நடராஜா வாமபாகன்

தெனியாய எனப்படும் மலையகத்தோட்டத்தில் லயன்களில் ( காம்ப்ராக்கள்) 77இல் மூட்டப்படும் பெரும் தீயுடன் ஆரம்பிக்கும் கதை மார்பின் குருதிச்சேற்றில் புதைந்திருக்கும் சயனைட் குப்பியை ஆதிரை சிரமப்பட்டு இழுப்பதோடு முடிகின்றது, இடையில் பல கிளைக்கதைகள், ஈழப்போர் என்ற மையக்கருவை சிதைக்காமல் பின்னப்பட்ட ஓர் பல்சுவைக்கதம்பம் இந்த ஆதிரை.

இதில் காதல் உணர்வுண்டு, மெலிதான காம உணர்வுண்டு, வன்னி மக்களின் வாழ்க்கை முறையுண்டு, இத்திமரக் கதையுண்டு, வேட்டைக்கு போவோர் பின்பற்றும் நுணுக்கமான தந்திரோபாயங்கள் உண்டு, பன்றிக்கு வியர்ப்பதில்லை என்ற ஆச்சரியமான தகவல்கள் உண்டு.
பலவருடங்களுக்கு முன் எனக்குத்தெரிந்த இஸ்லாமியன் ஒருவன் பன்றிக்கு வியர்ப்பதில்லை அதனால் அதன் மாமிசம் சாப்பிட்டால் நோய் வரும் என்று கதை அளந்தான், ஆதிரையில் ஆசிரியர் இதைக்கூறியபோது வியந்துபோனேன்.

சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிக்கொடுமைகள் போகிறபோக்கில் சொல்லப்பட்டுள்ளன. ‪#‎அம்பட்டனுக்கு‬ வெள்ளாளப்பிள்ளை கேட்குதா, எனக்கு தலையை சிரைத்த நாவிதன் சம்பந்தி என்று சொல்லவே உடலில் மிளகாய் தூளைக்கொட்டியது போன்று எரிகின்றது. சாதி மறைந்து விடவில்லை அது பொடியளின் துவக்குக்கு பயந்து அமந்து போய் கிடக்கு#

பல சாட்டையடிகள். எம்மைப்போன்ற சுயநலமிகளுக்கு, நடுத்தர வர்க்கத்துக்கு, மேல்தட்டினருக்கு. புலம்பெயர்ந்தும் அரசியல் பண்ணும் ஏமாற்றுக்காரர்களுக்கு.ஓரிரு உதாரணம்.

‪#‎வன்னியில்‬ இப்போது இரண்டு வர்க்கம்தான், ஒன்று சாகத்துணிந்த வர்க்கம், இன்னொன்று வாழ ஆசைப்படும் வர்க்கம், எல்லோரும் பரம ஏழைகள், ஏழை போராடியது போதும் இனிமேல் பணக்காரன் போராடட்டும் என்கிறீர்கள், பணக்காரன் எங்குள்ளான் அவன் வெளியில் போய் மாமாங்கம் ஆச்சுது#.
‪#‎முள்ளிவாய்க்காலில்‬ முடிவுக்கு வந்த போர் யாழ்ப்பாணத்தில் வந்திருந்தால், சிங்களவனே போரை நிறுத்து என்று வெளிநாட்டில் கொடி பிடித்தவர்கள் பிரபாகரனே போரை நிறுத்து என்று பதாகையை மாற்றிப்பிடித்திருப்பார்கள்#
.
கதையைப்படித்து முடித்தபின்னரும் அதன் தாக்கத்தில் இருந்து மீளமுடியவில்லை. மக்கள் பட்ட அவலங்கள், அவலங்களால் எழுந்த அங்கலாய்ப்புக்கள், போராளிகளைத் திட்டிய தாய்மார்கள், அவர்களை, அவர்களின் தியாகங்களை போற்றிய மனிதர்கள், தேயிலைத்தோட்டத்தில் பிறந்து வளர்ந்து யாழ்ப்பாணமே போகாத, அது எங்குள்ளது என்பது கூடத் தெரியாத லெட்சுமணனின் யாழ் பற்றிய வண்ணக்கனவுகள்.

77இல் ஆரம்பித்து 2013வரை விரியும் ஆதிரை என்னை குற்ற உணர்வுள்ளவனாக மாற்றியுள்ளாள். மாவீரர்களின் தியாகம், எதையுமே எதிர்பார்க்காமல் அவர்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் எல்லாம் மனதில் சுமையாக மாறியுள்ளது. கண்னிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டவனின் பொருளாதாரச்சுமைகள் மனதில் ஈட்டியாக குத்துகின்றது. ஈற்றில் சில வார்த்தைகள், எப்படியும் இன்னும் சில காலத்துக்கு அத்தாரும், கணபதியும், வெள்ளையனும், மற்றும் லெட்சுமணன், நாமகள், வல்லியாள், சிங்கமலை, முத்து, மலர், ராணி, ஒளிநிலா இசைநிலா எனது மனதை ஆக்கிரமிப்பார்கள்.இதைவிட அதிகமாக எழுதினால் இனிமேல் வாசிக்கும் ஆவலுடன் இருப்பவர்களின் வேட்கை தணியலாம், நான் ஈழப்போர் பற்றி அறிந்தவை, தெரிந்தவை, எல்லாவற்றையும் மீறி எனக்குள் ஓர் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளாள் இந்த ஆதிரை. நன்றி.