ஹரி ராசலெட்சுமி

மறுமை அரங்கு

1/வரலாற்றின் தேவதூதாய் இலக்கிய எழுத்து

போர் முடிந்தது, சந்தை திறந்தது சரிதான் என்று நகர்ந்து விட முடியாத நிலை எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றுதான். வரலாறு முடிந்து போய் விட்டதென்ற உள்-உணர்வினாலும், உத்தரவாதமற்ற சுதந்திரத்தாலும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று அன்றாடம் புதிய நியதியாகியிருக்கிறது. தட்டையாக்கும், ஒன்றாக்கும் வெற்று அன்றாடம்.

எது எப்படியோ, எம் துறை எழுத்து! எழுத்தின் வலு, உபயோகம் மற்றும் பொருத்தப்பாடு பற்றி எம்மிடம் எவ்வளவுக்கு அவநம்பிக்கை உண்டோ, அந்தளவுக்கு நம்பிக்கையும் உண்டு. சுயவரலாறின்மையின் தாழ்வுணர்ச்சியும், எடையற்று மீந்திருப்பதன் கிலேசமும், நினைவின் பிடிபடாத்தன்மையும் சேர்ந்து உந்த, எமது நம்பிக்கைக்கு விரோதமாகிவிட்ட எழுத்தை எப்படியாவது வளைத்து நெளித்து, சட்டகங்களை உருவாக்கி; சிதறிக்கிடக்கிற எல்லாத்தையும் கூட்டியள்ளி நிரப்பி; எதிர்-வரலாறுகளையும், நினைவுகளையும், தொன்மங்களையும் உருவாக்க முனைகிறோம். நினைவுக் காப்பகத்திற்கான ஏக்கம், அதன் அசாத்தியத்தை விஞ்சி இயங்குகிறது. `போருக்கு-பிற்பட்ட` என்ற ஒட்டாத அகாலத்தை –அது தனக்குள் ஒளிக்க முயலும் நினைவுகளை/உண்மைகளை –எழுதிக் கடந்தேகலாம் என்று நினைக்கிறோம். ஆவணமாக்கும், தடயம் தேடும், நினைவுகாக்கும், வரலாறெழுதும் உந்துதல்களால் சமகால இலக்கியச் செல்நெறி ஊடுபாவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. இடிந்து கிடக்கிற எல்லாம் பதிவுக்கும் படிப்புக்கும் பாதுகாப்புக்கும் என்ற நிலை கடைசியாக எங்களுக்கும் வந்துவிட்டிருக்கிறது.

வோல்ட்டர் பெஞ்சமின் சொன்னது போல, வரலாற்றை இடிபாட்டுக் கற்குவியல் என்றே வைத்துக்கொள்வோம்.

Paul Klee, 1920இல் வரைந்த `வரலாற்றின் தேவதூதர்` என்னும் ஓவியம், திசையறு இடிபாட்டுக்குவியலில் அகப்பட்ட பெஞ்சமினுக்கு நம்பிக்கையளிக்கிறது. பெஞ்சமினைப் பொறுத்தவரை இத் தேவதூதர்:

`தான் காண்பதிலிருந்து விலகும் நிலையில் தோற்றமளிக்கிறார். அவர் கண்களும் வாயும் அகலத் திறந்திருக்கின்றன. சிறகுகள் அகல விரிந்திருக்கின்றன. வரலாற்றின் தேவதூதர் அப்படித்தான் தோற்றமளித்தாகவேண்டும். அவரது முகம் கடந்த காலத்தினை நோக்கியிருக்கிறது. எங்கு நிகழ்வுகளின் சங்கிலித் தொடர்போன்மை நாம் காண்கிறோமோ, அங்கு அவர் காண்பது தனித்த பேரழிவு. அப்பேரழிவு கற்களைக் குவித்துத் குவித்து அவர் முன் வீசுகிறது. செத்துப் போய் விட்டவர்களை உயிர்ப்பிக்கவும், இடிபாடுகளைத் தூக்கி அடுக்கவுமாய், வடிவாய் ஒருகணம் சுதாகரித்து நிற்க அவருக்கு விருப்பம் தான்; ஆனால், சுவர்க்கத்திலிருந்து புயலடிக்கிறது. சிறகுகளிடையே வலுவாகப் புகுந்த காற்று , திருப்பி மூடிக்கொண்டுவிட முடியாதபடிக்கு அவற்றை விரித்துப் பிடித்திருக்கின்றது.. எதிர்காலத்துக்குப் புறங்காட்டியபடியே அக்காலத்துள் அடித்துச்செல்லப்படுகிறார் தேவதூதர். அவர்முன் இடிபாட்டுக் கற்குவியல் வானுயர வளர்கிறது. முற்போக்கு என்கிறோமே, அது இந்தப் புயலைத்தான்.`

தரிசனம்-நிலை-பறப்பு என முக்காலங்களிலும் உடல்கொண்ட க்ளீயின் தூதர், அம் மூன்று காலங்களின்றும் ஓரளவுக்கு விலகியும் இருக்கிறார். புயல்காற்று அவரது நிலையை எப்போதும் முன்னோக்கி நகர்த்திக்கொண்டே இருக்கிறது. இறங்கி வந்து இடிபாடுகளைச் சீர் செய்ய விருப்பமிருந்தாலும், காற்று அவரை எதிர்காலம் நோக்கித் தள்ளுகிறது. கடந்த/கடந்துகொண்டிருக்கும் காலங்களின் இடிபாட்டுக் கற்கள் காலடியில் குவியக் குவிய, அவர் அதையெல்லாம் கண்ணுற்றபடியே நகர்த்தப்பட்டுவிடுகிறார். அவர் வரலாற்று இயங்கியலின் ideal உருவகிப்பு. இந்தவகைப்பட்ட நிலை, அன்றாட மானுட எத்தனத்தில் வாய்க்கப்பெறாத ஒன்று. அதனால் தான் பெஞ்சமின் தெய்வீகத்தை உருவகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நானோ நீங்களோ தேவதூதர்கள் ஆகிவிட முடியாது; நாங்கள் இந்த இடிபாட்டுக்குவியலில் உருளும் சக துண்டங்கள்: எறிபடுகிறோம், குவிபடுகிறோம், குன்றாய் உயர்ந்து சரிகிறோம். வரலாற்றின் தேவதூதர் எங்களையும், பாடுகளையும் கண்ணுறுகிறார். சாட்சியாயிருக்கிறார். இம்மையின் மறதிக்குள்ளும், பிக்கல் பிடுங்கல்களுக்குள்ளும் அகப்படாமல், எதிர்காலத்துக்குள் அடித்துச் செல்லப்படும் இந்தவகைச் சாட்சியம் நம்பிக்கை தருவது ஒன்றும் புதிய விடயமல்ல.

இத் தேவதூதைப் போலவே, எழுத்தும் இம்மையின் இடிபாடுகளைக் கடந்தேகவல்லது என்று நாம் நம்புகிறோம். நேரடி அனுபவிப்பும், அதை வாய்ப் பேச்சில் எடுத்துச்சொல்வதும் காலத்தாலும், இடத்தாலும் மட்டுப்பட்ட விடயங்கள். ஆனால், எழுத்தோ இரண்டையும் மீற வல்லது. அதுதவிர, கமெராவிலோ, ஆடியோ ரெக்கார்டரிலோ பிடிபடாதவற்றையும் கூட தன்வயப்படுத்திவிடும் பண்பு எழுத்தைத் தவிர வேறெந்த தொழில்நுட்பத்துக்கு வாய்த்திருக்கிறது? எழுத்து நிறைசாட்சியம்! அசலான தேவதூது! இப்படியாக எழுத்தைக் காண்பதுவும், நம்புவதும் நீண்ட உரையியல் (hermanutics) தொடர்ச்சி கொண்ட தமிழ்மரபில் இன்னும் எளிதாக, இயல்பாக நடந்துவிடுகிறது. எழுத்து நேர்மையாய் இருக்கவேண்டும், நியாயமளிக்கவேண்டும் போன்ற வெகுசன எதிர்பார்ப்புகள் ஒருவேளை இந்த உருவகிப்பின்பாற்பட்டவை போலும்.

நிகழ்கணத்தில் எழுதுகிறீர்களென்றால், அதை நான் வாசிப்பது எதிர்காலத்தின் கணப்பொழுதொன்றில். ஆக, எப்போதுமே எழுத்தின் கதி எதிர்காலம் நோக்கியது. மறுமையை, அதற்கான சாத்தியத்தை, அதை நோக்கிய நன்நம்பிக்கையை (அல்லாது போனால் எச்சரிக்கையுணர்வை) எழுத்தென்கிற தொழில்நுட்பம் உறுதிசெய்கிறது. இலக்கிய மரபில் முன்வைக்கப்படும் எழுத்து, சராசரி எழுத்தை விடவும் வலிமை வாய்ந்த ஒன்று. பண்பாட்டில் இந்தவகை மொழிதலுக்கு இருக்கும் இடம், இலக்கியநெறி/விமர்சன மரபுகள் ஊடான பரவலாக்கம், நிறுவன அங்கீகாரம் என்று பல ஏற்பாடுகளின் வழியாக எதிர்காலம் நோக்கிய நகர்வு உறுதியான ஒன்றாக ஆகிவிடுகிறது. பெஞ்சமின் சொல்கிற சுவர்க்கம், அதிலிருந்து பிறக்கும் காற்று இதுதான் என்றும் வாசிக்கலாம். முற்போக்கான தொழில்நுட்பங்கள்.

இலக்கியத்துக்கு வாய்த்திருக்கிற இந்தச் சலுகை நிலை பற்றிக் கேள்விகளும் சந்தேகங்களும் நிச்சயம் உண்டு. இத்தேவசாட்சியத்தின் பார்வை எதைக் காண்கிறது, எதைக் காண மறுக்கிறது என்று யாருக்குத் தெரியும்? இன்னொரு விதமாகச் சொல்லிப்பார்த்தால், இச் சாட்சியத்தின் பார்வைக்கு முன்னால் எதைக் காட்டுகிறோம், எதை மறைக்கிறோம்? பச்சையாக உண்மையைச் சொல்லப்போனால், விலகிநிற்கிற, நடுநிலையான இத்தெய்வீக அமானுஷ்யம் – கைவிடப்பட்ட நப்பாசைகள், ஏக்கங்களின் எறிகாட்சியன்றி (projection) வேறில்லை. அதன் கருணையும்,பாராபட்சமற்ற நோக்குநிலையும் எமது கற்பிதங்கள் தான். நீங்கள் எங்கிருந்துகொண்டு எறிகாட்சியை விழுத்துகிறீர்கள் என்பதில்தான் வித்தியாசங்களைக் காணமுடியும். அதிகாரத்தின் மையத்திலிருந்தொரு காட்சியென்றால், விளிம்பிலிருந்து இன்னொன்று.