும், கவிதைகளாகவும் எழுதிக் கடக்கிறோம். ஆறாத வடுவாக தங்கி விட்ட யாவற்றையும் இத்திமரக் காரியின் காலடியில் ஆதிரையெனும் படையலாக்குகிறார் சயந்தன். கடைசி யுத்தத்தின் துயர் கொப்பளிக்கும் நாட்களின் வெப்பமும், குரூரமும் தாங்கிட இயலாத துயரத்தோடு நகர்கின்றன ஆதிரைச் சொற்கள்.

தங்களுக்கான நியாயம் இதுவென்று தான் நம்புகிறது. தான் நம்பியவற்றை தன்னையொத்தவர்களையும் நம்பச் சொல்கிறது. இதற்கு மதப் பிரதிகளை வரலாற்று ஆவணமென மறு உருவாக்கம் செய்கிறது. தான் நம்பியவற்றை பிறரும் மற்றவரும் எற்பதைத் தவிர வழியெதுவும் இல்லை, ஏற்றுக் கொள்ளுங்கள். இதுதான் புராணம், இதுதான் ஐதீகம், இதுமட்டும் தான் வரலாறு. இப்படித்தான் இருந்தது இந்த நிலம் என்று நீங்கள் நம்பித் தொடர்வது என்றால் இங்கு இருக்கலாம். இல்லையென்றால் உங்களுக்கான நியாயங்களை இனி எங்களிடம் எதிர்பார்ப்பதில அர்த்மதில்லை. போர்க்கருவிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒற்றைப் பதில்களை ஏற்பதைத் தவிர உங்களுக்கு வழியெதுவுமில்லை. உலகெங்கும் நிகழ்த்தப்படுகிற ஆதிக்கக் கருத்தியல்களின் ஆதிச் சாவி மதக் கருத்துக்கள் தான். பிறரின் துயரம் ஆதிக்கவாதிகளின் நியாயமாகிவிடும் வித்தையை போர்க்கருவிகள் நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றன. ஆதிரையின் அறுநூறு பக்கங்களிலும் சயந்தன் விரித்து, விவரித்துக் காட்டித் தருவது இதைத்தான். இனத்துவேஷத்தின் உச்சத்தில் நிலத்தை நிர்மூலமாக்கிக் குதறிய மதப்பயங்கரவாதத்தின் குரூரமுகத்தினை ஆதிரைக்குள் வாசித்துக் கடக்க முடியவில்லை. வக்கற்று, வகையற்று, நாடற்று, வீடற்று, நிராயுதபாணியான போராளிகளின் பெருந்துயரத்தையே ஆதிரை தன்னுடைய முதல்க் கதைச் சொல்லாக வீசியெறிகிறாள். அதுவே ஓராயிரம் துயர்ச் சொற்களாக உருமாறி கதை கதையாக புரள்கிறது.

சிறைக் கொட்டடியின் விசாரணை வதைமுகாமிற்குள் சிக்கிக் கொண்ட ஏதிலிகளின் மனநிலையை எழுதியெல்லாம் கடக்க முடியாது. ஆற்றி;ட முடியாத துயரத்தின் பெரும்பொழுதுகள் அவை. குரூரஅபத்தத்தின் சாயல் படிந்திருக்கும் ஏதிலியின் சொற்களை திறந்து வெளியேற்றுவது எளிதானதில்லை. இருள், கரும் இருள், ஒளிக்கீற்றுப் புள்ளிகூட தென்படச் சாத்தியமற்ற மையிருள் அவனைப் போர்த்தியிருக்கிறது. சர்ப்பமென ஊர்ந்து வரும் சாவு அருகருகி வந்து திரும்புகிறது. வந்து வந்து போகும் மரண ரேகைகள் அவனைத் தற்கொலைக்குத் தூண்டாமல் இருக்கவா செய்யும்? சிங்களச் சிப்பாய்களின் தண்டனை முறைகள் உளவியல் நிபுணர்களின் யோசனைகளுக்கெல்லாம் எட்டாத வக்கிரங்கள். நம் படைப்பாளிகளால் எழுதிட முடியாது தேங்கியிருக்கும் சித்திரவதைக் குரூரங்களை எழுத வேண்டாம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அன்பின் வழியது உயர்நிலையெனும் பௌத்த அறநெறியின் உச்சம் மகாநிர்வாணம். துறவின் பெரும் உச்சமான நிர்வாணம் தலைகுப்புற கவிழ்ந்து சித்ரவதையின் குறியீடாகிறது. போர்க் கைதிகளை விசாரணைக் கூண்டிற்குள் நுழைத்திடும் போதே அவளை நிர்வாணமாக்கிவிடுவது சிங்களர்களுக்குள் உறைந்திருக்கும் மதத்தின் குரூரம்தான். மகாவிடுதலையின் அடையாளமான நிர்வாணத்தை அடக்குமுறையின் சாவியாக்கியதைத் தவிர இந்த கொடும் போhரினால் என்ன செய்திட முடிந்தது. இந்தப் பூமிப்பந்தினை சிதைக்கும் யுத்த வெறியர்களே எப்போது இதை நிறுத்துவீர்கள்? புத்தா நீயாவது கேட்கக் கூடாதா? என்று உரக்கக் கூவும் கியோமாக் கிழவி தங்களுடைய வன்முறைக்கும், அழித்தொழிப்பிற்கும் நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதத்தின் குறியீட்டு சாட்சி.

பசியெனும் துயரத்தைக் கடத்திடத்தானே தமிழனும், தமிழச்சிகளும் பத்தடித் தகரக் கொட்டகைக்குள் சிக்கிக் கொண்டோம். உலகின் இடப்பெயர்வுகளின் மையச்சரடு பசியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். உலகெங்கும் தோட்டக்காரன்களாக தமிழர்களை பிய்த்தெறிந்து போட்டது பஞ்சம். தலைமுறை கடந்தும் பஞ்சத்தை விட்டகன்றிட வழிதெரியாது திகைத்த பொழுதொன்றில் பிறந்திட்ட லட்சுமணனின் கதை வேறு. யாழ்ப்பாணத் தமிழர்களின் கதை வேறு என்பதை ஆதிரை காட்சிப்படுத்தவே செய்கிறது. சிங்க மலையின் ஞாபகக் குகையைத் திறந்து நகர்கிறது மலையகத் தமிழர்களின் துயரக் காட்சிகள். நாங்கள் யார்? எனும் கேள்வியை கங்காரு குட்டியாக சுமந்தலைய வேண்டிய பெருந்துயரத்தை பஞ்சமும், பசியும் அவர்களுக்கு சாபமாக்கிப் போட்டது. மலையகத்து மனுஷக் கூட்டத்தை எழுபதுகளின் துவக்கத்தில் நெருக்கிய போர்க்கருவிகள் சிங்களர்களுடையது மட்டுமன்று. உலக வல்லாதிக்கத்தின் பெரும் ஆதிக்கப் பசியும் அந்தப் போர்க்கருவிகளுக்குள் பதுங்கியிருக்கவே செய்தது. துரத்த, துரத்த தோட்டக்காட்டை விட்டு வெளியேறியது கூட்டம். வீடென்றிருந்த தகரக் கொட்டகையை தீக்கு தின்னக் கொடுத்து ஏதிலியாக இடம் பெயர்ந்தது தமிழர் கூட்டம். எதுவுமற்றவர்களால் எங்கும் வாழ்ந்திட முடியும் என்பது நகைமுரன் தான். எது தன் நிலம் என்பதில் இன்றுவரையிலும் தீராது நீடித்திருக்கும் குழப்பம் அவர்களுடைய பாதச் சுவடுகளில் அட்டைப் பூச்சியாகப் படர்ந்திருக்கிறது.

அட்டை குடித்து செறித்தது போக எஞ்சிய ரத்தம் சுண்டிய உடலோடு சமதளத்தினில் கொட்டப்பட்ட மனிதக் கூட்டம். தன் உடலோடு ஒட்டியிருக்கும் தோட்டக் காட்டான், கீழ்சாதிக்காரன் எனும் இழிகுறியீட்டை இதுநாள் வரையிலும் கூட சுமந்தே அலைகிறது. விரட்ட, விரட்ட வெளியேறி இந்தியா தான் திரும்ப வேண்டும்? அங்கிருந்து தானே தீட்டு, தீட்டு என திட்டி ஒதுக்கிய சொற்கள் துரத்தியிடித்திட மலையேறினோம். ராணுவமும், போலீசும் இப்போது நம்மை வண்டிகளில் ஏற்றி வவுனியாக் காட்டில் கொட்டி விட்டுச் சென்று விட்டதே என திகைத்து நிற்கும் காட்சிச் சித்திரத்தை பதிவுறுத்திய வகையில் ஆதிரை தனித்த நாவலாக தன்னை வெளிப்படுத்துகிறது. சமதளக் காடுகள் அவர்களை கட்டித் தழுவிக் கொண்டது. சொந்தத் தமிழ் ரத்தத்தோடு கலந்து போனார்கள். வேறு எங்கு போக முடியும் அவர்களால். மலையகத்துக்கே திரும்புவதா? தோட்டக் காட்டான் எனும் இழிகுறியைச் சுமந்தே தமிழ் நாட்டிற்கு போவதா? யாழ்ப்பாணத் தமிழர்களோடு ஐக்கியப்பட்டிருந்திட முடியுமா? தன்னால் பேதங்களின் சூழ்ச்சிவலையில் சிக்கித் தவித்தலைகிறது நம் தமிழ் இனம் மலையை விட்டகன்ற போதினில் சிங்க இனவெறிக் கூட்டத்தால் பிடித்துச் செல்லப்பட்ட மனுஷிகள் என்ன ஆனார்கள்? திரும்பவே முடியாத பெரும் தூரங்களுக்குள் கரும்பள்ளியாகிப் போன இளங்குருத்துக்களை இழந்து தவிக்கும் அப்பன்களின் துயரத்தைக் கடத்திட முடியுமா? கதைப் பிரதிகளால். ஆதிரையை வாசித்துக் கொண்டிருந்த பொழுதினில் நாவலுக்குள் காணாமல் போயிருந்த பதின்மூன்று வயது பெண் குழந்தையை தேடி தேடி பித்தேறிய கண்களோடு நிலத்தைக் கிண்டிக் கொண்டிருக்கும் தகப்பனின் காட்சிச் சித்திரம் உருவாவதை தவிர்த்திட முடியாது. எங்கேயெங்க என் உயிர்ப்பிறவி எங்கே எனும் கேள்விகளால் திணறிக் கொண்டிருந்த ஈழப்பெருவெளியின் எழுபதுகளும் கூட தோன்றிக் கொண்டே தான் இருந்தது.

கையகல நிலமும் கூட எவருக்கும் உரியதில்லை. சிதிலமடைந்து கிடக்கும் கட்டிடங்களும், இன்டஞ்செடிகள் ஊர்ந்து, நகர்ந்து சென்று உருவாக்கிய விரிசல் கோடுகளும், கோடுகளில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும், அவை வரையும் காட்சிச் சித்திரங்களும் அசாதாரணமானவை. வேற்று இயற்கைக் காட்சிகள் அல்ல அவை யாவும். யாவற்றையும் அழித்து வாழிடம் என உருவாக்கி விட்ட பிறகு அந்தந்த நிலத்திற்கு மட்டுமேயான பிரத்யேகமான மொழியும், கதைகளும் அவற்றை அழித்திடாது காப்பதற்கான நியாயங்களும் உருவாகி விடுகின்றன. பண்பாடு கலாச்சாரம் என்று தனித்தொன்று உருவான பிறகு எப்படி இவற்றை விட்டுக் கொடுப்பது என்ற மனநிலை கட்டமைக்கப்படுவதும் அதற்கான யுத்தங்கள் தொடர்வதும் தவிர்க்கவே முடியாததாகிறது. போர்தான் வரலாற்றை வடிவமைக்கிறது. போர்க்காட்சிகளே வாழ்வின் முடிச்சுகளாகின்றன. அதன் ராட்சசப் பசிக்கு உலகம் எத்தனை பலிகளை தந்து கொண்டேயிருக்கிறது என்பதையும், அப்போதையான மானுட குலத்தின் தவித்தலையும் மனதின் குறியீடே ஆதிரை. ஆதிரை ஒற்றை மனுஷியல்ல. அவள் ஒரு குறியீடு. ஒற்றைத் தன்மையில் அமையவே சாத்தியமற்ற ஓராயிரம் மனுஷிகள். சந்திரா டீச்சரும் மலரக்காவும் வாசகனுக்குள் கடத்துவது ஈழத்தின் கடைசி யுத்தத்தில் துயர்வுடைந்த பெண்களின் மன அரற்றலைத்தான். வெள்ளையக்கா, சோதிமலர், என விதவிதமான பெயர்களில் ஆதிரை உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறாள் நாவலுக்குள். இவர்களின் பெயர்களையெல்லாம் கண்மூடி உச்சரிக்கிற போது கரிக்கட்டையாக புகைந்து கொண்டிருக்கும் மரமும், மரத்திற்கு இடையே பூத்துப் பெருகும் செந்நிறத் தனல்களும் உருவாக்கிடும் துயரம் வாசகனை நிலைகுலையச் செய்கிறது.

புதிதாகத் துவங்கிவிட முடியாது எந்த வாழ்க்கைiயும், எதைக் கடக்கிற போதும் கடந்து சென்ற காலத்தின் காட்சிகள் அச்சுறுத்தவே செய்யும். எத்தனை வருடங்களாக துயந்திருந்த யுத்தம் இது. எவரை எவரையெல்லாம் நம்பி மோசம் போன வரலாறு இது. வெடிச் சத்தம் கேட்டுக் கேட்டு நம்பிக்கையற்றுப் போன மனிதக்கூட்டத்திடம் வாழ்ந்து விடலாம் எனும் ஆசை துளிர்விடுவது சாத்தியம் தானா? “இரவின் யோசனைகளையும், துயரமூச்சுக்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டு புத்துணர்ச்சியோடு விடிகிற நாள் பிறகு நேரம் செல்லச் செல்ல தண்ணீர் ஊற்றிய நெல் முட்டையைப் போல கணக்கத் தொடங்கி விடுகிறது…” இது நாவலுக்குள் நடராசனின் சொற்களாக சயந்தன் எழுதிப்படரும் காட்சிச் சித்திரம். இந்த நிமிடத்தில் கூட சிப்பாய்க் கூட்டம் உள்நுழைந்து விடக்கூடும். வாழ்விடத்தை நிர்மூலமாக்கி புலியொன்றோ, போராளியென்றோ உதைத்து இழுத்துச் சென்று தேவாலயத்திலோ, பள்ளிக்கூடத்திலோ மனிதக் குப்பையாக்கி விட்டு வெளியேறிவிடும் என்கிற பதட்டத்தோட கடந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து தான் வாழ்வதற்கான ஆசையும், காதலும் கூட பிறக்கிறது.

நாவல் முழுக்க வரலாற்றுக் காட்சிகளால் தான் நகர்கிறது. எண்பதுகளின் நடுவில் இந்திய அமைதிப்படை வந்ததை சாக்லேட் கொடுத்து வரவேற்ற தமிழன், நம்முடைய மூதாதை நிலத்திலிருந்து நம்மை விடுவிக்க வந்த படையிது என்று நம்பியதையும், பிறகு அவர்களுடைய இச்சைக்கும், யுத்த வெறிக்கும் பலியான நிலத்தின் கதையையும் ஆதிரை நமக்கு ஞாபகமூட்டி நகர்கிறாள். அந்த நாட்களில் தமிழர்களிடையே நடந்த உரையாடல்களை பின்னோக்கி நகர்ந்து சென்று காட்டித் தரும் காட்சிகள் ஆதிரையை தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த வரலாற்று புனைவாக்கமாக மாற்றி விடுகிறது “கேக்கிறேன் எண்டு குறை நினைவாக்க வேண்டாம். நீங்கள் உங்களை இப்பவும் ஒரு இந்தியராகத்தான் மனசில நினைக்கிறியளா? “நாடுன்னா என்ன…. நான் பொறந்த இடமா?…. அல்லது என் புள்ளைகள் பொறந்த இடமா? …. இல்லைன்னா ஒரு வேலையும், சம்பளமும் தர்ற இடமா…… இல்லையே நானும் புள்ளைகளும் நாளைக்கு காலலே உசிரோட எழும்புவோம்கிற நம்பிக்கையத் தர்ற பூமிதான நாடு இல்லையா….” இப்படியான எதார்த்த சித்தரிப்புகளே நாவலின் பலமும் கூட. வரலாற்றின் பக்கங்களை ரத்தத்தால் எழுதியெடுத்த நிலத்தில் தனிக்கல்லடியின் கதையும். இத்திமரக்காரியின் காட்சி சித்திரமும் நாவலை தனித்ததாக்குகின்றன. தங்களுடைய ஆதித்தாயான இத்திமரக்காரியின் காலடியில் தலையற்ற முண்டமாக தன்னுடைய தமையனைக் காண்கிற துயரத்தை நாமும் கூட தாங்கிட முடியாது தடுமாறுகிறோம். ஓடித்திரிந்த காட்டையே சல்லி சல்லியாக தேடிச் சலித்த போதிலும் தலை கிடைக்கவில்லை. தலையற்ற முண்டங்களையே தந்து விட்டுச் சென்றது இந்திய அமைதிப்படை என்பது வெறும் காட்சிப் பதிவுகள் மட்டுமல்ல இவர்கள் யார் என்பதைக் கண்டறிந்த கலைஞன் இப்படிப் பதிவு செய்கிறான்….. “அதாரடி வாணரங்கள்?” “வேற ஆர், அனுமாரின்ரை வாரிசுகள் தான். அவன் அப்ப இலங்கையை எரிச்சான். இப்ப இவன்கள் நம்மள எரிக்கிறான்கள். இந்தியன் ஆமி வருகுது எண்ட உடனே சனங்கள் பட்ட சந்தோசம் இந்தக் கால் அளவு தான். அவங்கள் திரும்பிப் போறாங்கள் எண்ட உடனே சனங்கள் பட்ட சந்தோசமிருக்கே …… அது இந்தக் கடலளவு …..” நாவலுக்குள் புரள்கிற என்பதிற்கும், தொன்னூற்றிற்கும் இடையேயான இருநூறு பக்கங்களும் நம்மை வெட்கம் கொள்ளச் செய்கின்றன. தொப்புள் கொடி உறவுகள் என்று பிதற்றிக் கொண்டிருக்க, அதிகார மையம் ஆடிய ஆட்டத்தில் சிதைந்து போன வாழ்க்கையை சரிசெய்து மேலேறுவது எப்படி எனும் கேள்வியையும் கூட நம்முள் ஏற்படுத்துகிறது. தனிக்கல்லடியில் இருந்து இந்தியன் ஆமி கிளம்பிட்டது என்ற நொடியிலேயே அவர்கள் நினைத்து கொள்கிறார்கள். நல்ல வேளையாக இந்திமரக்காரி கண் தொறந்து போட்டாள் என்று

போர்க்களத்தின் கடைசிக் காட்சிகளும், போரினில் காயம்பட்டு திரும்பி பின் வாழ்ந்திட எத்தனிக்கும் மனிதர்களின் மனநிலை என்னவாக இருந்தது என்பது மிகவும் முக்கியமான பதிவு. வரிப்புலியனாக களமாடியவன் வெள்ளையனாக திரும்பிய பிறகு அவனுடைய அடுத்த வேளைச் சோற்றிற்கு அல்லாடுகிறவனாக மாறிப் போகிறான். எதையும் இயல்பாக ஏற்கும் மனநிலையை போர் எப்போதும் ஏற்படுத்துவதில்லை. வரிப்புலியின் புலிப்படையிலிருந்து வெளியேறி வருகிறான். அவனுடைய விருப்பத்தின் பாற்பட்டதல்ல. காயம்படுவது களத்தின் இயல்புதான். களப்பணியானால் தியாகியாக்கிடும் நிலமிது. மாவீரர் நாளின் காட்சிகள் எழுதப்படாத ஈழ இலக்கியமே இல்லை தான். காயம்பட்டது உடலில் தான் என்றாலும், மனிதின் ஆன்மபலத்தை களம் ஏற்பதில்லை. உடலுக்குள் ஏறிய வெடிகுண்டு வதைக்கிறது மனதை. தன்னுடைய நிலத்தில் தான் உலவித் திரிந்த காட்டில் என்ன தொழில் செய்து பிழைப்பது எனும் கேள்வியில் வாடித் திரிந்து கொண்டிருக்கிறார்கள் போராளிகள். முன்னாள் போராளியை யாழ்ப்பாணமென்றாலும் சரி வல்வெட்டியாகினும் சரி ஏற்பதில்லை, துவக்குகளோடும், கன்னி வெடிகளோடும் திரிந்த வெள்ளையன் தேங்காய் உரித்திடக் கூடத் திரணியற்றவனாக நிற்கிறானே எதன் குறியீடு இது. இரண்டாயிரத்தின் துவக்கத்தில் எல்லோருக்குள்ளும் முகிழ்த்திருந்த சொற்களைத்தான் நாவலுக்குள் மயில் குஞ்சனும், வெள்ளையனும் அத்தரும் பேசிக் கொள்கிறார்கள். “நம்முடைய காலத்திலாவது பொடியங்களோட காலம் வந்திரணும்….” இந்த எளிய ஆசையை காலம் எப்படி நிர்மூலமாக்கி கலைத்துப் போட்டது என்பதையும் ஆதிரை அடுத்த அடுத்த கதைகளாக்கித் தொடர்கிறாள்.

எல்லாவற்றையும் செரித்து தின்று மேலேறுவதற்கான தந்திரத்தையும் ‘தைரியத்தையும் காலமே அவர்களுக்குவழங்குகிறது. இத்திமர மரக்குளத்தின் நிலழில் விளையாடித்திரிந்த பிள்ளைகளைப் போர்க்களம் நோக்கித் திருப்பியது காலம் தான். அமைதிப் பேச்சுவார்த்தையின் போதான மகிழ்வினைதுளியளவு நீடித்திருக்கச் சாத்திய மாற்றதாக்கி துவக்குகளையும்’டாங்கிகளையும் கன்னி வெடிகளையும் சுமந்திட நிர்பந்தித்ததும் கூடகாலம் தான். அந்த மகா அரக்கனின் விளையாட்டில் தோற்று விழுகிற தன் குழந்தைகளை தேற்றி மேலேற்றுகிறாள் இந்திமரக்காரி. போர் சிதைந்துக் கொண்ணடேயிருக்கிறது மனித வாழ்க்கையை. தான் பார்க்கச் சாத்தியமற்றககாட்சிகளையெல்லாம் அது குரூரமாக விரிக்கிறது. தன் உடலையே பிணமாக பார்த்திட முடியுமா?தன்னுடைய அண்ணனின போராளி உடல் கிடத்தப்பட்டிருக்கிறது’ அது நான் தான் என்று உறுதியாக நம்புகிறான். இன்று கிடத்தப்பட்டிருக்கும் உடல் என்னுடையதாக இல்லாமல் இருக்கலாம். நிச்சயமாக நாளையோ’ நாளை மறுநாளோ என்னுடையதாகப் போகிறது என்பது தான் போர்களக் காட்சிகள் உணர்த்திச் சென்றிருக்கும் நிஜம்.

கடைசி யுத்த களத்தின் காட்சிகளும் முள்ளி வாய்க்கால் துயரங்களும்’அண்டை தேசத்தவரின் அரசியல் சூழ்ச்சிகளில் வீழ்ந்து போன இன எழுச்சிப் போர்க் காட்சிகளும்வரலாற்றில் ரத்தக்கறைக் கொண்டு எழுதப்பட்டு விட்டது. போர்க்களத்தில்; சண்டமாருதம் செய்த புலிப்படையை பிள்ளைப்பிடிப்பவர்களைப் போல் சித்தரிக்கும் அரசியல் சூதை நாவல் கட்டுடைத்துக் காட்டுகிறது பல்வேறு இடங்களில் பேச்சு வார்த்தைகள். இனி தொடர்வதற்கான நம்பிக்கைகள் அற்றுப் போய்விட்டது. சமாதான மேசைகள் அகற்றப்பட்ட பிறகுஆயுதங்களை கைவிட்டு எப்படி விலகிட முடியும். ஆயுதங்கள் தூக்கி சுமக்க ஆளின்றி கைவிடப்பட்டு நிலத்தில் விழுந்துவிட்டது. வெற்றி இப்போது சாத்தியம் என்று சொல்லிமட்டும்தான் போர்களத்தில் நிற்க முடியுமா? அப்போதைய நாட்களில் தான் பள்ளிக்டத்துப் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிடாது படையணியில் ஐக்கியமானார்கள். புலிப்படைப் போராளிகள் உழைப்பாளிக் குடும்படுங்களில் இருந்தே உருவாகி வளர்ந்தார்கள். துட்டு உள்ள தமிழர்கள் எப்படியாகினும் லட்சம் செலவிட்டு அகதியாக வெளியேறி பிரென்ஸ்ற்கும், இன்ன பிற தேசங்களுக்கும் நம்முடைய பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் வெகுகுறியாக இருந்தார்கள். போர் தொடருமா? தேசம் கடந்த ஈழ அரசுஅமையுமா? பேச்சு வார்த்தை நீடித்துத் தொடருமா? எதுவும் நிச்சயமற்றதாகவும், உல்லாமும் கூட சாத்தியமானதாகவும் கூட காலம் தன்னை உருமாற்றிக் கொண்டிருப்பதை நாவல் காட்சிப்படுத்துகிறது. முள்வேலிக் கம்பிகளுக்குப் பின் உறைந்திருக்கும் பல்லாயிரம் கண்களில் இருந்து தெறித்து விழக் காத்திருக்கும் வார்த்தைகளாலேயே இனியான தமிழ்க் கதைகளை எவராலும் எழுதிட முடியும்.

நேர்கோட்டினில் கதைப் பிரதியை எழுதிய சயந்தனின் கைமீறிப் போன வார்த்தைகளை கோர்த்துத் தந்தவள் இந்திமரக்காரிதான். இந்திமரக்காரியின் சொற்கள் யாவும் முள்ளிவாய்க்காலின் பெரும் கதைகளைச் சுமந்து செல்லும் மாய உடல்களை அணங்குகளே தேர்ந்தன. அணங்கு தேர்ந்தெடுத்த சயந்தன் எனும் மாயாவி ஆடித் தீர்த்த பேயாட்டமே ஆதிரை என்றறிக வாசகா. ஆறாத வடுவாக தேங்கி விட்ட வரலாற்றைக் கீறித்தந்த சயந்தன் ஆதிரைக்குள் இறங்கினானா என்று பிரித்தறிய முதுடியாத பகுதிகள் நாவலின் கடைசி இருநூறு பக்கங்கள். ஆதிரையைக் கையிலெடுத்த வாசகன் அவனவன் தோதிற்கு கதைப் பிரதியை அழைத்துக் கொள்ளும் விசித்திரமும் கூட நடந்தேறுகிறது தமிழ்வாசகப் புலத்தில். ஆதிரையின் கதைப் பாடலை எந்தத் தடத்திலும் கண்டறிந்திட சாத்தியமே அற்ற வெண் பேராளிகளின் போர்ச் சங்கநாதம் என்கிறான் மற்றவன். தமிழ்நிலத்தின் தனித்த மகாகாவியம் என்கிறான் பிறிதொருவன். இவை மட்டும் தான் எனச் சொல்வதற்கும் இல்லை. இவையில்லை என ஒதுக்கித் தள்ளிடவும் வழியில்லை. ஆதிரைகளின் கதைமொழியை அவரவர் திசைவழியில் எடுத்திட ஒருநூறு திறப்புகளைக் கொண்டிருக்கிறது. அவையாவற்றையும் தனக்குள்ளே பதுக்கி வைத்திருக்கிறாள் ஆதிரை. தோட்டக் காட்டான் என நகைத்து புறமொதுக்கப்பட்டவன் விடுதலைப் போராளியான வம்ச சரித்திரம் இது. கலையவே மறுத்து இறுகியிருந்த வெள்ளாள மோஸ்தரய்யும், யாழ்ப்பாண மேதைமையையும் கலைத்து அடுக்கிய கலாச்சார பதிவிது. யுத்தச் சத்தங்களையே தங்களுடைய வாழ்வின் தினசரி பாடலாக வரித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திரளின் வரலாற்றுப் புனைவாக்கமிது. கதைகளை கதைக்குள் அடுக்கி, அடுக்கி மடக்கு விசிறியாக்கி சயந்தன் விரிக்கிற காகித வெளிகளில் ரத்தக் கவிச்சியடிக்கிறது. விசிறிகளின் மடிப்புகளை நீவிடும் மந்திரம் கற்ற வாசகன் இறக்கிட முடியாத ஆதிரையை சுமந்தலைகிறான். இனியான ஈழத்தின் கதைப் பாடல் ஆதிரையென்று அறிந்த பிறகு யாவரும் தான் அவளைச் சுமக்க வேண்டும். ஆதிரையை சுமந்தலையும் வாசக சாபத்தை வரமாக பெற்றுத் தொடர்க வாசகா!