பெயரற்றது – சிறுகதை

“ஓம், முதலில இண்டைக்கு இரவு எல்லாரும் காலாற வேணும், மிச்சத்தை நாளைக்குப் பாப்பம். நீ எல்லாரையும் கூட்டிக்கொண்டு போ”
தொடர்ந்து நடக்கத் தொடங்கினார்கள். இன்னமும் சன நெருக்கம் குறைந்ததாய் இல்லை. இயக்கத்தின் வாகனங்கள் சனங்களை விலக்கியபடி ஓடித்திரிந்தது. இருள் மூடிப்பரந்திருந்தது. சாவகச்சேரிச் சந்தி மட்டும் இயக்கத்தின் ஏற்பாட்டில் ரியுப் லைற்றுக்களின் வெளிச்சமாயிருந்தது. அங்கிருந்த கட்டடத் தாள்வாரமொன்றில் சாந்தாக்கா காலை நீட்டி சுவரில் முதுகைச் சரித்து இருந்ததைக் கண்ட அப்பம்மா துடித்துப்பதைத்து அருகாக ஓடிப்போனா. சாந்தாக்காவின் இரண்டு வயதுக் குழந்தை பக்கத்தில் வளர்த்தப்பட்டிருந்தது. அதன் முகத்தில் அமர்கிற இலையான்களை சாந்தாக்க கலைத்தபடியிருந்தா. அப்பம்மாவைக் கண்டவுடன் முகத்தில் லேசான மலர்ச்சி பரவியிருந்தது.

“கடவுளே, வயித்தைப்பாத்தால் இண்டைக்கோ நாளைக்கோ எண்டிருக்கு, ஏனடி பிள்ளை தனிய வெளிக்கிட்டனியள், புருசன் எங்கை..”

சாந்தாக்காவும் கணவரும் ஊரில் தனியத்தான் இருந்தார்கள். சொந்த இடம் தெரியவில்லை. நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் சாதி மாறி ஓடிப்போய் கல்யாணம் கட்டினார்களென்றும், அதனால் இரண்டு வீட்டிலும் அவர்களை அண்டுவதில்லையென்றும் இவன் கேள்விப்பட்டிருந்தான். அதன்பிறகே இவர்களது ஊருக்கு குடிபெயர்ந்திருந்தார்கள். சாந்தாக்காவின் அண்ணன் “அவளை வெட்டிப்போட்டுத்தான் என்ரை தாடியை வழிப்பன்” என்று சாமியார் போல தாடி வளர்த்துத் திரிந்தாராம்.

அப்பம்மா சாந்தாக்காவை ஆதரவாகப் பற்றினா. “பிள்ளைக்கு பால் குடுக்க வேணும். அவர் எங்கையாவது சுடுதண்ணி எடுத்துவரப்போட்டார். நாள் முழுக்க ஒண்டும் குடிக்கேல்லை. பசிக்களையில அழுது அழுது படுத்திட்டுது..” சாந்தாக்கா தலையைக்குனிந்து அழுதா. வார்த்தைகள் அழுகையில் சிக்குப்பட்டு திக்கித் திணறி வந்தன.

“நீ எழும்பி எங்களோடை வா, எங்களுக்குக் கிடைக்கிற திண்ணையில ஒரு துண்டை உனக்கும் தந்தால் ஒண்டும் குறைய மாட்டம். மெதுவா எழும்பு. உனக்கு எப்ப திகதி..”
சாந்தாக்காவின் கணவர் பிளாஸ்ரிக் சோடாப் போத்தலொன்றில் சுடுதண்ணீர் கொண்டு வந்தார். போச்சிப் போத்தலில் மா விட்டுக் கலக்கி குழந்தையின் வாயில் வைக்கவும் அது அவசர அவசரமாக உறிஞ்சத் தொடங்கியது. “சரியான பசி..”

சாந்தாக்கா சுவரையும் அப்பம்மாவின் தோளினையும் பற்றி எழுந்து கொண்டார். சற்றுத்துாரம் நடப்பதுவும் பிறகு முழங்கால்களில் கைகளை ஊன்றி நின்று மூச்சுவாங்குவதுமாக நிறையச் சிரமப்பட்டார். அவரைப்பார்க்கப் பாவமாக இருந்தது. வருகிற வழியில் நாவற்குழிக்குக் கிட்டவாக யாருக்கோ வீதியில் குழந்தை பிறந்திருந்ததாம். அதே வீதியில் ஒரு கிழவி செத்துப்போனதாம். அருகிலேயே குழிதோண்டிப் புதைத்தார்கள் என்று பேசிக்கொண்டார்கள்.

கொடிகாமத்துச் சந்திக்கு வந்தபோது ஐயாத்துரை மாமி தலையிலடித்துக் குளறத்தொடங்கினா. “எடியே மேனகா, உன்ரை கொய்யாவைக் காணேல்லையடி.. ” என்றபடி அவ வீதியோரத்தில் இருந்தா. இவன் சுற்றும் முற்றும்பார்த்தான். ஐயாத்துரை மாஸ்டரைக் காணவில்லை. சாவகச்சேரியிலிருந்து புறப்பட்டபோது இவனுக்குப் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தார். இருட்டியிருந்ததாலும் வீதி முழுவதும் சனங்களால் நிரம்பியிருந்ததாலும் இவர்கள் ஒருவரையொருவர் கூப்பிட்டபடியே வரிசையில் நடந்துகொண்டிருந்தனர்.

“தீபன்.. தீபன்.”

“ஓமோம்.. ஓமோம்..”

“பூரணமாச்சி.. பூரணமாச்சி..”

“ஓம் பிள்ளை.. ஓம் பிள்ளை..”

ஒருதடவை இன்னொரு தீபனும், இரண்டு தடவைகள் வேறிரு பூரணமும் இதற்குள் உள்ளிடப்பார்த்தார்கள். “ஐயா மாஸ்டர், ஐயா மாஸ்டர்..” என்று இவன் கத்தினான். “என்னங்கோ, இஞ்சேருங்கோ..” என்று மாமி கிட்டத்தட்ட அழுகிற நிலைக்கு வந்திருந்தா. “கடவுளே, நான் என்ன செய்வன், மனிசனிட்டைத்தானே காசு நகைகளும், வீட்டு உறுதியும் கிடக்கு. படிச்சுப் படிச்சுச் சொன்னனான். முன்னுக்கு வாங்கோ எண்டு. அலமலாந்திக்கொண்டு நிண்டு துலைஞ்சு போச்சுது..” மாமி கணவருக்காக அழுகிறாவா அல்லது வீட்டு உறுதிக்கும் நகைக்கும் பணத்திற்கும் கவலைப்படுகிறாவா என்று இவனுக்குத் தோன்றிய போது சிரிப்பு வந்தது.

கொடிகாமம் சந்தியில் காணாமற் போனவர்களைப் பற்றிய அறிவிப்புக்களை இயக்கம் செய்து கொண்டிருந்தது. மினி பஸ் ஒன்றிலிருந்து சந்தியில் பொருத்திய ஒலிபெருக்கிகளுக்கூடாக வழியில் தவறிய மனிதர்களின் பெயர்களும் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகளும் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தன. பெரும்பாலும் முகவரிகளாக பஸ் ஸ்ரான்டுகளும், கோயில்களுமே இருந்தன. இவனும் சாந்தாக்காவின் கணவரும் அங்கு போனபோது இயக்கப்பாடலொன்று “ஓடு.. ஓடு.. ஓடு.. நீயும் ஓய்ந்து விட்டால் வரும் கேடு..” என ஒலித்தபடியிருந்தது. அவர் இவனைத் தட்டி “நாசமாப்போவார், போடுற பாட்டைப்பார்..” என்றார்.

விபரங்களைக் கொடுத்தார்கள். ஓய்வுபெற்ற அதிபர் ஐயாத்துரை அவர்கள் எங்கிருந்தாலும் கொடிகாமம் சந்திக்கருகில் வரவும் என இரண்டு தடவைகள் அறிவித்தார்கள். பின்னர் அதே தகவலை வோக்கி டோக்கியில் சாவகச்சேரிக்கு அறிவித்தார்கள். ஓய்வு பெற்ற அதிபர் ஐயாத்துரையின் குடும்பத்தினர் கொடிகாமம் சந்தியில் அவருக்காக காத்து நிற்கின்றனர் என்ற அறிவிப்பு சாவகச்சேரி சந்தியில் ஒலித்துக் கொண்டிருந்தபோது ஒரு பஸ் தரிப்பிடத்தில், நகையும் காசும் உள்ள பையைச்சுற்றி கோவணத்திற்குள்ளும், வீட்டுப்பத்திரத்தை தலைமாட்டிலுமாக வைத்தபடி ஐயாத்துரை மாஸ்டர் க்ர்.. புர்.. என்று குறட்டைவிட்டுத் துாங்கியபடியிருந்தார்.

கடைசிவரை அவரைக் கண்டுபிடிக்க முடியாமல், இவர்கள் எட்வேட் அங்கிள் சொன்ன இடத்திற்கு வந்திருந்தார்கள். எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. இவனுக்கு தண்ணீர் தாகமாயிருந்தது. உள்ளேயிருந்து வந்த ஒருவரிடம் “இங்கை ரவியண்ணை எண்டது…” என்று தயங்கி இழுத்தான்.

“நான்தான், சொல்லும்..”

“எட்வேட் அங்கிள் எங்களை இங்கை போகச் சொன்னவர். தான் பிறகு வாறனெண்டு..”

“ஓ.. உள்ளை வாங்கோ, எல்லாரும் வாங்கோ..” ரவியண்ணை முகம் மலர வரவேற்றார். பொதிகளை இறக்காமல் சைக்கிளை வேலியோரமாக நிறுத்திவிட்டு விறாந்தையில் இருந்து கொண்டார்கள். சாந்தாக்கா துாணைப்பிடித்தபடி மெதுமெதுவாக உட்கார்ந்தார். இவன் சுற்றும் முற்றும் பார்த்தான். இவனது கணக்குக்கு ஐம்பது பேரளவில் நிறைந்திருந்தார்கள். அறைக்குள்ளிருந்து கிருஷாந்தியும் தமிழினியும் வெளியே வந்ததைக் கண்டான். சட்டென்று மனம் குளிர்ந்ததைப் போலிருந்தது.

அப்பம்மா அவசர அவசரமாக அரிசி மாவிற்குள் சீனியும் தண்ணீரும் விட்டுக் குழைத்துக் கொடுத்தா. சாப்பிடப் பிடிக்கவில்லை. ஆனால் வயிறு பசியிலிருந்தது. இரண்டு மூன்று உருண்டைகளை விழுங்கினான்.

ரவியண்ணை சாந்தாக்காவிற்கு கட்டிலொன்று ஏற்பாடு செய்தார். இவனுக்கும் தீபனுக்கும் கட்டுவதற்கு சாரம் தந்தார். “முதல்லை எல்லாரும் படுத்தெழும்புங்கோ, விடியப்பாப்பம்..”

இருபத்தியாறு மணிநேரம் நடந்த களைப்பில் எல்லோரும் அடித்துப் போட்டதைப்போன்று துாங்கினார்கள். அன்றைக்கு உறக்கம் வராமல் இருந்ததென்றால் இவனும் ஐயா மாமியும்தான். அவருக்கு கணவரைப்பற்றியோ அல்லது வீட்டுக் காணி உறுதியைப்பற்றியோ கவலை. இவனுக்கு தீபன் மேலே காலைப் போட்டு படுத்திய ஆக்கினை. இடுப்பில் தளர்ந்து தளர்ந்து சரிகிற சாரத்தை செருகியும் இறுக்கியுமாக இரவு நகர்ந்து விடிந்தபோது எல்லோருக்கும் ரவியண்ணையின் மனைவி சுடச்சுட கோப்பி கொடுத்தார்.

0 0 0
பத்மாக்காவிற்கும் சித்தப்பாவிற்கும் இடையில் ஒரு கோப்பியினால்தான் சண்டை மூண்டது. சோனாவாரி மழையொன்றிற்கு வேராடு சாய்ந்த பத்மாக்காவின் பின்வளவுப் புளியமரத்தினை ஆட்களை வைத்து அவர் தறித்து விறகுகளாக்கினார். அன்றைக்கு காலை “நேசன், ஒருக்கா வா, ஆளும் பேரும் சேந்தா கெதியில முடிக்கலாம்” என்ற போது சித்தப்பா போயிருந்தார். பத்மாக்கா ஆட்களை அழைப்பதே, அதட்டுவதைப் போலிருக்கும். அப்பம்மாவைக் கூட “பூரணம், இங்கை வா..” என்றுதான் கூப்பிடுவார்.

எல்லோருமாக மரத்தைத் தறித்துத் துண்டாக்கினார்கள். மழை இலேசாகத் துாறியபடியிருந்தது. மத்தியானம் நெருங்கிய போது கேத்தலில் கோப்பியைக் கொண்டுவந்த பத்மாக்கா புத்தம் புதிய சிரட்டைகளில் அதனை வார்த்து ஆட்களுக்குக் கொடுத்த கொஞ்ச நேரத்தில் திடுதிடுப்பென்று சித்தப்பா வீட்டுக்கு வந்தார். பின்னாலேயே பத்மாக்காவும் வந்தா.

“எளிய வடுவா, கோப்பி குடுத்தால் அதை என்ரை மூஞ்சையில ஊத்திப்போட்டுப் போவீரோ.. உங்களுக்கெல்லாம் எப்ப வந்த கெப்பம். என்ரை புரியனுக்கு முன்னால வாயையும் சூத்தையும் பொத்திக்கொண்டு திரிஞ்சதுகள் எல்லாம் இண்டைக்கு தலையெடுத்துத் திரியுதுகள். ஐயோ என்ரை ராசா.. நீர் போன பிறகு ஒரு நாய்ச்சாதியும் என்னை மதிக்குதுகள் இல்லை..” என்று நடு முற்றத்தில் நின்று ஒப்பாரி வைத்தா. சித்தப்பாவைத் திட்ட வந்த இடத்தில் கணவருக்கும் சேர்த்து ஒப்பாரி வைப்பது இவனுக்கு விசித்திரமாயிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு அங்கு நின்று கத்தியவர் பிறகு “பூதராசி அம்பாளே, உதுகள் புழுத்துப் போக..” என்று இரண்டு கைகளையும் மேலே உயர்த்திச் சாபமிட்டார். பிறகு போய்விட்டார்.

“என்ன இருந்தாலும் இவள் பத்மா இப்படிச் செய்திருக்கக் கூடாது. மூக்குப் பேணியில எண்டாலும் கோப்பியைக் குடுத்திருக்கலாம்” என்ற அப்பம்மா சித்தப்பாவிடம் திட்டு வாங்கினா. “ஏன், ரம்ளரில தந்தால் என்ன. உப்பிடியே நீங்களும் கூழைக்கும்பிடு போட்டு அவ சொன்னமாதிரி புழுத்துப் போங்கோ..”

அன்றைக்கு இரவு சித்தப்பா இவனிடம் சொன்னார். “நான் கோப்பியை முகத்தில ஊத்தவில்லை. நிலத்திலதான் ஊத்திப்போட்டு வந்தனான். ஆனால் இப்ப நினைக்கிறன். சுடச்சுட மூஞ்சையில ஊத்தியிருக்கோணும்.”

அன்றைய நாளுக்குப் பிறகு பத்மாக்கா கதை பேச்சை நிறுத்திக் கொண்டார். காண்கிற இடங்களில் பெரும் சத்தத்தில் காறி நிலத்தில் உமிழ்ந்தார். இவனைக் காண்கிற போதெல்லாம் “எளியதுகள்” என்ற வார்த்தை தவறாமல் அவரிடமிருந்து வரும். சித்தப்பாவிற்கும் அவவுக்குமிடையில் முறுகல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அடுத்து வந்த காலங்களில் சித்தப்பா இயக்கத்திற்குப் போனார். அப்பொழுது கண்ட இடங்களில் காறித்துப்புவதை பத்மாக்கா நிறுத்தினார். நான்கைந்து வருடங்களில் பஜிரோ ஒன்றில் சித்தப்பா வீட்டுக்கு வந்தபோது வாயெல்லாம் பல்லாகச் சிரித்த பத்மாக்கா “நேசன் தம்பி, எப்பிடி சுகமாயிருக்கிறீரோ.. கட்டாயம் ஒருக்கா வீட்டுக்குச் சாப்பிட வரவேணும்” என்றார்.

சித்தப்பா இவனுக்குச் சொன்னார். “போராட்டம் எல்லாவற்றையும் மாற்றும்..” ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று இவன் நம்பத் தலைப்பட்டான்.

0 0 0

ரவியண்ணை வீட்டில் மேனகா சாமத்தியப்பட்டுவிட்டாள். அன்றைக்கு காலை ஐயாத்துரை மாஸ்டர் ஓவென்று அழுதது இவனுக்கு எரிச்சலை ஊட்டியது. “சனியனே, உனக்கு நேரம் காலம் தெரியாதோ.. இப்ப இது தேவையோ.. தேவையோ” என்று மேனகாவின் முதுகில் அடிக்கத்தொடங்கிய போது ஆட்கள் அவரை மறித்துக் கொண்டார்கள். ஐயா மாமி மேனகாவை தனக்குள் அணைத்துக் கொண்டார். அவள் அழுது கொண்டிருந்தாள். இப்பொழுது ஐயாத்துரை “ஐயோ.. நான் என்ன செய்வன், நான் என்ன செய்வன்..” என்று தன் தலையில் அடித்து அழத்தொடங்கினார்.