பெயரற்றது – சிறுகதை

இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. மூன்று நாட்களாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமென்றில்லை. ஒழுங்கான சாப்பாடு, குளிப்பு முழுக்கு, கக்கூசு என ஒன்றுமில்லை. ரவியண்ணனின் வீட்டின் முன் விறாந்தையில் பனங்கிழங்குகளை அடுக்கியமாதிரி படுத்திருந்த இருபது பேர்களில் கடந்த இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவனைக் கண்ணயரவே விடுவதில்லை என்று முடிவு பண்ணியிருக்கவேண்டும். “க்ர்.. புர்..” என்ற அவர்களின் குறட்டை ஒலிக்கு கவிழ்ந்து படுப்பதும், காதுகளைப்பொத்தியபடி படுப்பதுமென என்று இவனும் எல்லாத் தந்திரங்களையும் பாவித்துப்பார்த்தான். ம்கூம். நித்திரை வரவேயில்லை. போதாதற்கு தீபன் அவ்வப்போது தன் வலது காலைத்தூக்கி இவனின் தொடைக்கு மேலே போட்டு “அவ்..உவ்..” என்று புரியாத மொழியில் புசத்தியபடியிருந்தான். அப்படி அவன் காலைத் துாக்கிப் போடுகிற ஒவ்வொரு தடவையும் இவனுக்கு இடுப்பில் கிடக்கிற சாரம் கழன்று போய்விடுமோ என்று சீவன் போனது. “பூனைக்கு விளையாட்டு, சுண்டெலிக்குச் சீவன் போகிறது” என இதைத்தான் சொன்னார்களோ என்று நினைத்துக் கொண்டான். அடிக்கொரு தடவை இடுப்போடு சேர்த்து சாரத்தை இறுக்கி விட்டுக்கொண்டாலும், அது இளகியபடியிருப்பதாகவே உணர்விருந்தது.

விறாந்தையோடு இணைந்து இரண்டு அறைகள் இருந்தன. உள்ளே பெண்களுக்கு ரவியண்ணன் இடமொதுக்கிக் கொடுத்திருந்தார். அவர்களில் கிருஷாந்தியையும் தமிழினியையும் இவனுக்கு ஏலவே தெரிந்திருந்தது. சரியான பயந்தாங்கொள்ளிகள். நேற்றும் பார்த்தான். இரவில் பாத்ரூம் போகும்போது துணைக்கு ஐந்தாறு பேரை அழைத்துச் சென்றார்கள். அத்தனை பேரும் ஒவ்வொருவரின் கையையும் பற்றிப் பிடித்தபடி விறாந்தையில் படுத்திருந்தோரின் கால்களுக்கிடையில் மெதுவாக நடந்து சென்றார்கள். அதனாலேயே ஒருபோதும் துாங்கக் கூடாதென்று இவன் நினைத்தான். சற்றே கண்ணயர்ந்தாலும், தீபனின் கால்பட்டு சாரம் இடுப்பினின்றும் நழுவி விட்டால் என்னாகும் என்ற நினைப்பு உதறலை உண்டுபண்ணியது. “பிறகு பப்ளிக் ஷோ தான். நாசமாப்போன நிலவு வேற, நேரே எறிக்குது.. நல்ல லைற்றிங்”

இவனுக்கு சாரம் கட்டிப் பழக்கமிருக்கவில்லை. அதற்கெல்லாம் பதினெட்டு வயதாக வேண்டும் யாரும் சொல்லாமலேயே ஏனோ தனக்குள் தீர்மானித்திருந்தான். அரைக்காற்சட்டைதான் போடுவான். அல்லது ரன்னிங் ஷோர்ட்ஸ். தர்க்கத்தின்படி பார்த்தால் இவன் ரன்னிங் ஷோர்ட்ஸ்ஸோடுதான் கொடிகாமத்திற்கு ஓடி வந்திருக்க வேண்டும். சுழிபுரத்தில் எங்கேயோ ஒரு பள்ளிக்கூடத்தில் ஒன்னியமார்க்ஸ் கெட் ரெடி என்பதற்குப் பதிலாக “கொப்பர் கொதியில வாறார்.. ஓடு” என்றுதான் சொல்கிறார்கள் என்று ஆனந்தன் அண்ணன் சொல்லியிருந்தார். புளுகாகவும் இருக்கக் கூடும். பொய்யை உண்மையைப்போலவே சொல்ல அவருக்குத் தெரிந்திருந்தது. கந்தக மணம் நிறைந்திருந்த நவாலி தேவாலயத்து வீதியில் இன்னமும் அடங்காதிருந்த புழுதியில் இரத்தமும், தனித்த தலைகளும், பிளந்திருந்த வயிறுகளின் வெளியே குவிந்திருந்த குடலும், அங்குமிங்குமாகப் பிய்ந்திருந்த சதைத் துண்டங்களும் கால்களில் மிதிபட்டபடியிருக்க, ஒற்றைச் சுவரொன்றின் அருகில் கடைசியாக அவரைக் கண்டான். கைகளை இரண்டையும் தலைக்குமேலே விரித்தபடி மேலே வெறித்தபடியிருந்தது அவரது உடல். சேர்ட் பொக்கற்றுக்கு சற்று மேலே துணி கிழிந்திருந்தது. இரத்தம் பீறிடவில்லை. இலேசாகக் கசிந்து சேர்ட்டில் பரவியிருந்தது. ஒருகணம் ஆனந்தன் அண்ணன் நடிக்கிறாரோ என்று தோன்றிய நினைப்பை அழித்துக் கொண்டான். கண்கள் மேலே சொருகி உடல் பஞ்சானதைப் போலிருந்தது. சூழ்ந்த அவலக்குரலை மூளை கிரகித்துக் கொள்ளவில்லை. அரைமணி நேரத்தின் முன்னர் வெள்ளைப் பற்கள் தெரிய பெருத்த உதடுகளுக்கூடாக சிரித்த ஆனந்தன் அண்ணன் செத்துக்கிடந்தார். அடுத்த இரண்டு மணிநேரத்தில் கோம்பயன் மயானத்தில் நெருப்பு அவரைத் தின்று தீர்த்தது. ஆயிற்று மூன்று மாதங்கள்.

ஆனந்தன் அண்ணன் நம்பும்படி சொன்னார். “நீ நம்பாட்டிப் போ, ஆனால் அப்படித்தான் சொல்லுவாங்கள். பெடியங்கள் வரிசையா நிக்க, கொப்பர் கொதியில வாறார் ஓடு.. என்ற உடனை ஓடத்தொடங்குவாங்கள்.”

அன்றைக்கு அப்படித்தான் சொன்னார்கள். “ஆமிக்காரன் கொதியில வாறான். ஓடு..” அப்பொழுது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தான். போட்டிருந்த காற்சட்டையையும் சேட்டையும் ஒரு சைக்கிளையும் தவிர்த்து ஏதுமிருக்கவில்லை. காற்சட்டை அரியாலைக்குள் அதிகாலை மழையில் நனைந்தது. நாவற்குழிப் பாலத்தில் ஏறப் பயந்து ஏரிக்குள் இறங்கியதில், உப்பு நீரிலும் நனைந்தது. அப்போது அடக்க முடியாத அவசரத்தில், இன்னொரு உவர்நீரில் மேலும் நனைந்தது. நனைந்து நனைந்து சாவகச்சேரி வெயிலில் காய்ந்துபோயிருந்தது காற்சட்டை. அன்றைக்கு இரவு, பூச்சி மருந்து மணக்கிற மடித்த சாரமொன்றினைத் தந்த ரவியண்ணன், “இப்ப படுங்கோ, மிச்சத்தை காலமை கதைக்கலாம்” என்றார்.

000
காரைநகரிலிருந்து சனங்கள் பொன்னாலைப் பாலத்திலும் பாலத்தின் கீழே தொடையளவு தண்ணீரிலும் ஓடிவந்துகொண்டிருந்த போது அதுநாள் வரை வெறுமனே பற்றை படர்ந்துபோய்க்கிடந்த தனது வளவுக்குள் அவசரஅவசரமாக ஆட்களைப் பிடித்து பத்மாக்கா மிளகாய்த்தோட்டம் செய்து கொண்டிருந்தார். நிலம் கொத்திய ராசுவன் “அம்மா, இந்த நிலம் மிளகாய்க் கண்டுக்குச் சரிவராது” என்றபோது பத்மாக்க இடுப்பில் கைகளை ஊன்றியபடி அவனை முறைத்தார். “நான் சொன்னதை மட்டும் நீ செய்” என்றார்.

பொன்னாலைக்கும் காரைநகருக்குமிடையிலிருந்த கடல் ஆழம் குறைந்திருந்தது. அமைதிக்கடல். கடலுக்குள் நீண்டிருந்த வீதியில் ஒன்பது பாலங்கள் இருந்தன. காரைநகருக்குள் கடற்படையும் இராணுவமும் காலையில் இறங்கியதிலிருந்து சண்டை நடந்துகொண்டிருந்தது. சனங்கள் கையில் கிடைத்தவற்றுடன் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். பாலங்களை பெடியங்கள் எந்த வேளையிலும் குண்டுவைத்துத் தகர்க்கலாம் என்ற கதை பரவியிருந்ததால் நிறையப்பேர் வீதிக்கு அருகாக கடலுக்குள் இறங்கியிருந்தனர்.

இடம்பெயர்ந்து வந்த சனங்கள் வாசிகசாலைகளிலும் கோயில்களிலும் அவசரத்திற்குத் தங்கியிருந்தார்கள். பூதராசி கோயிலின் கூரைத் தீராந்திகளில் ஏணைகள் குழந்தைகளைச் சுமந்து தொங்கின. வெளியே மூன்று கற்களை வைத்து சுள்ளித்தடிகளையும் பனம்பாளைகளையும் நெருப்புமூட்டி கஞ்சி காய்ச்சினார்கள். முதியவர்கள் பசிக் களையில் கோயில் துாண்களில் முதுகு சாய்த்திருந்தனர். அவர்களின் கண்கள் எங்கோ வெறித்திருந்தன. காரைநகரை பெடியங்கள் கைவிட்டு வந்தார்களாம் என்ற செய்தியை சுரத்தில்லாமல் இளைஞன் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்த போது கோயிலின் பரிபாலனசபைக்காரர் மோட்டர் சைக்கிளில் அங்கு வந்திருந்தார். அவர் யாரையும் ஏதும் கேட்டாரில்லை. “அகதிச்சாதியள், இந்தப் பக்கமும் வரக்கூடாது.” என்பதே அவரது முதற்சொற்களாயிருந்தன.

“தம்பி, இந்த ஒரு பொழுதுக்கு மட்டும் தங்கிப்போட்டு போறம். பெண் பிரசுகள் களைச்சுப் போட்டுதுகள்”

“அந்த இந்தக் கதையில்லை, பின்னேரப் பூசைக்கு கோயில் கிளீனா இருக்க வேணும். சாப்பிட்ட கையோடை வெளிக்கிடுறியள். சரியோ..” என்றவர் உள்ளே கர்ப்பக்கிரகத்திற்கு அருகாக நின்ற சிறுவன் ஒருவனை “டேய், நாயே இங்காலை வா மூதேவி” என்று திட்டினார். அவன் பதுங்கிப் பதுங்கி வெளியேறினான். பின்னர் அவர் அகதி நாய்கள் என்ற படி மோட்டர்சைக்கிளில் புறப்பட்டார்.

“அகதிச்சாதியெண்டொன்று இருக்கோ” என்று இவனைக் கேட்டான் அவன். பக்கத்து வாசிகசாலையிலிருந்து புளிச்சல் விளையாட வந்திருந்தான். இவனது வயதுகளில் ஒன்றிரண்டு கூடிக்குறைந்திருக்கலாம். அவனும் மற்றவர்களும் அன்றைக்கே கோயிலிலிருந்து வெளியேறி வாசிகசாலையில் புகுந்து கொண்டார்கள் என்றான். இவனது வீட்டிலும் அப்பம்மா வீட்டிலும் அவர்களைப் போல நிறையப் பேர் தங்கியிருந்தார்கள்.

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த பேணிகளின் மீது பந்தை கோபத்தோடு வீச்சுடன் எறிந்த போது மீண்டும் ஒருதடவை “அகதிச்சாதியள்” என்று அவன் சொல்லிக்கொண்டான். அந்த வார்த்தை அவனைக் காயப்படுத்தியிருந்தது. இவனுக்குத் தெரிய அப்படியொரு சாதி இருந்திருக்கவில்லை. ஆனாலும் நாய்ச்சாதியென்ற ஒன்றை பத்மாக்காவும் மில்கார பாலுவும் அடிக்கடி சொல்ல இவன் கேட்டிருந்தான்.

சும்மா கிடக்கிற வளவுகளில் இடம்பெயர்ந்த சனங்களை இயக்கம் குடியமர்த்துகிறதாம் என்ற கதை பரவியபோது பத்மாக்காவின் மிளகாய்க் கண்டுகள் காய்ந்து வாடிக் கருகிப்போயிருந்தன. இம்முறை வேறொரு ஐடியாவினை அவர் பாவித்தார். வளவு முழுவதும் பனங்கிழங்குப் பாத்திகளை அவர் போட்டார். பிரேதங்களைப் புதைத்த மண் கும்பிகளைப்போல பனங்கிழங்குப் பாத்திகள் வேலிக்குள்ளால் பார்த்தபோது தெரிந்தன. “பனங்கொட்டைகள் எப்பொழுது கிழங்குகளாக மாறும்” என்று இவன் அப்பம்மாவிடம் கேட்ட அடுத்தநாள் பத்மாக்கா வேலியருக்கில் சன்னதம் கொண்டு ஆடினார்.

“எளிய அகதி நாய்கள், வேலியைப் பிடுங்கிக்கொண்டு போயிருக்குதுகள். கள்ளச்சாதியள் அடுப்பெரிக்கிறதுக்கு என்ரை வேலியின்ரை கருக்கு மட்டைதான் கிடைச்சதோ.. பூதராசி அம்மாளே உந்தக் கேடு கெட்டதுகள் புழுத்துச் சாகோணும்..” என்று மண்ணை இரண்டு கைகளாலும் வாரி அள்ளி காற்றில் வீசியெறிந்து கத்தினார். அவரது குரல் எட்டு வீட்டுக்குக் கேட்கத்தக்கதாய் இருந்தது. தெருவுக்கு இறங்கினால் வீணாண பிரச்சனைகள் வருமென்று அப்பம்மா படலையை மூடிவிட்டு வந்தார். அவர் பத்மாக்கவோடு கதைப்பேச்சை நிறுத்தி நீண்ட நாட்களாயிருந்தது.

“ஆரோ, ஏலாக்கொடுவினையில ரண்டு கருக்கு மட்டையை எடுத்துக்கொண்டு போனதுக்கு இவள் பத்மா ஆடுற ஆட்டத்தைப்பார்”

tamiltigersஇப்பொழுது பத்மாக்காவின் குரல் படலையடியில் கேட்டது. “இஞ்சையும் கொஞ்சப்பேர், காசைக் கண்ட உடனை தலைகால் தெரியாமல் ஆடுதுகள். இதுகள் அதுகளுக்கு அண்ட இடம் கொடுக்கிறதாலைதான் அதுகள் தலைக்கு மேலை ஏறி ஆடுதுகள். இனி ஆரும் வேலியில கை வைக்கட்டும். அடிச்சு முறிப்பன்.”
அன்று இரவு இவனின் சித்தப்பா விறுவிறென்று பத்மாக்கா வீட்டுப்படலையருகில் சென்று“பத்மாக்கா, வெளியில வாங்கோ.. கொஞ்சம் கதைக்கோணும்” என்றார். பத்மாக்கா வரவில்லை. உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது யன்னல்களுக்கால் தெரிந்தது. சித்தப்பா படலையில் கைவைத்துத் தட்டினார். “பத்மாக்கா வெளிய வரப்போறியளோ இல்லையோ..” இதற்கிடையில் ஓடிப்போய் அப்பம்மா சித்தப்பாவின் கைகளைப்பற்றி இழுத்து வீட்டுக்கு கூட்டிவந்தார். இம்முறையும் பத்மாக்கா சித்தப்பாவிடம் முறையாக வாங்கிக் கட்டினார் என்ற செய்திக்காக காத்திருந்த இவனுக்கு ஏமாற்றமாயிருந்தது. சித்தப்பா காலையிலேயே புறப்பட்டுப்போனார். சற்றுநேரத்தில் இரண்டு இயக்கப்பெடியங்கள் சைக்கிளில் வந்து பத்மாக்காவை விசாரித்தார்கள்.

“என்ன அக்கா, சாதிப்பேருகளைச் சொல்லித் திட்டிறியளாம்”

“ச்சீச்சீ, கள்ளர் கூடிப்போச்சு தம்பியவை, நான் சும்மா பொதுவாத்தான் சொன்னனான். வேலியைப் பிய்ச்சுக் கொண்டு போட்டுதுகள். ஆருக்கும் கோபம் வரத்தானே செய்யும்”

“சரியக்கா, இனிமேல் முறைப்பாடுகள் கிடைக்காதமாதிரி நடந்துகொள்ளப்பாருங்கோ..” என்று புறப்பட்டவர்களை பத்மாக்கா தடுத்து நிறுத்தினார். “தம்பியவை, பனங்கிழங்கு போட்டிருக்கிறன். என்ரை வளவுக் கிழங்கு, நல்ல ருசியாயிருக்கும். கிழங்கு புடுங்கேக்கை மறக்காமல் வாங்கோ, உங்களுக்குத்தான்” என்றார்.

பத்மாக்கா பனங்கிழங்குகளைப் பிடுங்கிக் கொஞ்சக்காலம் வளவு சும்மா கிடந்தது. திடீரென்று ஒருநாள் ஆட்கள் கூடி மூன்றடிக்கு ஒன்றென வாழைக்கன்றுகளை அங்கு நட்டுக் கொண்டிருந்தபோது மாதகலில் இருந்து சனங்கள் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.

0 0 0

கொடிகாமத்தில், ரவியண்ணையின் வீட்டுக் கேற்றடியில் நின்றபோது உள்ளே வாழைத்தோட்டங்களோ பனங்கிழங்குப் பாத்திகளோ இருக்கலாமென இவனுக்கு ஏனோ தோன்றியது. சைக்கிளை உருட்டியபடி நுழைந்தான். அப்படியேதும் இருக்கவில்லை. மூன்று அறைகளுடன் கூடிய சிறிய வீடு அது. குசினி தனியே இருந்தது. ஏற்கனவே சனங்கள் நிறைந்திருந்தார்கள். தயங்கி நின்று திரும்பிப்பார்த்தான். இவனுக்குப்பின்னால் அம்மா, அப்பம்மா, அத்தை, ஐயாத்துரை மாஸ்டர், அவரது மனைவி, மேனகா, சீனியாச்சி, தீபன், கமலாக்கா எல்லோரும் நின்றிருந்தனர். ரவியண்ணையை யாரென்று தெரிந்திருக்கவில்லை. எட்வேர்ட் அங்கிள்தான் கைதடிப்பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக வைத்து “கொடிகாமத்தில எனக்குத் தெரிஞ்ச இடம் ஒன்றிருக்கு, நீங்கள் முதலில அங்கை போங்கோ. ரண்டொரு நாளில நான் எழுதுமட்டுவாளில இடம் ஒழுங்குபடுத்துறன்.” என்று இடம் சொல்லிவிட்டார். கொடிகாமம் சந்திக்கு சற்றுத்தள்ளிப் பிரிகிற ஒழுங்கையில் அவரது லொறி நிற்கிறது. அதற்கடுத்த வீடு.

எட்வேட் அங்கிளை எதேச்சையாகத்தான் சந்தித்தார்கள். கைதடிக்கு வரும்வரையிலும் எங்குபோவதென்ற யோசனையிருக்கவில்லை. எப்படியாவது வெளியேறிவிடவேண்டுமென்ற ஒன்றைத்தவிர. பிறகு எங்கு போவதென்று தெரிந்திருக்கவில்லை. பொழுது பட்டிருந்தது. இரவை எங்காவது சமாளித்துவிட வேண்டும். விடிந்ததும் ஏதாவது கோயிலையோ வாசிக சாலையையோ தேடிக்கொள்ளலாம்.

அம்மாதான் எட்வேட் அங்கிளைக் கண்டாள். வேலியொன்றின் ஓரமாக ஒரு பனங்குற்றியில் அமர்ந்திருந்தார். “எட்வேட் அண்ணன்.” என்று கத்தினாள். அவர் கண்டுகொண்டார். எழுந்து கைகளை விசுக்கியவாறு நடந்து வந்தார். அவருக்குச் சொந்தமான தென்னந்தோட்டமொன்று எழுதுமட்டுவாளில் இருந்தது. அதில் ஓரிடம் கேட்கலாம் என்று அம்மா நினைத்திருந்தாள்.

“வந்திட்டீங்களே, நான் என்ரை குடும்பத்தைப்பாத்துக் கொண்டு நிக்கிறன். நானிங்கை அலுவலா தோட்டத்தில நிண்டனான். அப்பதான் அறிவிச்சிருக்கிறாங்கள். இதாலதானே வரவேணும். அதுதான் நிக்கிறன். நீங்கள் எங்க தங்கப் போறியள்..” என்று கேட்டபோது அம்மா வெறுமையாக அவரைப்பார்த்தபடி மௌனமாக நின்றாள். இவன் தலையைக் குனிந்து கொண்டான். அழுகை வரும்போலிருந்தது. எட்வேட் அங்கிள் சட்டென்று சுதாகரித்துக் கொண்டார்.

“ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். ஆளையாள் மாறுப்படாமல் கொடிகாமம் சந்திக்குப் போய் நில்லுங்கோ, நான் எங்கடையாட்களையும் கூட்டிக்கொண்டு வாறன். எல்லாம் சமாளிக்கலாம்.”

“அண்ணன், எங்களோடை வேறையும் ரண்டு குடும்பம் நிக்குது” என்றாள் அம்மா. அவர் சொல்லப்போகிற பதிலுக்காக ஐயாத்துரை மாஸ்டர் ஏக்கத்தோடு நிற்பதாக இவனுக்குத் தோன்றி அது கஸ்ரமாயிருந்தது.