நேர்காணல் – அம்ருதா மாத இதழ்

amruthaஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் தொகுதி. இப்பொழுது வந்திருப்பது “ஆதிரை“. வந்த சில வாரங்களிலேயே அதிகமான உரையாடல்களை “ஆதிரை“ உண்டாக்கியுள்ளது. ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் என்ற தளத்தில் கட்டமைந்திருக்கும் ஆதிரை எழுப்புகின்ற கேள்விகள் பல கோணங்களில் ஆயிரமாயிரம்.

“யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன்“ என்று கூறும் சயந்தன் யாழ்ப்பாணம், சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்து போர்க்கால வாழ்வின் வழியே இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர். பின்னர், வன்னியிலிருந்து மீண்டு புலம்பெயர்ந்தவர்.

சயந்தனுடனான இந்த நேர்காணல் இணைய உரையாடலின் வழியாக நிகழ்த்தப்பட்டது.

– கருணாகரன்

ஆறாவடுவுக்குப் பிறகு ஆதிரை. எப்படி உணர்கிறீர்கள்?

ஆறாவடு எழுதிமுடித்தபோதிருந்த நிறைவு இப்போது ஆதிரையிலும் இருக்கிறது. ஆனால் ஆறாவடு மீது இப்போது நிறைவில்லை. இதுவே ஆதிரைக்கும் நிகழக்கூடும்.

ஆதிரை கொண்டிருக்கும் கலையும் அரசியலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? மனதில் உருவாகிய வெளிப்பாடா?

2009இல் யுத்தம் முடிந்து 4 வருடங்களிற்குப் பின்னர் வன்னியில் என்னோடு கூடப்படித்த ஒருவனைச் சந்திக்கச் சென்றேன். படிக்கின்ற காலத்தில் அவனுடைய அம்மா அப்பம், போண்டா, சூசியம் முதலான உணவுப் பண்டகளைத் தயாரித்து பள்ளிக்குட வாசலில் வைத்து விற்பதற்காக எடுத்துவருவார். பாட இடைவேளைகளின் போது அம்மாவிற்கு உதவியாக அவன் நிற்பான். போர் அந்த நண்பனுடைய ஒரு காலைக் கவ்விக் கொண்டுபோயிருந்தது. இப்பொழுது அவன் ஒரு பலசரக்குக் கடை வைத்திருந்தான். வெறுமையாகக் கழிந்த நமக்கிடையிலான உரையாடலின் ஏதோ ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் எப்படி வதிவிட உரிமைகளைப் பெறமுடியும் என்பதைப் போன்ற அவனுடைய இயல்பான ஒரு கேள்விக்கு யுத்தத்தைக் காரணம்காட்டித்தான் என்று சட்டென்று சொல்லிவிட்ட அடுத்த நொடியிலேயே அவனுடைய கண்களை எதிர்கொள்ளும் தைரியத்தை நான் இழந்துவிட்டிருந்தேன். ஆதிரைக்கான முதற்புள்ளி அப்பொழுதே உருவாகியிருக்க வேண்டும்.

 

அப்படியென்றால் உள்ளுணர்வில் எழுந்த கேள்விகளின் அலைக்கழிப்பிலிருந்து ஆதிரை உருக்கொண்டுள்ளது எனலாம்?

ஓம். அதிலிருந்து தொடங்கி பின்னர் நேரிற் கண்ட மனிதர்களும், காதில் விழுந்த செய்திகளும் உருவாக்கிய கொதிநிலையின் அலைகழிப்புத்தான் ஆதிரை.

தேவகாந்தன், ஷோபாசக்தி, விமல் குழந்தைவேல் எனப் புலம்பெயர்ந்திருக்கும் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் தாய்நிலத்தின் அரசியலையே – வாழ்க்கையையே எழுதுகிறார்கள். நீங்களும் அப்படித்தான். இது ஏன்?

எனது புலம்பெயர் வாழ்வு ஒப்பீட்டளவில் குறுகலானது. எப்படியென்றால் 2006 இல் புலிகள் மாவிலாறு அணையைப் பூட்டியபோது நான் இலங்கையிற்தான் இருந்தேன். ஆக இன்னமும் நிலத்தின் கதைகளே மூளைக்குள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. புலம்பெயர்ந்து சென்ற நாட்டுடனான சமூக இணைவு இன்னமும் எனக்குச் சாத்தியமாகவில்லை. இந்த ஜென்மத்தில் அப்படியொரு அதிசயம் நடக்குமென்றும் தோன்றவில்லை. எனக்கு மட்டுமென்றல்ல. நம்மிற் பலரும் மனதால் ஈழத்திற்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியானால் ஈழத்திற்கு வரலாமே என்ற உங்களுடைய ‘மைன்ட் வொய்ஸ்’ இங்கேவரையும் கேட்கிறது. நீங்கள் அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..

ஆதிரை புனைவு நாவலாகக் கட்டமைக்கப்பட்டதா? வரலாற்று  நிகழ்ச்சிகளின் பதிவாக உருவாக்கப்பட்டதா? 

சில உண்மை நிகழ்வுகளைப் பின்னிறக்கி முன்னால், முழுக்கப் புனைவால் வரைந்த சித்திரம் ஆதிரை. புனைவினைத் தேர்வு செய்யும் அரசியலில் நேர்மையாயிருந்தேன். அதற்குப் பொறுப்புக் கூறுபவனாயும் இருக்கின்றேன்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்லது ஈழப்போராட்டத்தின் போர் ஓய்ந்த பிறகு வந்த பெரும்பாலான நாவல்கள் வன்னிக்களத்தையும் அந்த நிகழ்ச்சிகளையும் பின்புலமாகக் கொண்டிருக்கின்றன. அல்லது நீங்கள் சொல்வதைப்போல சில உண்மைச் சம்பவங்களை பின்னணியில் கொண்டிருக்கின்றன. இது புலிகளைப் பேசுவதன் மூலமாக அல்லது அந்த இறுதி யுத்தத்தைப் பேசுவதன் மூலமாக வாசகக் கவனத்தை ஈர்க்கலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடா? அல்லது துயரிலுறைந்த சனங்களைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவா? உதாரணம், தமிழ்க்கவியின் ஊழிக்காலம், ஷோபாசக்தியின் Box, குணா கவியழகனின் விடமேறிய கனவு… 

குழந்தைப் போராளிகள் புத்தகத்தை எழுதிய சைனா கிறைற்சி, அவருடைய டொக்டரின் ஆலோசனையின் பேரில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக எழுதிய பதிவுகளே அந்தப் புத்தகம் என்கிறார். இந்த யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன். மற்றும்படி பெருமளவான வாசகர் பாராட்டைப் பெறுவதே நோக்கமாயிருந்திருக்குமெனில் ஆதிரை ஒரு “போர்ப் பரணி”யாகவல்லவா இருந்திருக்க வேண்டும்.

இருந்தாலும் இதே காலத்தில் வெளியான ஏனைய லெனின் சின்னத்தம்பி, அனந்தியின் டயறி, அசோகனின் வைத்தியசாலை, கசகறணம், அத்தாங்கு போன்ற நாவல்களுக்குக் கிடைத்த வரவேற்பையும் கவனத்தையும் விட இந்த மாதிரி சமகால அரசியலைப் பேசும் Box, நஞ்சுண்டகாடு, ஆயுத எழுத்து, ஊழிக்காலம், , விடமேறிய கனவு, ஆதிரை போன்ற  நவல்களுக்குக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் கவனமும் அப்படித்தானே உணரவைக்கின்றன? இது ஒருவகையான உளவியல் ஈடுபாடு எனலாமா?

பிரதிகளில் தங்களைக் காண விரும்புகிற, அவற்றோடு தாம் வாழ்ந்த காலத்தை நனவிடை தோய முற்படுகின்ற அதில் சுகித்திருக்கின்ற வாசக மனதின் உளவியலா என்று யோசிக்கின்றேன். அப்படியானால் தமிழ்நாட்டில் உருவாகும் வரவேற்பினை எவ்வாறு இந்த உளவியலில் பொருத்திப் பார்ப்பது என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை என் நண்பர் ஒருவர் கேட்டதுபோல தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுடைய யுத்தகால எழுத்துக்கள் த்ரில்லான, திகிலான ஒருவகைச் சாகச எழுத்துக்களாகக் கருதி விரும்பிப் படிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.. இவை பற்றி மேலும் உரையாடவேண்டும்.

நீங்கள் எப்படி எழுதத் தொடங்கினீர்கள்? ஆரம்பத்தில் யாரைப் பிடிக்கும்? இப்பொழுது தமிழில் யார் உங்களுடைய ஆதர்சம்?

இது சற்று ஆச்சரியம்தான். வீட்டில் பெரியளவிலான வாசிப்பாளர்கள் இல்லை. நான் எழுதியிருந்த புத்தகங்களைக் கூட வீட்டில் யாரும் படித்ததில்லை. அவை புத்தகமாகின்றபோது இவன் ஏதோ எழுதியிருக்கிறான் என்று நினைத்துக்கொள்வார்கள் போல.  பெரியப்பாவிற்கு சற்று வாசிப்பிருந்தது. என்னுடைய அப்பாவின் அக்கா என் சிறுபராயக் காலத்தில் உள்ளூர் நுாலகத்தில் ஒரு நுாலகராகப் பணியாற்றினார். பெரும்பாலும் எனது மாலை நேரங்கள் அங்குதான் கழிந்தன. புத்தகங்கள் மீதான நெருக்கம் அப்படித்தான் உருவாகியிருக்க வேண்டும். ஏனென்று தெரியவில்லை இயல்பிலேயே இலங்கை எழுத்தாளர்களுடைய எழுத்து மீது பெரிய ஈடுபாடிருந்தது. அந்த நுாலகத்தில் யாரும் சீண்டாதிருந்த இறாக்கையிலிருந்த இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களை  எடுத்துச் சென்று வாசிக்கத் தொடங்கினேன். வீரகேசரிப் பிரசுரம், மீரா பிரசுரம், தமிழ்த்தாய் வெளியீடு, கமலம் பதிப்பகம் என்று பதினான்கு வயதிற்குள்ளாகவே பலவற்றைப் படித்திருக்கிறேன். தவிர சரித்திரைப் புனைவுகளிலும் ஆர்வம் இருந்தது. குறிப்பாக சாண்டில்யனின் புத்தகங்கள் பலவற்றையும் அக்காலத்தில் படித்து முடித்திருக்கிறேன். யவன ராணி என்ற மூன்றோ நான்கு தொகுதிகள் அடங்கிய புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் ஊடாக வன்னியில் தேவிபுரத்தில் சென்று முடித்த நினைவிருக்கிறது.

அக்காலத்தையை என் ஆதர்சமென்றால் செங்கை ஆழியானைத்தான் சொல்ல முடியும். அவரைப்போல எழுதவேண்டுமென்றெல்லாம் நினைத்திருக்கிறேன். இப்போது ஆதர்சமென்று சொல்வதற்கு யாருமில்லையென்றாலும் காத்திருந்து படிக்கின்ற எழுத்தாளர் என ஷோபா சக்தியைச் சொல்லலாம்.

எழுத்து ஒரு தொழில்நுட்பத்தின் பாற்பட்டதா? இலக்கியச் செயல் என்று அதைச் சொல்லலாமா?

எழுத்திற்கு உத்திநுட்பமேயிருக்கும். தொழில்நுட்பம் இருக்காது. அது தொழில்நுட்பமெனில் அதில் அகவயமான கரிசனைகள் இருக்காத வெறும் இயந்திரத்தனமானதாயிருக்கும். அதுபோலத்தான், இலக்கியம் ஒரு செயல் அல்ல. அது ஆக்கம். செயல் என்ற சொல்லாட்சி ‘போலச் செய்தல்’ என்பதை அர்த்தப்படுத்தி அதற்குப் போலித்தனத்தை வழங்கிவிடுகிறது. எனக்குத் தெரிந்தவகையில் எழுத்தென்பது சொற்களுக்கு அனுபவத்தைக் கொடுத்து சொற்களின் அழகியலைக் கட்டுவது. இது இந்தப் பதிலை எழுதிக்கொண்டிருக்கிற தருணத்தில் என் நிலைப்பாடாகவிருக்கிறது.

பெரும்பாலானவர்களி்ன் எழுத்துகள் அவர்களுடைய இளமைக்காலத்தின் பிரதிமைகளாகவே வெவ்வேறு விதங்களி்ல தொடர்ந்திருக்கும். முதல்கால் வாழ்க்கையின் ஆதிக்கத்தையே பலரு்ம திரும்பத்திரும்ப எழுதுகிறார்கள் என்று கானாவைச் சேர்ந்த மொகமட் நஸீகு அலி (Mohammed Naseehu  Ali)) சொல்கிறார். உங்களுடைய அனுபவம் எப்படி?

ஆறாவடுவும் சரி, ஆதிரையும் சரி அக்கதைகளின் பிரதான இழைகளின் கதைகளை  நான் ஒருபோதும் அனுவித்திருக்கவில்லை. ஆக, அவற்றில் முழுமையாக என்னைக் கொண்டுபோய் இருத்தவும் முடிவதில்லை. இருப்பினும் குணாம்சங்களாக, சிறு சம்பவங்களாக, ஓர்  உதிரியாக ஆங்காங்கே நான் வந்துபோவதைத் தவிர்க்கவும் இயலவில்லை.

மலையக மக்களின் துயரம் தொடக்கம் அடிநிலை மக்களின் பிரச்சினைகளையும் வாழ்வையு்ம் ஆதிரை பேசுகிறது. மறுவளத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தின் மீது விமர்சனத்தை வைக்கிறது. இது ஒருவகையான சமனிலைக்குலைவை  உண்டாக்கும் என்றும் அரசியல் சாய்வைக் கொண்டிருக்கிறது எனவும் படுகிறது என்ற அபிப்பிராயங்கள் வாசக மட்டத்தில் காணப்படுகிறது. உங்களுடைய கரிசனையின் மையம் எதனால் உண்டானது?

இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் உள்ள  ஒரு நண்பர், ஈழத்தமிழர்கள்,  மலையகத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கிறீர்களே.. மலையகத் தமிழர்கள் எங்களுடைய விடுதலைப் போருக்கு ஏதேனும் செய்தார்களா என்று ஒரு கேள்வியை முகநுாலில் துாக்கிப்போட எனக்குத் துாக்கிவாரிப்போட்டுவிட்டது. ஈழத் தமிழர்களுடைய ஆயுதப்போராட்டத்தில் மலையக மக்களின் பங்கு பற்றி விரிவாகப் பேசினால், அவர்களும் வன்னிக்குவந்து நீண்டகாலமாக இருந்தவர்கள்தானே எனச் சொல்கிறார்கள். ஆனால் அப்படிமட்டுமல்ல அம்பாறையின் ஓர் எல்லையாகவிருந்த பதுளைப் பக்கங்களிலிருந்து நேரடியாகப் புறப்பட்டு பல இளையவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி வீழ்ந்திருக்கிறார்கள். அதேவேளை யாழ்ப்பாணம் என்ற பிரதேசத்திலிருந்து போராளிகள் எவரும் உருவாகவில்லை என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கக் குடும்பங்களும் பல பிள்ளைகளைப் போராட்டத்தில் இழந்தேயிருக்கின்றன.

நான் சமநிலை குலைந்த இடமாகப் பார்ப்பது, இந்த யுத்தத்தை தம்முடைய வாழ்வுக்கான ஒரு வாய்ப்பாக மடை மாற்றிப் பயன்படுத்தியவர்கள் ஒரு குறித்த ஒரு பிரதேசத்தைச் சார்ந்தவர்களாயே இருந்தார்கள் என்பதைத்தான். அந்த விச்சுழித்தனம் அவர்களுக்கு அதிகமாக வாய்த்தது எப்படி..? அத் தந்திரத்தின் மூலம் என்ன.. ? அந்த விவேகம் எந்தச் சமூகப் பின்னணியில் உருவாகிறது.. ? இம்மாதிரியான தீராக் கேள்விகள் ஆதிரை முழுவதும் உள்ளூரப் பரவியிருக்கிறது..

மலையக மக்களுக்கு இடமளித்திருப்பதைப்போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய இடத்தை – அவர்கள் மீதான கரிசனையை ஆதிரையில் உணர முடிகிறது. இந்த நாவல் ஒரு பரந்த தளத்தைக் கொண்டிருக்க வேண்டும்  என்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? அல்லது இயல்பான ஓட்டத்தில் இத்தகைய ஒரு பரப்பு விரிந்ததா?

தொடக்கம், முடிவு என்ற புள்ளிகள் மனதில் இருந்தன. ஒரு பொதுவான பரப்பாக போர் நிலத்தில் ஏழ்மையும் அதன் இயல்பும் பற்றியே பேச விளைந்தேன். நாவல் நீள நீள அது இயல்பாகவே நீங்கள் குறிப்பட்டதுபோல ஒடுக்கப்பட்டவர்கள் மீதான கரிசனையைத் தனக்குள் எடுத்துக்கொண்டுவிட்டது என எண்ணுகிறேன்.

இனம் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தன்னை முன்னிறுத்தியிருக்கும் ‘தமிழ்த்தேசியம்’ என்ற கருத்தியல் தன்னுடைய சொந்தப் பரப்பிற்குள் நிகழும், பால், சமூகம், வர்க்கம் சார்ந்த ஒடுக்குமுறைகளின்போது அவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றே செயற்படவேண்டும் என்று நான் அக்கறைப்படுகிறேன். தமிழ்த்தேசியத்தின் கட்டமைவு உண்மையில் அவ்வாறே இருந்திருக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் ஈழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி, தனக்குள் நிகழும் ஒடுக்குமுறைகளின் போது அது கள்ள மௌனம் சாதிக்கின்றது. முடிந்தவரை அதை ஒளித்துவைக்க முற்படுகிறது. இது மிகவும் கசப்பானது. அதன்மீது நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியது.

இன்னொரு புறத்தில், – தமிழகத்தில் எப்படியென்று தெரியவில்லை – ஆனால் ஈழத்தில் சமூக, பால், வர்க்க ரீதிகளாக ஒடுக்கப்பட்டவர்களுடைய வியர்வையும் அவர்களுடைய இரத்தமும் தமிழ்த்தேசியத்தில் நிறையவே இறைக்கப்பட்டிருக்கிறது. என்றேனும் தமிழ்த்தேசியம் சுகிக்கவிருக்கிற உரிமைகளில் அவர்களும் உரித்துடையவர்கள். நேரடியான உரிமையுடையவர்கள். இந்நிலையில் அவர்களைத் தமிழ்த்தேசியத்திலிருந்து வெளியேற்றுவது, தமிழ்த்தேசியத்திலிருக்கிற ஆதிக்கத்தரப்பினருக்கு உவப்பானதாயே அமைந்துமுடிந்துவிடும் அபாயமும் இருக்கிறது.

ஆறாவடுவிலும் ஆதிரையிலும் மனிதத் துயரமே மையம். துயரத்தை அனுபவிக்கும் சமூகத்துக்கு மீண்டும் துயரத்தைப் பரிசளிப்பதா? அல்லது அதனைக் கொண்டாட்டமான நிலைக்குக் கொண்டு செல்வதா நல்லது?

ஈழத் தமிழர்களுடைய போராட்டத்தின் துயர முடிவின் காரணமாக அவர்களுடைய வாழ்வில் இனி உய்வு ஏதுமில்லை என ஆதிரை நிறுவ முற்படவில்லை.  போராட்டம் அழிந்துவிட்டது. ஆகையால் இனி உங்கள் எல்லோருக்கும் சவக்குழிதான் மிச்சம் என்ற இருண்மையை அவர்களுக்கு வழங்க நான் முற்படவில்லை. மனித வாழ்வு எந்தப் பாதாளத்திலிருந்தும் மேலெழும் வேட்கையை பிறப்பிலிருந்தே கொண்டிருக்கிறது என்பதை நம்புபவன் நான். ஆதிரையின் மாந்தர்கள் தம் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைகளைச் சேகரித்துக் கொண்டே வருகிறார்கள். அவை அழிய அழிய சற்றும் மனம் தளராது மீளக் கட்டுகிறார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னரும் கூட, முகத்தில் அறையும் காலத்தின் யதார்த்தத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் தம் வாழ்வை நகர்த்தவே முற்படுகிறார்கள். அவர்கள் தமக்கான குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். அவர்கள் தம் குழந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டுவார்கள், கிலுகிலுப்பைகளை வாங்கிக்கொடுப்பார்கள். ஆம், அவர்கள் வாழ்வார்கள்.

கடந்தகால நிகழ்வுகளையும் வரலாற்றையும் ஆதாரமாகக் கொண்டு எழுதும்போது ஏற்படுகின்ற வாசக அதிர்ச்சி அண்மைய ஈழம் சார்ந்த படைப்புகளில் முதன்மையடைந்திருக்கிறது. இந்த மாதிரியான வாசகக்கவர்ச்சி என்பது ஒரு காலகட்டத்துடன் திசைமாறிச் செல்லும் அபாயத்தையும் தணிந்து விடும் நிலையையும் கொண்டது. பத்திரிகை வாசிப்பதைப்போல, சமகால நிலைமைகள் மாறிச் செல்ல இந்த வாசக நிலையும் மாறிவிடும் அபாயம் உள்ளது. இதைக்கடந்து நிலைப்படக்கூடிய படைப்புத்தளத்தை நிர்மாணிப்பதைப்பற்றி ஏன் பலரும் சிந்திப்பதாகவில்லை?- 

ஆறாவடு பத்திரிகைச் செய்திகளின் தொகுப்பாயிருந்ததென்று ஒரு விமர்சனம் இருந்தது. ஆதிரையைப் பொறுத்தவரை இவ் வரலாற்றுச் சம்பவங்களுக்குப் புறம்பாக அதிலொரு வாழ்வை நான் கட்டியமைக்க முயன்றிருக்கிறேன். மனித வாழ்வின் உறவுகள், உறவுகளின் சிக்கல்கள், மனதின் அலைச்சல்கள், அந்த மனத்தின் முன்னுக்குப் பின்னான முரண்கள், தாய்மையின் விழுமியங்கள் இவ்வாறாக.. முட்டி மோதுகின்ற மாந்தர்களை உருவாக்கி அதுநீளத்திற்கும் அலையவிட்டேன். ஆதிரை என்ற இந்த நாவலிலிருந்து யுத்தத்தையும் அது ஏற்படுத்திய அழிவையும் நீக்கிவிட்டாலும் கூட ஒரு வாழ்வுச் சுழி அதற்குள் எஞ்சியிருக்க வேண்டுமென்று முயற்சித்திருக்கிறேன். இனி நீங்களே சொல்லவேண்டும்.

ஆதிரையின் பாத்திரங்கள் தொடர்பாக.. உங்களுக்கு மிக ஈர்ப்பான  – நெருக்கமான பாத்திரம்?

நாமகள் !

இந்த நாமகள் நிஜயத்திலும் புனைவிலும் கலந்திருப்பதாகக் கொள்ளமுடியும் என்று படுகிறது. பெயர் மாறிய நிஜம் என்கிறார் ஒரு வாசகர்?

அந்த வாசகர் சந்தேகத்தின் பலனை அனுபவிக்கட்டும். சில நேரங்களில் நாம் முழுக்கப் புனைந்த பாத்திரங்கள் நிஜத்தில் உருவாகி வந்துவிடுகிற அதிசயங்களும் நடந்துவிடுகின்றன. ஆறாவடுவில் நேரு அய்யா என்றொரு வயதான பாத்திரத்தை புனைவாக உருவாக்கியிருந்தேன். அவர் ஒரு மொழி பெயர்ப்பாளர். அப்பாத்திரம் புலிகள் மீது தொடர்ச்சியாகச் சில விமர்சனங்களை வைத்துக்கொண்டிருக்கும். இது பற்றிப் பேசிய ஒரு வாசகர், நேரு அய்யாவைப் பற்றியும் அவர் புலிகளை விமர்சிப்பது பற்றியும் எழுதிய நீங்கள் அவருடைய இரண்டு பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருந்ததை இருட்டடிப்புச் செய்து விட்டீர்களே என்று விசனப்பட்டிருந்தார்.

முழுமையான வாழ்கள அனுபவங்கள் இல்லாதபோதும் வரலாற்று நிகழ்ச்சிகளும் களச்சூழலும் மெய்யென நிகழும் வகையில் ஆதிரை படைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியாகியிருக்கும் ஷோபாசக்தியின் Box இலும் இந்தத் தன்மை உண்டு.. தகவல் மூலங்களைப் படைப்பாக்கும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அவை எப்படியிருந்தன? இந்தத் தகவல் மூலங்களை எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்? 

தகவல்களை எப்படிப் பெற்றேனென்று ஆதிரையிலேயே சொல்லிவிட்டிருந்தேன். அப்படிக்குறிப்பிட்டதுபோல மனிதர்களைச் சந்தித்த போதெல்லாம் பெருமளவுக்கு முதியவர்களைத்தான் சந்தித்தேன். குறிப்பான கேள்விகள் என்று இல்லாமல் இயல்பான ஓர் உரையாடலைத் தொடங்கி, ஒரு கட்டத்தில் மடை திறந்த வெள்ளம்போல அவர்கள் பேசிக்கொண்டேயிருந்ததை ஒலிப்பதிவுகள் செய்திருந்தேன். பின்னர் நாவல் அவ் ஒலித்துண்டுகளிலிருந்து தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டது. நேரடி அனுபவும் இன்றி, மேற்சொன்ன தகவல் மூலங்களுமின்றிய இடங்களைப் புனைவாலேயே கடந்தேன். அவ்வாறு தொன்னுாறுக்கு முன்பான காலத்தைப் படைப்பாக்கும் போது சவாலாகவிருந்தது. தமிழ்க்கவி அம்மா, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகைப்புசந்தி திலகர், மறைந்த தமிழினி அக்கா முதலானோர் தகவல் மூலங்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள்.

தொடக்கத்தில் சிறுகதைகளை எழுதிய நீங்கள் வந்தடைந்திருக்கிற வடிவம் நாவல். உங்களுடைய அடையாளமும் நாவல் எழுத்தாளர் என்றே ஆகியுள்ளது. அடுத்த நாவல் என்ன? புலம்பெயர் வாழ்க்கையை எழுத வேண்டும் என்று தோன்றவில்லையா?

நான் குறைவாகவே எழுதுகிறேன். இன்று எப்படியாவது ஒரு கதை எழுதிவிடவேண்டுமென்று நான் உட்காருவதில்லை. ஏதாவது செய்தியில் அல்லது யோசனையில் அதுவொரு புள்ளியாகத் தோன்றுகிறது. தோன்றினால் எழுதமுடிகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறை பற்றி, இரட்டைக் கலாச்சார சுழலுக்குள் அங்கும் இங்குமாகத் தம்மைப் பொருத்தி உழலும் அவர்களுடைய வாழ்வுபற்றி ஒரு நாவல் எழுதவேண்டுமென்று ஆசையிருக்கிறது. சில காலங்களுக்கு முன்னர் இங்கு பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் இளைஞன் தன்னுடைய அம்மாவும் அப்பாவும் ஒருபோதும் தன்னோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவதில்லை என்பது தனக்கு மன அழுத்தத்தைத் தருவதாகச் சொன்னபோது அவர்களுடைய மனதின் இன்னொரு பரிமாணத்தை என்னால் உணரக்கூடியதாகவிருந்தது. இவ்வாறான ஒரு சம்பவத்திற்கு ஒரு பெறுமதி இருக்குமென்று நாம் யோசித்திருக்கவே இல்லையல்லவா..?

ஒரு எழுத்தாளர் சொந்த அனுபவங்களை எழுதும்போதும் அனுபவங்களுக்கு அப்பால் உள்ளதை எழுதும்போதும் கிடைக்கின்ற வசதிகள், சிரமங்கள் என்ன? 

அனுபவங்களுக்கு அப்பால் எழுதுவதில் உள்ள சிரமமென்பது தகவல்கள்தான். மற்றும்படி அனுபவமல்லாதவற்றை எழுதுவதே மிகச் சிறப்பாக உருவாகும் என்பது எனது கணிப்பு. எனது அனுபவத்தையோ எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு நபரையோ எழுத்தில் முன் வைக்கும்போது அங்கே ஒருவித அலட்சியம் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அனுபவத்தில் இல்லாத ஒன்றை எழுதும்போது அதை முதலில் எனக்கு நானே காட்சியாகக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. அப்பொழுது நுணுக்கமான பதிவுகளை அது கொண்டிருக்கும். முழுமையான ஒரு சித்திரத்தை உள்ளடக்கியிருக்கும். என்னுடைய கிராமத்தைவிட நான் வாழ்ந்தேயிருக்காத தனிக்கல்லடி என்ற கிராமத்தைச் செதுக்கியது எனக்கு இலகுவாயிருந்தது. இவ்வேளையில் அனுபவங்களை எழுதுவதே அறம் என்றொரு பேச்சும் ஓடித்திரிவதை நினைவூட்டுகிறேன்.

தகவல்களைச் சேகரிக்கும்போதும் கதை உருக்கொள்ளும்போதும் குறித்து வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏதாவது உண்டா? அல்லது கதையின் போக்கிலேயே எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு போவீர்களா?

ஆறாவடு தொடக்கத்தை மட்டும் முடிவு செய்துகொண்டு எழுதத்தொடங்கிய நாவல். ஆதிரை பெரிய பரப்பென்பதால் அது நிகழும் நிலங்களையும் காலங்களையும் முன்னரே வகைப்படுத்திவிட்டுத் தொடங்கியிருந்தேன். பல கதைப்போக்குகள் தமக்கான முடிவை நோக்கித் தம்பாட்டிலேயே சென்றன. ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால் சாரகனுக்கும், நாமகளுக்கும் ஒரு கல்யாணத்தைக் கட்டிப் பார்க்கவேண்டுமென்று ஆரம்பத்தில் ஆசையிருந்தது. ஆனால் நாவலில் அது வேறு திசையில் சென்று முடிந்துவிட்டது.

ஆறாவடு தந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்? சரியான – முறையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக உணர்கிறீர்களா?

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையின் நேரடி அர்த்தத்தின் அடிப்படையே குழப்பமானது. அப்படி விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் “அதுவும் சரி.. இதுவும் சரி” என்று ஆமாம் சாமிதான் போடவேண்டியிருக்கும். ஒரு விமர்சனம் என்பது அதைச் செய்கிற ஒரு தனி நபரின் அழகியல் தொடர்பான பார்வை, இலக்கிய ரசனை, அரசியல் சார்பு என்பவற்றின் அளவுகோல்களில் அவர் தனக்குள் நிகழ்த்துவது. அந்த அளவுகோல்களின்படி நான் கருதியதற்கு முற்றிலும் மாற்றான இன்னொரு பார்வையை அவரால் முன்வைக்க முடியும் என்பதையும் அதற்கான உரிமையை அவர் கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும் நான் ஏற்றுக்கொள்வதோடு விமர்சனத்திற்கும் எனக்குமான உறவு முடிந்துவிடுகிறது. அதற்குமப்பால் எனது கருத்தமைவிற்கு மாற்றான கூறுகளைக் கொண்ட சில விமர்சனங்கள் புதிய ஜன்னல்களைத் திறந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. அந்த ஜன்னல்களினால் விழுந்த ஒளியை ஆதிரை ஏந்திக்கொண்டது.

நீங்கள் புலிகளின் ஆதரவாளரா? எதிராளியா? இந்தக் கேள்வி எதற்காக எழுகிறது என்றால் உங்களுடைய எழுத்துகளில் இரண்டும் கலநத நிலை உண்டு. ஆதரவு எதிர் என்பதற்கு அப்பால் இன்னொரு நியாயப் புள்ளியில் நிற்கிறீர்களா?

நான் புலிகள் மீது சாய்வும் சார்புமுள்ள ஓர் உயிரியே. ஆதிரையில் மீனாட்சி என்ற தாய்க்கும் அவருடைய மகனான வெள்ளையன் என்ற புலி உறுப்பினருக்கும் இடையிலான உறவு எத்தகையதோ, அதே மாதிரியான நெருக்கமும் உறவும்தான் ஈழத்தில் தொண்ணூறுகளில் நினைவு தெரியத் தொடங்கிய தலைமுறைக்கும் புலிகளுக்குமிருக்கிறது. இதனை மூளையைக் கழட்டி வைத்துவிட்டு இதயத்தால் சிந்திக்கிற நடைமுறையென்றும் நீங்கள் பரிகாசம் செய்யலாம்.

இதேவேளை புலிகள் சரிகளை மட்டுமே செய்தார்கள், அவர்களுடைய தவறுகளுக்கும் ஒரு வரலாற்றுச் சரி இருக்கிறது என வாதிடுகிற ‘ஜனவசியப்பட்ட’ குரலும் என்னிடம் இல்லை.

புலிகள் என்ற இயக்கத்தை அதன் தலைமைக்கு ஊடாக அணுகுகிற ஒரு பார்வை நிலத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கும் (தமிழ்நாட்டுக்காரர்கள் உட்பட) அல்லது நீண்டகாலத்தின் முன் நிலத்தை விலகிச் சென்றவர்களுக்கும் இருக்கிறது. அதாவது மேலிருந்து கீழாக அணுகுதல். என்றேனும் ஒருநாள் அவர்களுக்குத் தலைமை மீதான பிம்பம் அழியுமாயின் புலிகள் மீதான பிம்பமும் நொருங்கிச் சரிந்துவிடும்.

ஆனால் நாம், கீழிருந்து மேலாக அந்த இயக்கத்தைப் பார்த்து வளர்ந்தவர்கள். ஊரின் தெருக்களில் நம் கண்முன்னால் திரிந்தவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர்கள், வகுப்பறைகளில் அழி இறப்பருக்காக அடிபட்டவர்கள்… இவர்கள் இயக்கத்தில் சேர்ந்தபோது அவர்களுக்கு ஊடாகவே இயக்கமும் நம் எண்ணங்களில் உள் நுழைகிறது. அதாவது கீழிருந்து மேலாக. உண்மையில் நம்மால் விட்டுக்கொடுக்க முடியாமலிருப்பது இந்த மனிதர்களைத்தான். (இந்த நிலைப்பாட்டை 80களில் வெளியேறி ஐரோப்பாவிற்கு வந்த ஒருவரிடம் சொன்னேன். அவர் சொன்னார்.. இப்படி கண்முன்னால் திரிந்தவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர்கள், வகுப்பறைகளில் அழிறப்பருக்காக அடிபட்ட நண்பர்களின் ஊடாகவே தாங்களும் புலிகள் இயக்கத்தைப் பார்ப்பதாக.. அப்படி அவர் குறிப்பிட்ட அவருடைய நண்பர்கள் சென்று சேர்ந்த இடம் புலிகள் அல்லாத வேறு இயக்கங்களாயிருந்தன)

ஆதிரைக்கு வருவோம். அது எனது அரசியல் நிலைப்பாட்டைப் பிரச்சாரப்படுத்தும், ஒரு நோட்டீஸ் அல்ல. புனைவுக்கூடாக எனது அரசியல் நிலைப்பாட்டிற்கு ‘ஆட்பிடிக்க’ என்னால் ஒருபோதும் இயலாது. நான் வாசகர்களுக்கு வழங்க முற்படுவது ஓர் அனுபவமே. எனக்கு ஒவ்வாத கருத்தென்றாலும், ஒரு பொதுத்தளத்தில் அது நிலவுகிறதெனில், அது பிரதிக்குள் நுழையும்போது நான் இடையில் நின்று கத்தரிப்பதில்லை. ஒரு மூன்றாம் மனிதனாக மௌனமாக ஒதுங்கி நிற்கிறேன். அல்ல, நிற்கப் பழகுகிறேன் என்பதே சரி.

இலங்கை இனப்பிரச்சினையைப் பற்றி, தமிழகத்தின் புரிதல் எப்படி உள்ளது? தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழஆதரவு எந்த அளவுக்கு நன்மைகளைத் தந்துள்ளது? இந்த ஆதரவினால் எதிர்காலத்தில் ஏதாவது நன்மைகள் கிட்டுமா? ஏனென்றால், சென்னை கொடுக்கின்ற அழுத்தத்தினால் டில்லியின் கதவுகள் திறக்கப்படும் என்ற வகையில் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவுக்குச் சாத்தியமானது? 

தமிழகத்தை நம்பியிருந்த ஒரு காலம் உண்டு. முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் அந்த நம்பிக்கையிருந்தது. ஆனால் காலம் வெகு சீக்கிரத்திலேயே உண்மையை முகத்தில் அறைந்துவிட்டது. ஈழத்தை விடுங்கள், இன்று தமிழகத்திற்கான ஒரு ஜன்னலைக்கூட டெல்லியில் அழுத்தம் கொடுத்து திறக்க முடியாத யதார்த்தத்தை நாம் அறிவோம். அதனால் எனக்கு எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் இல்லை.

ஈழத்தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமென்பதனாலேயோ என்னவோ, அவர்களில் பலர் தாம் பிரமிப்பாக நோக்குகிற வெள்ளைக்காரர்களோ அல்லது இந்தியர்களோ தமக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றால் புளகாங்கிதமடைகிறார்கள். (நம் இலக்கியவாதிகளுக்குக் கூட தம்மை யாரேனும் ஒரு தமிழக எழுத்தாளர் பாராட்டினால் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கின்ற ஒரு பழக்கமிருக்கிறது. “நான் என்னைச் சொன்னேன்’ என்பதை வடிவேலுவைப்போல படிக்கவும்) தம்மை அனாதைகளாக யாருமற்றவர்களாக உணர்கிற ஒருவித மனநிலையின் வெளிப்பாடு இது. இன்னொரு புறத்தில் தமிழக ஓட்டுக் கட்சிகளைப் புறம்தள்ளிவிட்டு மாணவர்கள், இயக்கங்கள் தனி நபர்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். ஒரு மானுடத் துயரம் தமக்கருகில் நடந்துமுடிந்தபோது தம்மால் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியை நான் உள்வாங்கிக்கொள்கிறேன். சமயங்களில் அந்தக் குற்ற உணர்ச்சியே இலக்கில்லாமல் வெடித்து வடிகாலைத் தேடிக்கொள்கிறது.

அன்றைய நாட்களில் ஒரு வளரிளம்பருவ இளைஞனாக இருந்த நீங்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்திலும் புலிகள் அமைப்பிலும் இணைந்து செயற்பட வேண்டும் என எண்ணவில்லையா? 

என்னுடைய மூன்றாவது வயதிலேயே புலிகளுடைய ஜனநாயக விரோத செயற்பாடுகளையும், பாசிச நடவடிக்கைகளையும், வலதுசாரி அரசியலையும் நான் புரிந்து கொண்டதனால்… என்றெழுதிப்போக எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. படிப்பவர்கள் சிரிப்பார்கள் என்பதனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்.

புலிகளுடைய நிழல் அரசின் கீழ், இயக்கப்பாடல்களை முணுமுணுத்துகொண்டும், புலிகள் வெல்லவேண்டும் என விரும்பிக்கொண்டும், அதேவேளை அதற்கு என்னை ஒப்புக்கொடுப்பதைப்பற்றிய எண்ணம், சிந்தனை எதுவுமில்லாமலும் அப்பா வெளிநாட்டில் இருக்கும், மத்தியதரவர்க்க குடும்பப் பிள்ளைகளின் பிரதிநிதியாக ஒரு லௌவீக வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருந்தேன் என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எதுவித ’கூச்ச நாச்சமும் இல்லை.