ஹரி ராசலெட்சுமி

அதிகார மையங்களால் எழுதப்பட்ட வரலாறுகளுக்குள் விளிம்பின் இடப்படுத்தல்களையும், எழுதப்படுதலின் வன்முறையையும் குறித்து 80களின் இறுதியிலும், 90களின் ஆரம்பத்திலும் தமிழில் நிறையவே ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பின்-அமைப்பியல் சிந்தனை, சபால்டேர்ன் வரலாற்றெழுத்தியல், பெண்ணியம் மற்றும் தலித்தியத்தால் ஊக்கம்பெற்ற விமர்சனமரபு தமிழில் மிகவும் கச்சிதமான தாக்கங்களையும், மாற்றங்களையும் உண்டு பண்ணியிருக்கின்றது. இந்தப் படிப்பினைகள் இலக்கிய எழுத்தையும் வடிவத்தையும் சிக்கலுக்குள்ளாக்கியிருப்பதற்கான சிறந்த உதாரணமாக ஷோபா சக்தியை எடுத்துக் கொள்ளலாம். பெருங்கதையாடலுக்கான உணர்வெழுச்சிகளை அங்கதம் மூலம் கட்டுறுத்துவதும், மொழியின் உன்னதமாக்கலை பகடி மூலம் கவிழ்ப்பதுவுமான நடையை ஷோபாவிடம் வாசிக்கிறோம். அவரது புனைவுகளில் சுயங்களும், தன்னிலைகளும் ஒத்திப் போடப்படுகின்றன, எடுத்துரைப்பின் தேவை முடிந்ததும் ரத்துச் செய்யப்படுகின்றன. உணர்வேற்றத்துக்கான கச்சாப்பொருள் துயர்மிகுதியில்/திளைப்பில் மாத்திரம் இருந்தன்றி, பிம்பங்கள்/ பிரதிமைகள்/ செய்தியுருக்களில் இருந்தும் இரவல் வாங்கப்படுகிறது. எதுவும் அசலான அசலில்லை. ஷோபா சக்தி முன்வைக்கும் தன்னிலைகள் எல்லாமே ஒரிஜினல் இல்லாத காப்பிகள். சினிமாத் திரை, வானொலிச் செய்தியறிக்கை, மேடைப்பேச்சுகள், சுவரொட்டிகள் மற்றும் தெருநாடகங்கள் நிறைந்தது அவரது புனைவுலகம். நம்பகத்தன்மைக்கான எதிர்பார்ப்பை இந்தவகைப் புனைவு சிக்கலுக்குள்ளாக்கிவிடுகிறது. பெருங்கதையாடலை அவாவும் தன்னிலையை மைய-நீக்கம் செய்வதால் உருவாக்கித்தரப்படும் இலக்கியவெளி, தனது உள்ளார்ந்த வன்முறையைக் கைவிட்டுவிடும் என்ற நம்பிக்கையில் ஒருதொகை பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்றிருக்கின்றன (காண்க: ஷோபா சக்தி, சுகன் தொகுப்புகள்). இப்படியான பண்படுதல், சிறுகதையாடல்களை வரவேற்கும், மற்றமைகளை ஏற்றுக்கொள்ளும், கொண்டாடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

பெருங்கதையாடல் வடிவங்கள் கவிழ்க்கப்பட்டதெல்லாம் பழைய கதை. மையம், விளிம்பு, கட்டுடைப்பு போன்ற பிரயோகங்கள் தமிழிலேயே சலிப்பூட்டும் தேய்வழக்காகிவிட்டிருக்கின்றன. ஆக, என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? நவீனத்துவம் முடிந்து போய்விடவில்லை, மாறாக அது கரைந்து திரவநிலையில் இருக்கிறது என்பார் Zygmunt Bauman. இல்லை, நவீனத்துவத்தின் இடுபாடுகளுடன், நவீன உன்னதங்களையும், பேரவாக்களையும் பேய்ப்பீடிப்பாக உணர்ந்தபடி வாழ்கிறோம் என்று வாதிடுகிறார் Jean-Michel Rabat. நவீனத்துவத்தின் தோல்வியையும், பயனற்ற தன்மையையும், உள்ளார்ந்த வன்முறையையும் அகம்பாவத்துடன் ஒப்புக்கொண்டபடியே அதன் தொடர்ச்சியை விரும்புகிற மெட்டாநவீனத்துவ நிலவரத்தின்கீழ் வாழ்கிறோம் என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அமெரிக்க இன்றைய திரவ/பேய்/மெட்டா நவீனத்துவ நிலவரங்களின் கீழ், அசட்டுத் திடசங்கற்பத்துடன், இலக்கிய வடிவங்கள் தம்மை மீட்டெடுத்துக்கொள்ள எத்தனிக்கின்றன. என்ன செலவானாலும் சரி பெருங்கதையாடல்களை நிகழ்த்தி, வாழ்ந்துபார்த்துவிடுவதற்கான எத்தனங்களை எல்லா இடங்களிலும் காணக்கூடியதாகவே இருக்கிறது. பின் நவீனத்துவ கொண்டாட்டங்கள் கவிழ்ப்புகளுக்குப் பின்னரான சுதாரிப்பும் மீள்-ஒழுங்காக்கமும் தவிர்க்க முடியாத ஒன்றென்றும், அது ஃபாஸிசத்தின் வடிவத்தை எடுக்குமென்றும் அமெரிக்கா குறித்து ரிச்சார்ட் ரோர்ட்டி 1998இல் எழுதியதைப் போலவே, இன்றைய திகதியில் மாற்றங்கள் நிகழ்வதைக் காண்கிறோம். ரோர்ட்டியின் எச்சரிக்கையை எதிரொலிக்கும் விதமாக, தெல்யூஸிய பெண்ணிய அறிஞர் இஸெபெல் ஸ்டெங்கெர்ஸ் கடந்த வருடம் `பெருங்கேடுதரும் காலத்தில்: எதிர்வரவிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்ப்பதெப்படி` என்றொரு முழுநீளப் புத்தகத்தையே எழுதி வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய அழகியலுடைய நிலவரம், மேற்கண்டதைப் போன்றதே. எல்லாப் பெருங்கதையாடல்களையும் போலவே, மிக மோசமான விமர்சனங்களையும், கவிழ்ப்புகளையும், கைவிடப்படுதலையும் தன் காலத்தில் அது சந்தித்திருக்கிறது. தமது இனப் பெருமிதங்களையும் கழிவிரக்கங்களையும் outsource செய்கிற தமிழ்நாட்டுப் புத்திசீவிகளைத் தவிர்த்துப் பார்த்தால் – தமிழ்த்தேசியம் தீவிர சிந்தனைக்குரிய செலாவணியை இழந்து நீண்டகாலம் ஆகிறது. தமிழ்த்தேசியம் விரும்பியோ விரும்பாமலோ தனது சிவில் முகத்தை அரசியலில் காட்டிக்கொண்டிருக்கிற இன்றைய தேதியில், இனத்துவத்துக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? இனத்துவத்தின் மறுமையை யார் கனவு காண்கிறார்கள்? யோ.கர்ணனின் குற்றமொப்புக்கொள்ளும் பிரதிகள் இனப்பெருமிதத்தைக் கைவிட்டதாகக் கருத இடமில்லை. யோ.கர்ணனில் மனிதாபிமான வாக்குமூலத்துக்காக ஒத்திப்போடப்பட்டிருந்த இனத்துவ சுயம், குணா கவியழகனிடமும், சயந்தனிடமும் சடலமாக மீட்டெடுக்கப்படுகிறதைக் காண்கிறோம். தேசியவாதக் கற்பிதத்தில் சடலம் ஒருபோதும் வெறும் சடலம் அல்ல. அது விதையுடல்; புத்துயிர்ப்புக்கான வாக்களிப்பு. இரத்தமும் கண்ணீரும் நினைவுமாக இனத்துவம் திரும்பவும் சுயம்கொள்ள ஆரம்பிக்கிறது.

2009க்கு பிற்பட்ட வருடங்களின் ஏழாண்டு இலக்கிய வரலாற்றில், எதை இறக்கி வைக்கின்றோம், எதை ஏற்றி வைக்கின்றோம் என்பதை அவதானித்தால் இந்தப் போக்கு நன்கு புலப்படும். எழுத்தெனும் தேவதூது விடுபடலிருந்து இறங்கி, இடிபாடுகளுக்குள் நிற்கிறது. தடயம் தேடும் கருவியாக, நினைவை அகழும் கருவியாக, மருந்திடும் வலி நிவாரணியாக எல்லாம் அது பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெஞ்சமினின் தேவதூதருக்கு `வடிவாய் ஒருகணம்` இறங்கி வந்து இப்படியான பணிகளில் ஈடுபட விருப்பம் தான், ஆனால் அப்படி இறங்க முடியாதபடி காற்று அவரை எதிர்காலம் நோக்கித் தள்ளுகிறது. முற்போக்கின் எந்தக் காற்றும் அடிக்காத சூழல் எம்முடையது போலும்.

இந்த எழுத்தியக்கத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் விமர்சன மரபு தன்னை புதுப்பித்துக் கொள்ளாதிருப்பது இன்னும், இன்னும் நிலவரங்களை மோசமாக்குகிறது. கட்டமைக்கப்படும் கூட்டு நினைவு, அதன்வழிப்பட்ட அடையாளம், அது முன்வைக்கும் அரசியல் போன்றவை பற்றிய கரிசனை, சமூகம் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிற கதைகளில் இருந்து ஆரம்பித்தாக வேண்டும். கடந்த காலம் பற்றிய எடுத்துரைப்புகளுக்கும் அடையாள அரசியலுக்கும் இருக்கிற தொடர்பு மிகவும் வலிமையான ஒன்று. “கடந்தகாலம் தொடர்பான எடுத்துரைப்புகள் வேறுபட்ட விதங்களில் நம்மை நிலையுறுத்துகின்றன. அதேவேளை, இக்கதையாடல்களுக்குள் நம்மை நாமே நிலையுறுத்தியும் கொள்கிறோம். இந்த வெவ்வேறு விதங்களுக்கு நாம் வழங்கிக்கொள்கிற பெயர்களே அடையாளங்கள்” என்கிறார் ஸ்ரூவர்ட் ஹால்.

2/வரலாற்றுக்கு-பின்னான மறுமையும், ஊக-எதிர்காலங்களும்

வரலாறு முடிந்து போய்விட்ட உணர்வு சயந்தனின் இரண்டு நாவல்களிலும் அதீதமாக இயங்குகிறது (ஆறாவடு 2012; ஆதிரை 2015). ’ஆறாவடு’வின் போராளிக் கதாநாயகன் இலங்கைத் தீவில் காயப்படுகிறான்; காலிழக்கிறான். ஃபைபர்கிளாஸ் செயற்கைக்கால் பொருத்தப்படுகிறது, ஆனால் வாழ்வோ, காதலோ இத்தீவில் நிச்சயமில்லை. கடல்வழியாகத் தீவை விட்டு வெளியேற முயல்கிறான். ஆனால், முடிவு ஈவு இரக்கமற்று துரத்திக்கொண்டு வந்து அவனை மூழ்கடிக்கிறது. அவனுக்குப் பொருத்தப்பட்ட செயற்கைக்கால் கடலில் மிதக்கிறது. முடிவையும், அதைநோக்கிய பயணத்தையும் 20 அத்தியாயங்கள் செலவழித்துத் துன்பியல் மரபில் சித்தரிக்கும் நாவல், அதன் பின்னான தொடர்ச்சியை, தனித்த இறுதி அத்தியாயமொன்றில் கற்பனை செய்கிறது: கடலில் மிதக்கும் செயற்கைக் கால், எரித்ரிய மீனவக் கிராமத்தில் கரையொதுங்கிகிறது. தேசவிடுதலைக்காய் எரித்ரிய மக்கள் விடுதலை முன்னணியில் போரிட்டுக் காலை இழந்த இத்ரிஸ் என்கிற கிழவன் இந்த ஃபைபர்க்ளாஸ் செயற்கைக்காலைக் கண்டெடுக்கிறான்.