ஹரி ராசலெட்சுமி

ஆறாவடு நாவல் எழுதப்பட்ட காலத்தில், தமிழ் இனத்துவத் தேசியத்தின் நிலவரம் நடுக்கடல்; நம்பிக்கை ஏதோ ஒரு கரை. அப்படியான கரையொதுங்கலில், உலகத்தின் வெவ்வேறு தேசிய விடுதலை உணர்வுகளுடன் தொடர்புற முடிந்தால், அதுவே பெரிய விசயம். இலங்கைக்கு அப்பாற்பட்டு, போராட்டத்தின் மறுமையை/தொடர்ச்சியை, அத்தொடர்ச்சிக்கு இருக்கிற உலகளாவிய பொருத்தப்பாட்டைக் கற்பனை செய்கிற அவசியம் ‘ஆறாவடு’ நாவலின் அடிப்படையான உந்துசக்தி. இக்காலகட்டத்தில், தமிழ்த் தேசியவாதத்தின் தொடர்ச்சி ‘நாடு கடந்த தமிழீழம்’ போன்ற உருவாக்கங்களினூடு கற்பனை செய்யப்பட்டதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

ஆதிரை வெளிவந்திருக்கிற 2015இல் புலம்பெயர்ந்தவர்கள் விடுமுறையில் இலங்கைக்குத் திரும்பிச்சென்று வருவதெல்லாம் சாதாரணமாகியிக்கிறது. கடலில் அலைகிற நிலையில்லை இப்போது. தேவைப்பட்டால், போய் மண்ணைக் கிண்டிக் கிளறி வீடு மட்டுமல்ல, ஹாட்டல்கள், திருமண மண்டபங்கள் கூடக் கட்டிக் கொள்ளலாம். எரித்ரியக் கடற்கரையில் `ஆறாவடு` உருவகித்த `இலங்கைக்கு அப்பாற்பட்ட தேசியவிடுதலை` என்ற கற்பனைக்கான `அசல்` காலாவதியாகிவிட்டிருக்கிறது. கரைதேடும் எடுத்துரைப்பும் இத்தோடே நின்று போய் விட்டிருக்கின்றது. பதிலாக, மண்ணுக்கும், இடத்துக்குமான நேரடிப் பெறுவழி (access) கிடைத்திருக்கிறது. இந்தச் சலுகை, தடயவியல் உந்துதலை இலக்கியத்தில் தோற்றுவிக்கிறது. இம்முறை சயந்தனுடைய களம் கடல் அல்ல, மண். `ஆதிரை` நாவலின் இறுதிப் பக்கங்களில் மிதிவெடி அகற்றும் நோக்கில் மண் அகழப்படுகிறது; ‘ஆதிரை’ என்ற பெண்போராளியின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. நினைவுகள், துக்கம், ஆத்திரம் எல்லாம் திரும்பவும் மேலெழுகின்றன. 656 பக்க எடுத்துரைப்பில் ஒருபோதும் தென்படாத இந்த ஆதிரையின் கதையை, இறுதி அத்தியாயம் விவரிக்கிறது. ஆறாவடுவில் வருவதைப் போலவே, தனித்த இறுதி ஏழு பக்கங்களில் ஆதிரையின் பின்புலம், பிறப்பு, பெயர்க்காரணம், வளர்ப்பு, இழப்புகள், போர்ப் பயிற்சி மற்றும் கள அனுபவத்தைத் தெரிந்துகொள்கிறோம். ஆனால், இத்தெரிந்துகொள்ளலுக்கு முன்பாகவே நாவலில் ஆதிரை-யின் இறப்பு/சடலம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டுவிடுகிறது.

இரண்டு நாவல்களிலுமே, தமிழ்த் தேசியத்தை வேறு வேறு உடல்கள் மாறி மாறிச் சூடிக்கொள்கின்றன. தமிழ்த்தேசியத்தின் பண்பு-உடலங்களாக (embodiments) இருக்கும் இந்தக் கதாபாத்திரங்களை, நாவல் தவிர்க்க முடியாத துன்பியல் முடிவை (படுகொலையை) நோக்கி நகர்த்துகிறது. காதல், அன்பு, விடுதலை வேட்கை, பரிந்துணர்வு எல்லாம் உள்ள இந்த மனித உடல்கள் சந்திக்கும் குரூர துன்பியல் மிகைக்கான ஆற்றுபடுத்தலை, ஆறாவடு-வும், ஆதிரை-யும் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும் பக்கங்களில் ஊகிக்கின்றன. சடலமா அல்லது நினைவுத் திருவுருவமா? முடிவுக்குப் பின்னர் எந்தவகையான வாழ்வை அல்லது ஏற்றுக்கொள்ளலாம்? எந்தவகை வாழ்வுக்கு இனிச் சாத்தியம் உண்டு? உபயோகமான கட்டுறுப்பாக பிற தேசங்களில் கரையொதுங்கலாமா? அத்தேசங்களின் தேசிய விடுதலை உடல்களுக்குள் எம்மைப் பொருத்திக் கொண்டு விடுவதன் மூலம் ஆறுதல் அடையலாமா? இவை ஆறாவடுவின் கேள்விகள். `ஆதிரை`யிலோ மண் இனத்துவத்துக்கான தடயங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. மிதிவெடிக்காக மண்ணைக் கிண்டினால், தமிழ்த் தேசியத்தின் இனத்துவ, குடிமைப் பண்புகளை சரியான அளவில் உட்செரித்துக்கொண்ட பண்பு-உடலம் கதையாக மேலெழும்புகிறது. நினைவு = சடலம். காலம் ,அதன் மறதி = மண். கதை = உயிர்மைத் திராவகம் (கண்ணீர், குருதி இன்ன பிற).

நாவல் வடிவம் தனிப்பட்ட கதாபாத்திரங்களின் நெருக்கடிகளைச் சித்தரிப்பதாகத் தோன்றினாலும், அடிப்படையில் அது தேசிய இருப்பையே கருத்துருவகம் செய்ய முனைகிறது என்று ஃப்ரெட்ரிக் ஜேம்ஸன் வாதிட்டிருக்கிறார். தேசக்கட்டுமானத்துக்குத் தேவைப்படுகிற வெற்று, ஒன்றாக்கும் காலத்தை (empty, homogenizing time), தினசரிகளும், எதார்த்த நாவல் வகைமையும் கட்டமைக்கும் விதத்தை என்பதை பெனடிக்ட் ஆண்டர்ஸன் சுட்டிக்காட்டியிருக்கிறார். திகதியிடப்பட்ட நாவல் (epistolary novel) உபயோகித்துக் காலத்தை ஒருங்கிணைத்து எல்லா குடிமக்களுக்கும் பொதுவானதாக்குகிறது. குறிப்பிட்ட வெற்றி, தோல்விகள், அசம்பாவிதங்கள் எல்லோருக்கும் பொதுவான monumental timeஆக வரலாறாகி விடுகின்றன. சொல்லப்போனால், நாவல் வகைமையின் பணியே இதுவாகத்தான் ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆரம்பகால அமெரிக்க, பிரித்தானிய, ஜெர்மனிய நாவல்கள் தேசிய உணர்வுற்ற தன்னிலைகளைக் கட்டமைக்க எங்கணம் உதவி புரிந்தன என்பதை வகைதொகையாக வாசிக்க முடியும். சயந்தனின் நாவல்கள் இந்த வகைமையைச் சார்ந்தவை. திகதியிடப்பட்ட அத்தியாயங்களாலும், தலைப்புச் செய்தியுருக்களால் வெவ்வேறு வர்க்கங்களை, பிரதேசங்களைக் கதை பிணைக்கிறது. செய்திப்பரவலாக்கத்துக்கும் தனிக் கல்லடிக் கிராமத்துக்குமிடையான ஊடாட்டத்தை ஆதிரையில் ஒரு கதாபாத்திரம் இப்படி உணர்கிறது: `எல்லைக்கிராமங்களில நடக்கிற சிங்களக் குடியேத்தங்களையும் ஒரு செய்தி மாதிரித்தானே அறியினம். மற்றும்படி யூனிவெர்சிற்றியில தரப்படுத்தல் எண்டதைப் பற்றி தனிக்கல்லடியில யாரும் கவலைப்பட நியாயமில்லைத்தானே.`